Thursday, July 14, 2011

திருமண நிச்சயதாம்பூலம் - அது தாம்பூல சத்தியம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.


கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம். தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார். காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.