Thursday, September 2, 2010

மாதவிலக்கு... பிரச்சினைகளும் தீர்வுகளும்.!

மாதவிலக்கு... பிரச்சினைகளும் தீர்வுகளும்.!


பெண்களிடம் இருந்து, எனக்கு வரும் மின்னஞ்சல்களில் பலரும் இந்த பிரச்சினை குறித்தான ஆலோசனைகளைக் கேட்டிருந்தனர். அவர்களுக்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறேன்.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது பெண்களின் உடற்கூறியலில் தவிர்க்க இயலாதது. இது தாய்மையின் அம்சம் என்றாலும் பெரும்பாலான பெண்களுக்கு அது வலியும்,துயரும் நிறைந்த அனுபவமே! இந்த கால கட்டத்தில்தான் பெண்கள் உடலியல் மற்றும் மனவியல் ரீதியாக வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என்பதே உண்மை.

முந்தைய காலங்களில் மாதவிலக்கு சமயத்தில் எந்த வேலைகளையும் செய்ய விடாது பெண்களுக்கு பூரண ஒய்வு கொடுப்பார்கள். இதை மூடநம்பிக்கை அல்லது பெண்களுக்கு எதிரான அநீதி என்கிற விமர்சனம் இருந்தாலும் கூட, உடலியல் ரீதியாக இந்த ஓய்வு தரும் நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய அவசர உலகத்தின் பரபரப்பான வாழ்க்கைச் சூழனினால், பெண்கள் சந்திக்கும் தலையாய பிரச்சினை மாதவிலக்கு தடைப்படுதல் அல்லது சுழற்சி காலம் தள்ளி போதல். இந்த தடைபடுதல் என்பது சிலருக்கு மாதக் கணக்கில் கூட தள்ளிப் போகலாம்.இது தவிர கூடுதல் உதிரப் போக்கும் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சினை.

மாதவிலக்கு காலங்களில் சரியான ஓய்வு இல்லாவிடில், மாதவிடாய் தடைப்படுதலும், மகப்பேறு காலங்களில் சுகப்பிரசவமின்மையுமாகும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கான சில தீர்வுகளையும் சித்தர்கள் அருளியிருக்கின்றனர்.

மாதவிலக்கு தடைப்படுதல் அல்லது தள்ளி போகுதல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள்.....மாவிலங்கம் பட்டை, உள்ளி , மிளகு இவைகளை சம அளவு எடுத்து நன்கு அரைத்து தினமும் காலையில் ஒரு பாக்கு அளவு மூன்று நாள் சாப்பிட மாதவிடாய் உண்டாகும்.

கொடிவேலி இலையைப் பசும்பாலில் வறுத்தெடுத்து அதனுடன் கொட்டைப்பாக்கு , குன்றிமணி இவற்றை சேர்த்தரைத்து புனைக் காய் அளவாக எடுத்து அதற்க்கு சம எடை அளவில் சர்க்கரை சேர்த்து மூன்று நாள் சாப்பிட மாதவிலக்கு ஏற்படும்.

மாதவிலக்கு வாரக்கணக்கில் நீடித்தல் அல்லது கூடுதல் உதிரப் போக்கினை கட்டுப் படுத்த அகத்தியர் கூறும் சுலப மருந்து....

மான்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து வெய்யிலில் நன்கு உலர்த்தி, தூளாக்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், மூன்று தினங்கள் காலை,மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை, தேனில் குழைத்து சாப்பிட மாதவிலக்கு நிற்பதுடன், உதிரப் போக்கும் குறையுமாம்.

மாத விலக்கு நாட்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி மற்றும் கூடுதல் உதிரப் போக்கினை கட்டுப் படுத்த "பிரண்டை உப்பை" ரெண்டு குன்றி மணியளவு எடுத்து வெண்ணெய்யில் குழைத்து ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்ண குணமாகுமாம்.இதை மாத விலக்கு உள்ள நாட்களில் தினமும் மூன்று வேளையும் உண்ணலாம் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் "தாய்மை" அடைதல் பற்றிய சித்தர்களின் குறிப்பினை பகிர்ந்து கொள்கிறேன்...