Tuesday, March 29, 2011

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!‏

ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை.


மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருந்தார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தார். ஏற்கெனவே ஜெபத்தில் மூழ்கியிருந்த துறவிகளில் ஒருவர் ஜெபத்தை  முடித்து விட்டு வேறு ஒரு வேலைக்காக  ஆற்றின் மறுகரைக்குச் செல்லவேண்டியிருந்தது. எனவே அவர் ஆற்றுக்குள் இறங்கி விடுவிடென்று நடக்க ஆரம்பித்தார்.


அவருடன் செல்வதற்காக இன்னொரு துறவியும் நீருக்குள் இறங்கி முதலில் செல்லும் துறவியைப் பின்தொடர்ந்தார்.


இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளம் துறவிக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை. இவ்வளவு வேகமாக ஆற்றில் தண்ணீர் ஓடும்போது எப்படி படகின் உதவியில்லாமல் மறுகரைக்குச் செல்ல முடியும்? அதுவும் இவ்வளவு வேகமாக நடப்பதற்கு இதுவரை நேரம் செய்த ஜெபம் தான் உதவியிருக்கின்றது போல இருக்கின்றது. நானும் தானே ஜெபம் செய்தேன்; அவர்களால் ஆற்றுக்குள் இறங்கி நடக்க முடியுமென்றால், ஏன் என்னால் முடியாது? இவ்வாறு யோசித்து விட்டு, பின்விளைவுகளைப் பற்றிய சிந்தனை சிறிதுமின்றி வேகமாக ஓடும் தண்ணீரில் கால் வைத்ததும், ஆற்றின் எதிர்நீச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், அடித்துச் செல்லப்பட்டார்.


கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு துறவி, அய்யயோ, ஆற்றுக்குள் எந்த இடங்களில் தடம் பதித்துச் செல்வதற்கேற்ற வகையில் கற்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், அவசரப்பட்டு இறந்து போய் விட்டானே என்று பரிதாபத்தில் கண்ணீர் விட்டார்.

எவ்வளவுதான் திறமையானவர்களாக  இருந்தாலும்,
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி சிந்திக்காத அறிவினால் எந்தப் பயனுமே இருக்காது.