Friday, July 8, 2011

தாம்பத்தியம் பகுதி 2

கணவனின் மென்மையான அணைப்பில்தான்  ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள்.  எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கிடைக்கிறதா? இல்லை என்று தான் சொல்லமுடிகிறது.  ஏன் இல்லை, காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு பகிர்வுதான் இந்த தாம்பத்தியம் என்ற தொடர் பதிவு!     

தாம்பத்தியம் சுகமானதாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்கள்தான்.  பெண்மை அங்கே  திருப்தி அடையவில்லை என்றால் அந்த வீடு வாழ தகுதி அற்றதாகி விடுகிறது,  ஒரு குடும்பத்தின் கெளரவமே அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் இருக்கிறது,  வீடு சொர்கமாவதும், நரகமாவதும் அந்த பெண்ணை பொறுத்துதான் அமைகிறது.  முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கணவன் ராமனாக இருப்பதும் கிருஷ்ணனாக மாறுவதும் கூட அந்த மனைவியை வைத்துதான் இருக்கிறது என்பது என் கருத்து. கணவனுக்கு எல்லாமுமாக ஒரு மனைவி இருந்து விட்டால் அந்த கணவனுக்கு வேறு எண்ணங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

அதனால் தாம்பத்தியம் என்று பார்க்கும்போது முதலில் பெண்களின் பலம், பலவீனங்கள் போன்றவற்றை கொஞ்சம் சுருக்கமாக (இயன்றவரை) தெரிந்துகொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   

(நான் எழுதுவது அனைத்தும் சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்.    தவிர இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். யார் மனதையும் கஷ்டபடுதுவது என் நோக்கம் அல்ல,  தாம்பத்தியத்தில் தடுமாறி கொண்டிருக்கும்  ஒரு சில மனங்களில் ஒரு மனதை மட்டுமாவது  எனது ஏதாவது ஒரு வரி கொஞ்சம் தொட்டுவிடாதா  என்ற ஒரு நப்பாசை தான் காரணம்)      

பெண்களின் அறியாமை :

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் அறியாமை போகவில்லை என்று தான் தோன்றுகிறது. நான் அறியாமை என்று சொல்வதின் அர்த்தம் எது என்றால், ' தங்களை பற்றி இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை ', என்றுதான் சொல்வேன்.  

நீண்ட காலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் தொடர்ந்து சம உரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன,  அது எதற்காக.......?  பெண்கள் எப்போது தாழ்ந்து போனார்கள்? இப்போது உயர்த்தணும் என்று போராடுவதற்கு.  உண்மையில் பெண்கள் ஆண்களை விட 'எப்போதுமே ஒரு படி மேலே தான்' அப்படி இருக்கும்போது எதற்கு சம உரிமை என்று கேட்டு தங்கள் இடத்தை விட்டு கீழே  இறங்கி வர வேண்டும்.     

குழந்தை பேறு என்ற மகத்தான சக்தி நம்மிடம் இருக்கும்போது நாம் எப்படி ஆண்களுக்கு குறைந்து போவோம்...!?   அவர்களைவிட மேலே மேலே தான்!! ஆண்கள்  உடலளவில் பலமுள்ளவர்களாக இருந்தாலும் மனவலிமையில் பெண்களுக்கு ஈடாக மாட்டார்கள்.  இதை பெண்கள் மனதில் வைத்து கொண்டால் சரிசமமாக சண்டைக்கு போக மாட்டார்கள், பரவாஇல்லை என்றுவிட்டுகொடுத்துவிடுவார்கள்!!      

சம வயது உடைய ஆண், பெண் இரண்டு பேரில் ஆணை விட பெண்ணின் அறிவு வளர்ச்சி, மன முதிர்ச்சி  அதிகமாக இருக்கும்,  இதை நான் சொல்லவில்லை விஞ்ஞானம் சொல்கிறது. அதனாலதான் திருமணதிற்கு பெண்  தேடும்போது 2 , 3  வயதாவது குறைந்த பெண்ணைத்தான் நம் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.  வயது அதிகமான பெண்ணை மனம் முடித்த ஒரு சிலர்  பாவம் அந்த பெண்ணிற்கு கட்டுப்பட்டு  போக வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறார்கள்.  

பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை  அதிகமாக இருப்பதால் தான் இன்னும் பலர் முன்னேறாமல் தங்கள் திறமைகளை தங்களுக்குள் போட்டு புதைத்து விட்டு வெறும் சவமாக வாழ்ந்துகொண்டிருகிறார்கள்.  


பெண்களின் சிறப்பு  இயல்புகள்  :


இயல்பிலேயே பொறுமை, விடாமுயற்சி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய திறமைகளை பெற்றவர்கள்தான்.  தவிர தாய்மை, அன்பு, கருணை, தயாளகுணம், விருந்தோம்பல்,  புன்னகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில குணாதிசியங்களை மட்டும் பார்போம்.  


நவீன ஜான்சிராணிகள்!


நமக்கு ஆண் உடை தரித்து வாளெடுத்து போரிட்ட ஒரு ஜான்சிரானியைதான் நன்றாக தெரியும். அவர் இருந்த அப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வாளேடுத்துதான்  ஆகவேண்டும் என்ற கட்டாயம், எனவே துணிந்து போரிட்டார்.  இன்றுவரை வீரப்பெண்மணி என்று புகலுகிறோம்.  


ஆனால் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஜான்சிராணி இருக்கத்தான் செய்கிறாள்.  தேவைப்பட்டால் போரிடவும் தயங்க மாட்டாள்.உண்மையில் அன்றைய ஜான்சிராணிக்கு  ஒரு குறிக்கோள்தான்,  போர்க்களம் ஒன்றுதான்.ஆனால் இன்றைய பெண்களுக்குக்கோ தினம் தினம் பலவித போராட்டங்கள், விதவிதமான போர்களங்கள், அத்தனையையும் தனி ஒருவளாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவள்!!       


கரண்டி பிடிக்கும் அதே கையால் துப்பாக்கி பிடிக்கவும் தயங்காதவள் பெண்தான்!

  
தைரியம்:

பெண்களின் தைரியத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம், சிலர் அவர்களால் வாழ்கையில் மேல் நிலைக்கு வந்திருக்கலாம்,பல ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக குடும்பத்தில் திடிரென பிரச்சனை வந்து விட்டால் கலங்கி விடாமல் முதலில் சுதாரித்து எழுபவள் பெண்தான்..........!  கணவனையும் சோர்ந்து விடாமல் பார்த்துகொண்டு, பிரச்னைக்கு என்ன தீர்வு என்று ஆராய தொடங்கி விடுபவள் பெண்தான்.........!  தன் புன்சிரிப்பால் சூழ்நிலையை மாற்றி அடுத்த கட்டத்திற்கு போக தன் கணவனை ஊக்கபடுத்துபவள் பெண்தான்........!  பிரச்சனை பொருளாதாரமாக இருந்துவிட்டால் கொஞ்சமும் தயங்காமல் தன் கையில்  இருக்கும் தங்க வளையலை கழட்டி கணவனிடம் கொடுத்து நிலைமையை சமாளிக்க சொல்லுபவளும் பெண்தான்.........! பிரச்சனை  தங்கள் குழந்தைகளுக்கு தெரியகூடாது என்று  மறைத்து   அவர்களை உற்சாகமாக இருக்குமாறு பார்த்துகொள்பவள் பெண்தான்.........!

இப்படி பெண்களின் சமயோசித்த செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  

பெண்ணடிமை?:

பெண்கள ஆணுக்கு அடிமையாக அடங்கி இருந்தார்கள் என்பதை முழுமையாக ஏற்று கொள்ளமுடியாது,  அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் பல பெண்கள் அந்த காலத்தில் சில பல புரட்சிகள் படைத்திருக்க முடியாது!  (உதாரணங்களை அடுக்கி கொண்டிருந்தால் தாம்பத்தியம் என்ற படைப்பு வேறு பாதையில்  பயணிக்க தொடங்கிவிடும், அதனால் ஒரு வரி தகவல் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்)  பலரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்று இருந்தார்கள்.  வீட்டில் இருந்த பெண்களும் நல்ல குடும்ப தலைவிகளாக இருந்து தத்தம் பிள்ளைகளை நன்மக்களாக வளர்த்து உயர்த்தினார்கள்.

பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான்,  மாற்றங்கள் சூழ்நிலையை  பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள்.  

தான் எப்படி வாழவேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்கவேண்டும்.   கோபுரகலசமாகவா?   குத்துவிளக்காகவா?  அல்லது சாதாரண தெருவிளக்காகவா?  என்பது அவள் முடிவிலும், அவள் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் இருக்கிறது!

   
கணவன், மனைவி உறவு பாதிக்கபடுவது ஏதோ ஒருநாள் பிரச்சனையால் மட்டும்  ஏற்படுவது இல்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.  மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆண்கள், பெண்கள் வளர்ந்த விதம்தான்.    


பெண்கள் வளர்ந்த விதம்:


முதலில் பெண்கள் வளர்ந்த விதத்தில் இரண்டு வகைகளை கொஞ்சமாக பார்ப்போம்.    பெண்களை அதிகமாக அடக்கி வைப்பது எப்படி தவறோ அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதும் தவறு என்பது என் கருத்து.  

அடக்கி வைத்து வளர்க்கப்படும் பெண்கள் எப்போது இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்ற எண்ணத்திலேயே வளருவார்கள், பின் திருமணம் முடிந்ததும் தன் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறையை தன் கணவன் மேல் காட்ட தொடங்குவார்கள்,   ஒருவகையில் இதை  superiority complex என்றுகூட சொல்லலாம்.   தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு வித மயக்கத்தில் நடப்பார்கள், தனது அடிமைத்தன  வளர்ப்பு கணவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி தன் பேச்சை மட்டும்தான் கேட்கவேண்டும் என்பதில் முடியும். எதை எடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று தான் இருக்கும். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தற்கொலை என்ற ஆயுதம் பிரவோகிக்கப்படும்.   கணவன் அப்பாவி ஆக இருந்துவிட்டால் தப்பித்து விடுவார்,  மாறாக விவரமானவராக இருந்து  விட்டால் தினம் இங்கே தாம்பத்தியம் பயங்கரமாக அடிவாங்கும்!      

மாறாக சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலர் திருமணதிற்கு பிறகு கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.  புகுந்த வீட்டினரை எதிரிகளாக பார்கிறார்கள்,  மாமியார், மருமகள் சண்டையே இந்த வீட்டில் தான் அதிகமாக நடக்கிறது.  தனது விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தனது கணவனிடம் காட்ட தொடங்குவாள்,  கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை தனி குடித்தனம் போக  தூண்டுவாள், கணவன் ஆரம்பத்தில் தவித்தாலும் வேறு வழி இன்றி இதற்கு உடன்பட்டு விடுவான்.  

தனியாக போனாலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்றால் இல்லை என்பதுதான் பல அனுபவசாலிகளின் பதில்.  கணவன் தன்னை எப்போதும் தாங்கவேண்டும்,  சின்ன தலைவலி என்றாலும் ஓடி வந்து உபசாரம் செய்யவேண்டும்,  தன்னை ஆகா, ஓகோ என்று புகழவேண்டும், ரோட்டில் போகும்போது சும்மா கூட வேறு பெண்ணை ஏறிட்டு பார்த்து விட கூடாது என்பது  மாதிரி highly possessive ஆக இருப்பார்கள்.  மொத்தத்தில்இங்கே தாம்பத்தியம் தள்ளாடும்! 

பெற்றோர்களால் பாதிக்கப்படும் பெண்கள்:

கருத்து வேறுபாடுகள் நிறைந்த எப்போதும் சண்டை போட்டுகொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து வளர்ந்த பெண்ணின் மனம் கவலைகள், குழப்பங்கள் நிறைந்ததாகவே  இருக்கும். வெளி பார்வைக்கு சகஜமானவளாக தோன்றினாலும், அவளது மனம் அடிக்கடி தனிமையையே நாடும்.  எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகமாகவே இருக்கும். படிப்பிலும் கவனம் இருக்காது, மிக குறைந்த அளவிலேயே தோழியர் இருப்பர்.  வெளி இடங்களில் சிரித்து பேசியபடியும், வீட்டில் எப்போதும் இறுக்கமாக, அமைதியாக  இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் ஒவ்வொருமுறை வீடு திரும்பும்போதும் மனதில் எழும்.  


கற்பனையாக ஒரு துணையை உருவாக்கி அதனுடன் சந்தோசமாக  வாழ்வதாக கருதி எப்போதும் ஒரு கற்பனை உலகில் வலம் வந்து சுகம் காணுவார்கள்.   இவர்களில் ஒரு சிலர் தாழ்வு மனப்பான்மையுடனும்,  ஒரு சிலர் உயர்வான மனப்பான்மையுடனும்   இருப்பார்கள்.  இவர்களது எதிர்கால திருமண வாழ்கையில் இதன் பாதிப்பு நிச்சயமாக   எதிரொலிக்கும்.   அந்த புகுந்த வீடும், கணவனும்  எவ்வளவு நன்றாக, நல்லவனாக  இருந்தாலும் இந்த மோசமான பாதிப்பு கண்டிப்பாக சில நேரங்களில் வெளிபட்டே தீரும்.....!!     


பல தாம்பத்தியங்கள் தடுமாற இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரு காரணம்தான்!?   ஆனால் இந்த அடிப்படை காரணம் அந்த கணவனுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்லவேண்டும்.  அந்த பெண்ணிற்கும் தனது ஆழ்மனதில் பதிந்தவைதான் தனது நிகழ்கால குழப்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தாலும் பெரும்பாலும் அவளது பலவீனம் அதை ஒத்துகொள்ள விடுவது இல்லை.   விளைவு நல்ல குடும்பம், நல்ல கணவன் கிடைத்தும் அற்புதமான இந்த தாம்பத்தியம் உடைய தொடங்கிவிடுகிறது.........!!


தவிரவும் ஒரு சில பெண்களின் குணங்கள்,  பெற்றோர்கள் மட்டும் உறவினர்களின் தவறான வழிகாட்டுதல்,  சொல்லபோனால் பக்கத்து வீட்டினர்கூட குடும்பம் பிளவுபட காரணமாக  இருந்து விடுகிறார்கள்.   அதில் முக்கியமான ஒரு சிலவற்றை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.   தொடர்ந்து வரும் சில தலைப்புக்கள்,  

பெண்களின் மனோபாவங்கள் 

ஆண்களின் சிறப்பியல்புகள் 

ஆண்களின் மனோபாவங்கள் 

திருமண பந்தம் (இரு குடும்பங்களின் இணைப்பு விழா)

கருத்து வேறுபாடுகள் ( பிரிவு, விவாகரத்து)

தீர்வுதான் என்ன? 

சுகமான தாம்பத்தியம் இப்படித்தான் இருக்கும்.