Saturday, March 26, 2011

ஒரே இலக்கு தொடர்முயற்சி = தொழிலில் வெற்றி

ஒரே இலக்கு தொடர்முயற்சி தொழிலில் வெற்றி

 

"குருவே, எனக்கு எந்த வேலையும் சரிபட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்திலேயே முடிகிறது" என்று கவலையோடு சொன்னவரிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.

 

"ஏன் உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?" என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களைப் பட்டியலிட்டான்.

 

"பாருங்க குருவே, இத்தனை தொழில் செய்தும் எதிலும் எனக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கலே."

 

வந்தவனின் குறைபாடு குருவுக்குப் புரிந்த்து. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

 

"ஒருவனுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் கிணறு வெட்டக் கிளம்பினான். கிணறு வெட்ட இடம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த பெரியவர் ஒருவர், ஒரு இட்த்தை சுட்டிக் காட்டி அங்கு கிணறு வெட்டச் சொன்னார். அவனும் அங்கு தோண்ட ஆரம்பித்தான்.

 

சிறிது ஆழம் தோண்டியிருப்பான், அந்தப் பக்கமாய் போன வழிப்போகன் ஒருவன், 'அங்கே ஏம்பா தோண்டறே, அங்கெல்லாம் பாறைதான் ஜாஸ்தி, இந்த இடத்திலே தோண்டு" என்று வேறு இடத்தை காட்டிவிட்டு போனான். நம்ம ஆள் உடனே அங்கே தோண்ட ஆரம்பித்தான்.

 

அப்போது அந்த வழியே போன இன்னொருவன் அவனை வேறு இடத்தில் தோண்டச்  சொல்ல, மீண்டும் இடத்தை மாற்றினான். இப்படியே ஒருமாத காலம் போனது. ஒவ்வொருவர் பேச்சைக்கேட்டு கேட்டு இடங்களை மாற்றிக் கொண்டிருந்த்தில் அவன் எந்த இடத்தையும் முழுமையாகத் தோண்டி இருக்கவில்லை.

 

அந்த சமயம் முதலில் வந்த பெரியவர் அந்தப் பக்கம் வந்தார். அவனுடைய குழப்பத்தை உணர்ந்தார். "இப்படி மாறி மாறி தோண்டியதற்க்குப் பதில் அந்த உழைப்பை ஒரே இடத்தில் காட்டியிருந்தால் நல்ல நீர் சுரக்கும் கிணறு உனக்குக் கிடைத்திருக்கும்" என்றார்.

 

இந்தக் கதையை குரு சொல்லி முடித்தபோது எந்தத் தொழிலையும் தான் முழுமையாக செய்யாமல் பாதியிலேயே விட்ட்து வந்தவனுக்குப் புரிந்த்து.

 

இலக்குகளை மாற்றிக் கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது!

உழைப்பை ஒரே இடத்தில் காட்டியிருந்தால் வெற்றி வந்திருக்கும்!!