Sunday, March 20, 2011

நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம்

நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம்

 

ஒரு ஊருக்கு ஒருமுறை ஞானி ஒருவர் வந்திருந்தார். ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர்.

 

செல்வாவும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார். மேலும் அவரிடம் தனக்கு எதாவது அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றும் அதுவும் இப்பொழுதே கிடைக்க என்ன செய்வது என்றும் கேட்டார். அதற்கு அந்த ஞானி "போய் ஒரு கழுதையைப் பார்" என்று கூறினார்.

 

செல்வாவும் கழுதை எங்கு உள்ளது என ஊரில் விசாரித்தார். பக்கத்தில் உள்ள குட்டிச்சுவற்றில் கழுதை இருக்கும் என சிலர் கூறினர்.

 

கழுதை இருப்பதாகச் சொன்ன இடத்திற்குச் சென்ற செல்வா அங்கே கழுதை பின்பக்கமாக நின்றிருப்பதைக் கண்டார். கழுதையின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பதால் அதனது வாலைப் பிடித்து இழுக்கலாம் என்று வாலைப் பிடித்தார். ஆனால் அது சடீரென செல்வாவை பின்னங்கால்களால் உதைத்து விட்டு ஓடத் துவங்கியது. செல்வா இந்த அடியை எதிர்ப்பார்த்திருக்க வில்லை.

 

அதன் திடீர்த் தாக்குதலில் நிலைகுழைந்த செல்வா இரண்டடி தள்ளி விழுந்தார். அந்த வலியில் கழுதையைப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டார். மேலும் அந்த ஞானி மீது கோபம்கோபமாக வந்தது. 

 

நேராக ஞானியிடம் சென்றவர் "கழுதையப் பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்றீர் , ஆனால் அது உதைத்து எனக்கு ரத்தம் தான் வருகிறது" என்றார். இதைகேட்ட ஞானி "அதிர்ஷ்டம் என்பதைத் தேடிப்போனால் இப்படித்தான், நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம்" என்றார் சாந்தமாக.