Thursday, November 5, 2009

மகளிராக வந்தது மகேசனே





வியாசர் தனது மகன் சுக பிரம்மத்துடன் வேறு ஒரு இடத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்..

இவர்களை பற்றி சில தகவல்களை பார்ப்போம்...

வேதங்கள் அனைத்தையும் நான்காக தொகுத்தவரும், பதினெட்டு புராணங்களை அமைத்தவரும் வியாசர். மகாபாரதத்தை இவர் உருவாக்க எழுத்து பணியை (Script Writing ) செய்தது விநாயகர் என்பதன் மூலம் இவரின் ஆன்மீக நிலை விளங்கும்.

சுக பிரம்மா மஹரிஷி தனது தந்தை வியாசரை காட்டிலு உயர் நிலையில் இருப்பவர். பரப்பிரம்ம சொரூபமகவும் அவதூதரகவும் கோலம் கொண்டவர்.(அவதூத நிலை என்பது எப்பொழுதும் இறை அனுபூதியில் திளைத்த நிர்வாண நிலை- இதற்கு பகவான் ரமண மஹரிஷி ஒரு உதாரணம் )

வியாசர் அவரின் கமண்டலம் , ஆசனம் மற்றும் யோகா தண்டம் ஆகியவற்றுடன் நடந்து கொண்டிருந்தார். சுக பிரம்மமோ ஆடை எதுவும் இல்லாமல் , முழுவதும் மழித்த தலை கைகளில் எந்த பொருளும் இல்லாத நிலையில் அவருடன் நடந்து கொண்டிருந்தார் அல்லது அவர் "உடல் நடந்தது" என்றும் சொல்லலாம்.

வழியில் ஒரு சிற்றோடை குறுகிட்டது , அதை கடக்க ஒரு சிறு பாலமும் இருந்தது.

ஆற்றில் சில பெண்கள் குளித்து கொண்டிர்ந்தார்கள்.

ஒருவர் மட்டுமே நடக்கும் வகையில் பாலம் இருந்ததால் முதலில் சுக பிரம்மத்தை கடக்க சொல்லி விட்டு பின்பு வியாசர் ஆற்றை கடந்தார்.

ஆடை எதுவும் இல்லாத நிலையில் ஒருவர் தங்களை கடந்து செல்வதை பார்த்த பெண்கள் இயல்பாக இருந்தார்கள். ஆனால் வியாசர் பாலத்தை கடக்கும் பொழுது தங்கள் கைகளாலும் சிலர் ஆடையாலும் தங்களை மூடி கொண்டனர்.

இதை கண்ட வியாசருக்கு குழப்பம் , இவர்கள் செய்யும் செய்கை நேர்மாறாக இருக்கிறதே என குழம்பினார்.

"மாலவனுக்கு படைக்கும் மலரை போன்ற மங்கையரே, நிர்வாண நிலையில் செல்லும் எனது தமயனை பார்த்து நாணம் அடையாத நீங்கள், என்னை பார்த்து உங்கள் உடலை மறைத்து கொண்டதன் மாயமென்ன? " என கேட்டார் வியாசர்.

அந்த மங்கையர்கள் தங்கள் உடலை மறைத்த வண்ணம் வியாசரை பார்த்து கூறினார்கள்..." முனிவரே , அவர் அனைத்தையும் துறந்தால் அவருக்கு நாங்கள் நாணம் அடைய வில்லை எங்களுக்கு அவர் அன்னியராக தெரியவில்லை. நாங்கள் அவரை எங்களுள் ஒருவராகவே பார்த்தோம்.

ஆனால் நீங்கள் ஆடை தரித்து உங்களுக்கு நாணம் மற்றும் பெற உணர்வுகள் உண்டு என வெளிப்படுத்துகிறீர்கள். மேலும் உங்கள் கைகளில் சில பொருட்கள் உங்களை பற்று உள்ளவராக காட்டுகிறது. இவ்வாறு இருக்க நாங்கள் நாணம் அடையாமல் இருக்க முடியுமா?" என கேட்டனர்.

வியாசர் தன் சுய தன்மையை உணர்ந்தார் . ஆற்றை கடந்து மறுபுறம் சென்றதும் தனது கமண்டலம், ஆசனம், ஆடை மற்றும் யோக தண்டத்தை ஆற்றில் எறிந்தார். தானும் ஒரு அவதூதரக மாறினார்.

தனக்கு இத்தகைய ஞானத்தை வழங்கிய மகளிரை கண்டார். அங்கு வெறும் சிற்றோடை மட்டுமே இருந்தது. மகளிராக வந்தது மகேசனே என மகிழ்ந்தார்.

இரு அவதூதர்களும் ஞானத்துடன் பயணத்தை தொடர்த்தனர்.


http://vasukimahal.blogspot.com/