Thursday, September 2, 2010

கருவறையில் குழந்தையின் வளர்ச்சி!

கருவறையில் குழந்தையின் வளர்ச்சி!


நேற்றைய பதிவினை குறித்து, மின்னஞ்சல் வாயிலாக பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வலைப் பதிவானது எனது முயற்சி என்பதை விட, மேலான குருவின் சித்தமாகவே கருதுகிறேன். அவரின் அன்பினாலும், ஆசியாலுமே இதெல்லாம் சாத்தியமாகிறது.

 

அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்" என்ற தனது நூலில், பாடல் எண் 23-29 ல், கருவுற்ற தினத்திலிருந்து பத்து மாதம் வரையிலான குழந்தையின் வளர்ச்சியினைப் பற்றி தெளிவாக கூறியிருக்கின்றார். இன்றைய அலோபதி மருத்துவம் பல்வேறு ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கூறியதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்திய மாமுனிவர் தனது ஏழு பாடல்களில் உரைத்திருக்கிறார்.

 

இந்த பூவுலகில் மானிடர்கள் பிறக்கும் வழியை கூறுகிறேன் கேள் என ஆரம்பித்து பின் வருமாறு கூறுகிறார்....

 

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால் பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று வளரத் துவங்கி இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார்.

 

முதல் மாதத்தில் முளை போல தோன்றி பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகும். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகும், மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகி நான்காவது மாதத்தில் மூக்கு உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காத்து உண்டாகும் என்கிறார்.

 

ஆறாவது மாதத்தில் காதுடன் மூக்கும் நன்கு வளந்திருக்கும். ஏழாவது மாதத்தில் மல சலங்கள் வெளி வருவதற்கான துவாரம் உண்டாகும். இந்த சமயத்தில்தான் மூளையும் உண்டாகும். அம்மாதத்திலேயே நரம்புகள், குடல்கள், தொப்புள், கை கால்கள் உண்டாகும். எட்டாவது மாதத்தில் தலை ரோமம் வளரும் , உடலுக்கு பலம் உண்டாகும்.

 

கருவிற்கு தேவையான உணவுச்சத்துக்கள் அதன் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கும். ஒன்பதாவது மாதத்திலேயே தன்னை அறியும் அறிவு உண்டாகும். அத்துடன் கருவைச் சுமக்கும் தாயினால் உள்ளிருக்கும் சிசுவிட்கும் நோய் உண்டாகும். இதனால் தன் உயிரை நினைத்து தவமிருக்கும் நிலையில் கைகள் இரண்டையும் அருள் வேண்டி தொழும்.

 

பத்தாவது மாதத்தில் அபான வாயுவின் உந்துதலால் சிசு வளர பாதுகாப்பாக இருந்த பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு தாயின் வயிற்றிலிருந்து தலை கீழாக இவ்வுலகில் பிறக்கும். பிறந்ததும் திகைத்து, நொந்து அயர்ந்து தூங்குவது போல தோன்றும் இதுவே மானிட பிறப்பின் ரகசியமும் பத்துமாத வளர்ச்சியும் ஆகும் என்கிறார்.

 

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா....!

 

அடுத்த பதிவில் பெண்களுக்கான பொதுவான சில முக்கிய உடல் நல குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.