Sunday, May 1, 2011

கொழுப்பு வேண்டாம்... பருப்பு வேண்டும்!


''உன்னோட மூளையை மட்டும் ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கியே...'' -'ஏய்' படத்தில் சரத்குமாரிடம் வடிவேலு இப்படி கேட்பார்.  பங்குச் சந்தையில் சரியானபடி மனதைச் செலுத்த நம்முடைய மூளையும் ஃப்ரெஷ்ஷாக  இருக்க வேண்டும். மூளையின் ஆற்றலைப் பாதுகாக்க சரியான உணவுகள் அவசியம். அதுகுறித்து இங்கே பேசுகிறார் பிரபல உணவு நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

''முழுமையான மற்றும் சமச்சீர் உணவு, ஆரோக்கியமான உடலுக்கு அவசியம். அதே நேரத்தில், மூளை மிகவும் ஆற்றலுடன் இயங்க வேண்டும் என்றால் அதற்கு சில பிரத்யேக சத்துகள் அவசியம் தேவை. நினைவாற்றல் என்கிற 'மெமரி' நன்றாக இருந்தால், உலகில் எதையும் சாதிக்கலாம். சுலபமாக கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடியும். மூளையின் ஆற்றலை அதிகரிக்க புரோட்டீன் என்கிற புரதச் சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் அவசியம். இவை சாதாரணமாக பழங்கள், காய்கறிகளில் இருக்கிறது!'' என்றவர் அவை எவை என்பதையும் விளக்கிச் சொன்னார்.

''கீரைகளில் விட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. வல்லாரை கீரை நினைவாற்றலை பெருக்கக்கூடியது. இப்போது வல்லாரை சாக்லேட், மாத்திரை வடிவிலும் கடைகளில் கிடைக்கிறது. காய்கறிகளில் பீன்ஸ்,அவரைக் காய் போன்றவை மூளையின் பலத்துக்கு நல்லது.

ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், கருப்பு திராட்சை, செரி, பிளம்ஸ்  பழங்கள், நெல்லிக்காய் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இவற்றை சர்க்கரை சேர்த்து ஜூஸ் அல்லது பாக்கெட்/பாட்டில்களில் அடைக்கப்பட்டதை பருகுவதைவிட அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து குடிக்க நினைத்தால், அப்படியே சாறு எடுத்து குடியுங்கள். அப்படி குடிக்கும்போது வடிகட்டி குடிக்காதீர்கள். அப்படியே குடித்தால்தான் அதில் உள்ள நார்ச்சத்து உடலில் சேரும். சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்காதீர்கள். இனிப்பு தேவைப்பட்டால் தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

புரதச் சத்து என்கிறபோது, சைவ உணவாளர்கள் பொட்டுக் கடலை, கொண்டைக் கடலை, மொச்சை, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளைப் பயன் படுத்தலாம். இவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ஸ்டைலாக, சுவையாக சாப்பிடுவதாக நினைத்து சுண்டல், மொச்சை போன்றவற்றில் தோலை தூரப் போட்டு விடுகிறார்கள். அவற்றைத் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே முழுச் சத்தைப் பெற முடியும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் மீன், கோழி இறைச்சி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மூளையின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தச் சத்து பால், தயிரிலும் இருக்கிறது. மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு பீட்டா கரோட்டின் என்கிற சத்து தேவை. இது விட்டமின் ஏ சத்துக் கொண்ட கேரட் மற்றும் பப்பாளி பழத்தில் இருக்கிறது!'' பட்டியல் போட்டுச் சொல்லும் டாக்டர் தாரிணி, தவிர்க்க வேண்டிய உணவுகளையும் இங்கே வகைப்படுத்துகிறார்.

''மூளையின் ஆற்றல் அபரிமிதமாக இருக்க, கொழுப்பு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கொழுப்பானது மூளையின் செயல்பாட்டை மந்தமாக்கி விடுகிறது. மேலும், ஒரு நபரின் உஷாராக இருக்கும் திறமையை குறைத்துவிடும். இதை நீங்கள் அனுபவத்திலே பார்த்திருக்கலாம். அதிக எண்ணெய் உள்ள சாப்பாட்டை, சாப்பிட்ட பிறகு மிகவும் சோம்பலாக இருப்பதை அனுபவித்து இருப்பீர்கள். சிலர் காலை உணவாக அதிக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பொங்கலை சாப்பிட்டுவிட்டு, மந்தமாகவே இருப்பார்கள். இதற்குப் பதில், சிறிய அளவு மட்டுமே பொங்கலை எடுத்துக் கொண்டு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன்களை சாப்பிடலாம். இதனால் மந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்!''