Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 13

தாம்பத்தியம் - 13


பெரும்பாலான குடும்பத்தை ஆட்டி படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள்  .

ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்து கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்த கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள்.  தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை,  எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன.  என்னை நான் தெளிவு படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை  எதிர் பார்க்கிறேன் )


ஆணாதிக்கம்

அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....?  ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை  காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன்.   இன்றைய கால கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைதூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும்.  இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும், நான் பகிர்ந்து கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக  போட்டு குழம்பிக்கொள்ள கூடாது. 

ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும்  பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடி பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்தி பெற்று கொள்ள நாம் உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும்  இல்லை.


ஏன் ஏற்பட்டது? எதனால்?

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை.  ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.  இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம்  செய்து கொள்வார்கள்.  ( நான் என்னை சமாதானம் செய்து கொண்டதை போல )

காடுகளில் விலங்குகளுடன் விலங்காக  வாழ்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி தான் தங்களது பசியை ஆற்றி கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள்  பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாட  சென்றார்கள்.  வேட்டையாடி கொண்டுவந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும்  , குழந்தைகளையும் கவனித்து கொண்டார்கள்.  இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்து கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.

நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு  இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்ககூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள்.

பெண்ணுரிமை

பெண்களுக்கு எது உரிமை என்று  விளக்குவதே  பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்ப  பெண்கள் எண்ணுகிறார்கள்.  'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்து போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக  இருக்கிறது.  என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பபடி  தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்க  தொடங்கி விட்டது.  இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும் ஆனால் பெண்கள்  செய்யும் அதிகாரம்......??!! 

பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பை கேட்டு  மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகை  காட்டி ஓடிவிடும்

கணவனை பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைபட்டு கொள்வதும் ,  மனைவியை பார்த்து ' நான் ஆண்  அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும்  அநாகரீகம்.

ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது.  மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .    

குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும்  வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாக  கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர்  மீது ஒருவர் பழி போடாமல்.  'அடுத்து என்ன  செய்யலாம்'  என்று அடுத்த  அடி எடுத்து வைக்க சுலபமாக  இருக்கும்.

தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும்  ஆண்மை தோற்றாலும்  அங்கே இறுதியில்  வெல்வது என்னவோ இருவருமேதான் "