Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 5

தாம்பத்தியம் - 5

ஆண்களை பற்றிய நிறைகளை இன்னும் கொஞ்சம் பார்ப்பது இந்த தொடர் முழுமை அடைவதற்கு உதவியாக  இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது எப்படி பெண்களை பெருமை படுத்துவதாக இருக்கிறதோ அதே போல் தான் எந்த ஒரு மனைவியின்  வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக அவளது கணவன்தான் இருக்கமுடியும் . அது நேரடியான அல்லது மறைமுக ஒத்துழைப்பாக கூட இருக்கலாம் . சமுதாயத்திலும், குடும்ப வாழ்விலும் ஒரு பெண் சிறந்து விளங்க ஒரு ஆண்தான் முக்கிய காரணமாக இருக்கிறான்.  ஆனால் இதை ஆண்கள்  வெளியில் சொல்லி பெருமை தேடி கொள்வது இல்லை...!!

பெண்கள் தன் அன்பினால் ஒரு முறை ஆண்களை கட்டி போட்டு விட்டார்கள் என்றால் நிச்சயமாக அதில் இருந்து அவர்களால் விடுபடவே  முடியாது. அதற்கு பிறகு தனது மனைவி செய்யும் தவறுகூட பெரிதாக தெரியாது  (சாப்பாட்டுக்கு உப்பு போடலைனாலும் " உப்பு இல்லைனாலும் சாம்பார் சூப்பர் டேஸ்ட்டு டா!!" ) இப்படி பதிலுக்கு அன்பு பாராட்டுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை!! 


சம்பாத்தியம் திருமணம் முடிந்த முதல் 6 அல்லது அதிக பட்சம் ஒரு வருடம் வரை  மன வாழ்க்கையின் சந்தோசத்தை ருசித்த அவர்கள், அதற்கு பிறகு தனது குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக தனது சந்தோசத்தையே அடகு வைத்து உழைக்க தொடங்குகிறார்கள்.  அதிலும் முக்கியமாக  முதல் குழந்தை பிறந்தபின் தகப்பன் என்ற ஸ்தானத்தை அடைந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அவனது மனம் அடுத்ததாக எண்ணுவது , அதிகரிக்க போகும் பண தேவையை சமாளிக்க என்ன செய்யலாம் என்பதாகத்தான் இருக்கும்.....!!  

குடும்ப பொறுப்பு அப்போதே அந்த கணவனுக்கு வந்து விடுகிறது.  தன் மனைவி, குழந்தையின் வளமான வாழ்விற்கு தேவையான பொருள் தேடலுக்காக இரவு, பகலாக உழைக்கிறான்.  உழைப்பை விருப்பத்துடன், அக்கறையாக செய்யும் அந்த குணம் பாராட்டப்பட வேண்டும், அந்த மனைவியால் அந்த உழைப்பு அங்கீகரிக்க பட வேண்டும்.  மனைவியின் ஒரு சிறு புன்னகை கொடுக்கும் அந்த அங்கீகாரமே அவனை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும்.  


தியாகம் - வெளிநாட்டு வேலை 
இந்த இடத்தில் ஆண்களின் உழைப்பிற்கு உதாரணமாக ஒன்றை கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  பொருளாதார  தேவைக்காக தன் தாய் நாடு, பழகிய உயிர் நண்பர்கள்,  பெற்றோர்கள்,   தன் மனைவி மக்களை பிரிந்து பொருளை தேட வெளிநாட்டிற்கு போகும் அந்த ஆண்களின் தியாகத்திற்கு  ஈடாக வேறு ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  இதில் கொடுமை என்னவென்றால்   நினைத்து போன வேலை ஒன்றாக இருக்கும், ஆனால் அதைவிட தகுதி குறைந்த வேலை செய்ய வேண்டியதாகி விடும்... இருந்தும் தன் குடும்பத்தை நினைத்து அந்த துன்பத்தையும் சுகமாக நினைத்து உழைப்பவர்கள் ஆண்கள்....!!  

பல மனைவியருக்கு கடைசி வரை தன் கணவன் எந்த மாதிரி வேலை செய்து இந்த பணத்தை அனுப்புகிறான் என்றே தெரியாமல் போய்விடும். ஆண்களும் தங்கள் கஷ்டம் தங்களுடன் போகட்டும் என்று மறைத்து விடுவார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கையில் ஒரு துர்பாக்கியமான சூழ்நிலை ஒன்று ஏற்படும். வெளி நாடு போகும்போது அவனது குழந்தை தொட்டிலில் இருக்கும், மூன்று அல்லது ஐந்து வருடம் கழித்து வரும் அந்த தகப்பனை அடையாளம் தெரியாமல் அந்த குழந்தை விழித்து அருகில் வராமல் விலகும் போதுதான் அந்த ஆண் உடைந்து நொறுங்கி போய் விடுகிறான்.  சில நேரம் அந்த அன்பின் இடைவெளி குறையாமலேயே போய் விடுகிறது.....??  


இந்த மாதிரி கணவர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் உள்ள உறவு அன்பால் அதிகமாக பிணைக்க பட்டு இருக்கவேண்டும்.  மனைவியின் அன்புதான் அவனை போர்வையாக மூடி அணைத்து பாதுகாக்கும்  . அப்படி பட்ட மனைவியை அடைந்தவர்கள் பாக்கியவான்கள்.  ஆனால் அந்த அன்பு கிடைக்காத பலரின் நிலை........???

       
ஆண்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான நிறையை இங்கே நான் இங்கே குறிப்பிடாவிட்டால் ஆண் சமூகம் என்னை மன்னிக்காது, தவிரவும் பல பெண்களுக்கும் இது ஒரு பெரிய நிறை என்பதை ஞாபக படுத்த வேண்டி இருக்கிறது...!!

தன் மனைவி வீட்டினரை மதிக்கும் மாண்பு:

கல்யாணம் ஆனதும்  ஒரு பெண் புகுந்த வீட்டில் கால் வைத்ததுமே மாமியார், மாமனார், நாத்தனார் இவர்களை எப்படி மதிப்பாள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். சில பெண்கள் மனதில் வெறுப்பு இருந்தாலும் அதை வெளி காட்டாமல் நடப்பார்கள். எப்படி இருப்பினும் ஒரு சின்ன வெறுப்பு கூட இல்லாமல் மருமகளாக நடப்பவர்கள் மிகவும் குறைவுதான். 
  
பெண்கள் கணவனின் உறவினர்களை வித்தியாசமான பார்வை பார்ப்பது போல் எந்த ஆணும் தன் மனைவியின் உறவினர்களை பார்ப்பது இல்லை. ஆண்களை பொறுத்த வரை என் அனுபவத்தில் எந்த ஆணும் தனது மாமனார் வீட்டினரை குறைத்து பேசியோ அவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாகவோ  கேள்விபடவில்லை. இன்னும் சொல்ல போனால் அதிக மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.  மருமகன் சண்டை என்று செய்திகள் வருவது சொற்பமே. அப்படியே வந்தாலும் அதன் பின்னால் அவனின் திருமதி தான் இருப்பார்கள்.ஆண் வாரிசு இல்லாத பல வீடுகளிலும்மருமகனே மகனாய் மாறி மாமனார் வீட்டினருக்கு உதவிகள் செய்தது உண்டு. ஆனால் இந்த மாதிரி செய்திகளை  வெளி வரவிடாமல் நாங்கள் இருட்டடிப்பு செய்து விடுவோமே!! 

முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி பட்டு இருப்போம் மாமனார், மருமகன் சண்டை என்றோ மாமியார் , மருமகன் சண்டை என்றோ எங்காவது கேள்வி படுகிறோமா? அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே.   இது ஒன்று போதாதா, பெண்களுக்கு....?? இதை வைத்தாவது  அவர்களின் மற்ற குறைகளை மறந்து விடுங்களேன்...!! 

(என்னால் முடிந்தவரை ஆண்களுக்கு என் ஆதரவை பெருமையுடன் முடிந்தவரை கொடுத்து விட்டேன் .  இதற்கு மேலயும் சொல்லிட்டே போகலாம் ஆனால் பெண்களிடம் அடி வாங்கபோவது  யார்..?) 

பெண்களுக்கான சட்டங்கள் 


நம் நாட்டை பொறுத்தவரை பல சட்டங்களும் பெண்களுக்கே (மனைவியர்களுக்கே) சாதகமாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு  கணவன் மனைவியின் பிரச்சனை, போலீஸ் ஸ்டேஷனுக்கோ, கோர்ட்டுக்கோ போனால் அங்கே  பெரும்பாலும் கணவனை விடுத்து, மனைவியின் சொல்லுக்கே மதிப்பு கொடுக்க படுகிறது.  அந்த நேரத்தில் கணவனின் மீது தவறு இல்லை என்றாலுமே அவன் அங்கே ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறான் , அவனது வாதம் அங்கே மறுக்கவே படுகிறது. இந்நிலை மிகவும் பரிதாபம்தான், இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள்  பலர்.  சில  பெண்களும் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, தன் கணவர்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது....!  

இதனால் முடிந்தவரை சின்ன சின்ன விசயங்களையும் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போவது தான் நல்லதா தோன்றுகிறது.  மனைவிகளும் தங்கள் கணவர்களிடம்  இருக்கும் பல நிறைகளையும் தங்களுக்கு ஏற்றாற்போல் மறந்தே விடுவார்கள், அல்லது மறைத்துவிடுவார்கள், சில குறைகளை மட்டும் பெரிது படுத்தி வானிற்கும், பூமிக்கும் குதிப்பார்கள்.  இதில் அவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை.  முந்தைய தலைமுறையில் வாங்கியதை இப்போது திருப்பி கொடுக்கிறார்கள் அவ்வளவே.  வேறு என்ன சொல்வது ? 

இனி தான் முக்கியமான விசயமே வருகிறது.. ஆம் ஆண்களின் குறைகள்...!!

எவைஎல்லாம் குறைகள்..?

இங்கே நான் விளக்கமாக கூறபோவது கணவர்களின் குறைகளைதானே தவிர ஆண்களின் குறைகளை  பற்றியது இல்லை. பொதுவாக ஆண்களின் குறைகள் என்று எடுத்துக்கொண்டால் அதை ஒரு தனி தொடர் பதிவாக எழுத வேண்டும்... அதனால் தாம்பத்யம் என்று பார்க்கும் போது கணவர்களிடம் இருக்கும் குறைகளை பார்ப்பது மட்டுமே  சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஒரு ஆண் மணமாவதற்கு  முன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் பாதிப்பு யாரையும் பெரிதாக பாதிக்காது...!!? ( பெற்றவர்களை தவிர ) ஆனால் கல்யாணம் ஆனதும் அவனது ஒவ்வொரு செயலும் அவனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டாயம் பாதிக்கும்.  அதனால்தான் கல்யாணம் ஆனபின் அவசரபடாமல், நிதானத்தை கைக்கொண்டு வாழ்க்கையை எதிர் கொண்டு சமாளித்தாக வேண்டும்.

ஒரு முறை வாழும் இந்த மனித வாழ்க்கையை சந்தோசமாகவும், முடிந்தவரை நிம்மதியாகவும் வாழ்ந்து முடிக்க நம்முடைய குறைகளை சரி செய்து நிறைவாக வாழ்வோம்....!