Tuesday, April 19, 2011

கால்களைச் சரிவரக் கவனித்தால்.....

திரும்பத் திரும்ப கால்கள், கால்கள் என்று சொல்கிறாரே என்று பார்க்காதீர்கள். கால்களைச் சரிவரக் கவனித்தால், உடம்பின் ஒட்டுமொத்த பாகங்களையும் கவனித்துக்கொண்ட மாதிரி! காரணம், நம்முடைய கால்களுக்கும் உடம்பின் அனைத்துப் பாகங்களும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பாதங்களின் ஒவ்வொரு பகுதியையும் இதமாகப் பிடித்துவிடுகிறோம்; விரல்களைச் சொடுக்கெடுத்து, மென்மையாக வருடிக் கொடுக்கிறோம். முதுகின் தண்டுவடப் பகுதிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல், கைகளைக் கொண்டு தடவிக் கொடுக்கிறோம்.

இவையெல்லாம் என்னென்ன நன்மைகளை நமக்குத் தருகின்றன தெரியுமா?

காலின் கட்டைவிரலில் ஆணிக்கால் வருகிற இடத்தின் மையப்பகுதி, தலை, சைனஸ், கழுத்து, தைராய்டு எனப்படும் சுரப்பிகளுடன் தொடர்புகொண்ட பகுதி.

சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி, கைப்பகுதிகளுடனும் அதையடுத்த பகுதி தோள்பட்டைகளுடனும் தொடர்புகொண்டது.

பாதத்தின் விரல்களில் இருந்து முக்கால் பகுதிக்கு வந்துவிட்டால், பெருங்குடல் மற்றும் மலக் குடல் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாகிவிடுகிறது. இவை வலது பாதத்துக்கானது!

இடது பாதத்தின் நான்கு விரல்களுக்கும் கீழுள்ள பகுதி, நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டது. பாதத்தின் நடுப்பகுதி, வயிறு மற்றும் மண்ணீரலுடன் சம்பந்தம் கொண்டிருக்கிறது. பாதத்துக்கு மேலேயுள்ள மணிக்கட்டு, கருப்பை, பிறப்புறுப்பு, கீழ் இடுப்பு, நிணநீர்ச் சுரப்பி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.

பாதங்களில் செய்யப்படுகிற பயிற்சிகளால், கால்கள் பலம் அடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல் வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல்,

நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

முதுகெலும்பை வருடிக்கொடுப்பதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் புத்துணர்சி பெறுகின்றன. மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் சீரடைதல் எனச் செயல்பாடுகள் செவ்வனே அமைகின்றன.

உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாசப் பைகள், குடல், மூளை, சுரப்பிகள் போன்றவை சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. செரிமானக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படும்.

மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் இருக்கும்; மனச்சிக்கல் இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும் என்பார்கள். எனவே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டால், உடலின் எந்தப் பகுதியிலும் சிக்கல் ஏதும் வராமல் தடுத்துவிடலாம்.

ஆக, கால்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. கால்கள்தானே என்று கால்வாசி, அரைவாசி ஈடுபாட்டை மட்டும் காட்டினால், அவை முழுவதுமான பயன்களை நமக்கு வழங்காது. அரைகுறையாகச் செயல்பட்டதை 'பாதிக் கிணறுதான் தாண்ட முடிஞ்சுது' என்று சொல்வோம், இல்லையா? அப்படி பாதிக் கிணறு தாண்டினால், முடிவு... அந்தக் கிணற்றிலேயே விழவேண்டியதுதான். எனவே, முழுமையான செயல்பாடு ரொம்ப முக்கியம்.

அன்பர்களே! கால்களைக் காதலியுங்கள்; உங்கள் குழந்தைகளைப் போல் நல்லவிதமாகப் பராமரியுங்கள்; உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டுகிற கனிவையும் அன்பையும் கால்களிடமும் காட்டுங்கள்.

கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால், அது ஆபத்துக் காலங்களில் நம்மைக் கை கொடுத்துக் காப்பாற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

அடுத்து... வஜ்ராசனம் பற்றிப் பார்ப்போம்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒரு விஷயம்.

எந்தவொரு ஆசனத்தையும் குருவின் உதவியோடு செய்வதே உத்தமம். ஒரு விஷயத்தைக் கட்டுரையாகச் சொல்வது எளிது. உரிய படங்களைக் கொண்டு அந்தக் கட்டுரையை விளக்கிவிடலாம். ஆனால், கட்டுரையையும் படங்களையும் வைத்துக்கொண்டு, ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவது அத்தனை சரியல்ல!

கொஞ்சம் பிசகினாலும் உடலில் சிக்கல்கள் வந்துவிடும்; நூலிழை தவறினாலும், நொந்துகொள்ள நேரிடும். ஆகவே, குருவின் உதவி மிக மிக அவசியம்.

''போன வருஷம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப, ஆறு மாசமா திடீர்னும் தொப்பை போட்ருச்சு. போன தீபாவளிக்கு எடுத்த பேன்ட்டைக்கூட போட்டுக்க முடியலை. வேகமாக நடக்கமுடியலை; ஒரு பத்தடி தூரம் ஓடி, பஸ்ஸைப் பிடிக்க முடியலை; ரெண்டு மாடி ஏறினாலே மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்குது!'' என்று அலுத்துக்கொண்ட ஓர் அன்பர், தொப்பையால் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் தனக்கு நேர்ந்துள்ள பிரச்னைகளை விவரித்தார்.

உணவின் மீது கவனம் வைத்தாலே நம்மில் பலரும் தொப்பையில் இருந்து மீண்டுவிடலாம்; உடலின் மீதும் கவனம் வைத்தால், தொப்பை எனும் தொந்தரவு வரவே வராது!

ஆனாலும், அவை குறித்து ஆழ்ந்து யோசிக்காமல், தொப்பை வளர்ந்து, பூதாகரமாக இருக்கிற வேளையில், நொந்துகொள்வதும், நொறுங்கிப்போவதும், மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பதும் ஏன்?

சரி, கவலையை விடுங்கள்! தொப்பை போன்ற பல பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு, வஜ்ராசனம் பேருதவி செய்கிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கிவிட்டால், உடலில் ஏற்படுகிற மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் நம்மால் மிக எளிதாக உணரமுடியும்.

வஜ்ராசனப் பயிற்சியில் எவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவர்களுக்குத் தைராய்டு பிரச்னை போன்ற உபாதைகள் வர வாய்ப்பே இல்லை. தொப்பை என்பது வயிற்றில் வருவது மட்டுமே! ஆனால், தைராய்டு பிரச்னை என்பது கைகள், கழுத்து, முகம் எனப் பல இடங்களில் பரவி, நம்மை மிகப் பருமனானவராகக் காட்டக்கூடியது!

ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கும், குண்டாக உள்ளவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும் ஆசைப்படுகின்றனர். உலகின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!