Saturday, November 19, 2011

நிம்மதி உங்கள் சாய்ஸ்!

முதுமையில், யாரையும் நம்பியிராமல் வாழ்வதற்கு
திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் தேவைகளுக்காக ஓடி ஓடி அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு, அப்பாடா என்று ஓய்வு எடுக்கும் காலம்தான் முதுமைக் காலம். இந்த காலம் சந்தோஷமாக கழிய வேண்டும் என்றால், உங்களது நிதித் தேவையும் போதுமானதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் வாழ முதுமைக் காலத்திற்கான நிதித் திட்டமிடலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி.
''இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் இப்போது 60-65 வயதாக இருக்கிறது. இது 2020-ல் 75 வயதாக அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, 60 வயதில் ஓய்வு பெறப் போகிறீர்கள் எனில், அதன் பிறகு பதினைந்து வருடங்களுக்குப் பொருளாதார விஷயங்களில் யாரையும் நம்பியிராமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
இதுவரை உங்களுக்கே உங்களுக்கென கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்கு வைத்தி ருப்பீர்கள். ஆனால், முதுமைக் காலத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொள்வது மிக மிக அவசியம். நான் இதை குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. கணவருக்குப் பிறகு பென்ஷன் தொகை மனைவிக்குச்  சுலபமாகச் செல்ல வேண்டுமெனில் ஜாயின்ட் அக்கவுன்ட் இருப்பது அவசியம்.
இந்த வயதில் இருப்பவர்கள் ரிஸ்க் அதிகம் எடுக்க முடியாது என்பதால், 80 சதவிகித தொகையை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பாக்கி 20% மட்டுமே பங்கு சார்ந்த திட்டங்களில் (ஈக்விட்டி) செய்ய வேண்டும். அதிலும், வயது அதிகமாக அதிகமாக பாக்கி 20% தொகையையும் கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்றிவிடுவது நல்லது. ஈக்விட்டியில் நல்ல அனுபவம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும். அனுபவம் இல்லாத வர்கள் ஈக்விட்டி பக்கம் இந்த வயதில் போக வேண்டாம்.
இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே எடுத்திருக்கும் டேர்ம் பிளான், ஹெல்த் பாலிசி போன்றவைகளைத் தொடர்வது நல்லது. மேலும், முதுமைக் காலத்தில் உடல் உபாதைகள் அதிகம் ஏற்படும் என்பதால், அதற்கு தகுந்தாற் போல் கூடுதலாக ரைடர் பாலிசிகள் எடுத்துக் கொள்வதும் நல்லது. அப்படி என்றால்தான் முப்பது, நாற்பது வயதில் எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் 80 வயது வரை பலன் தருவதாக இருக்கும்.
வங்கி டெபாசிட்!
வங்கி டெபாசிட் கணக்கில் மற்றவர்களைவிட சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரைக்கும் இந்த கூடுதல் வட்டி கிடைக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து 30 லட்சம் ரூபாய் வரை செய்யும் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி உண்டு. ஐந்து வருட லாக் இன் கொண்ட இதில் ஆண்டுக்கு 9% வட்டி கிடைக்கும். மேலும், தற்போது ரிசர்வ் வங்கி டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங் களை அதிகரித்து வருவதினால், வங்கி டெபாசிட்டாக குறிப்பிட்ட தொகையை வைத்துக் கொள்வது நல்லது.
வங்கி டெபாசிட்டில் பணம் போடும்போது மொத்தமாக போடாமல் பிரித்துப் போட்டால் அவசரத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், பல்வேறு வங்கிகளில் பிரித்து போடும்போது, டெபாசிட் கேரண்டி இன்ஷூரன்ஸ் வசதி கிடைக்கும். 
தபால் நிலைய சேமிப்பு!
தனிநபர் ஒருவர் 4.5 லட்ச ரூபாய் வரை தபால் அலுவலகம் மூலம் சேமிக்கலாம். இதற்கு 8% வருமானம் கிடைக்கிறது. தற்போது அரசு இதற்கான வட்டிவிகிதங் களை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பான முதலீடாக இதில் கொஞ்சம் போட்டு வைப்பதும் நல்லது. உதாரணமாக, ஒன்பது லட்சம் ரூபாய் தபால் நிலைய சேமிப்பாக முதலீடு செய்தால் மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்!
ஃபண்டில் எம்.ஐ.பி. எனப்படும் மன்த்லி இன்கம் பிளானில் முதலீடு செய்தால் மாதா மாதம் டிவிடெண்ட் கிடைக்கும்.
பி.பி.எஃப்., கம்பெனி டெபாசிட்!
வருமான வரியை மிச்சப்படுத்தும் விதமாக சேமிப்பதற்கு பி.பி.எஃப். சிறந்த முதலீடு. தற்போது 8% வட்டியிலிருந்து 8.6 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளது. கூடுதல் வட்டி வருமானம் பெற கம்பெனி டெபாசிட்டை தேர்வு செய்யலாம். அப்போது மூன்று ''ஏ'' (கிகிகி) ரேட்டிங் கொண்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவும். தெரியாத கம்பெனிகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

நேஷனல் பென்ஷன் ஸ்கீம்!
மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பென்ஷன் கிடைத்துவந்த சூழ்நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர் களுக்கும் பென்ஷன் கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் என்.பி.எஸ். திட்டத்தில் பல நன்மைகள் இருக்கிறது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய்கூட முதலீடு செய்யலாம்.
கூடுதலாக எவ்வளவு பணம் சேமிக்க நினைக்கிறீர்களோ அதையும் சேமிக்கலாம். அத்துடன் இதில் சேமிக்கும் தொகை எதில் முதலீடு செய்யப் பட வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
உதாரணத்திற்கு, 15% ஈக்விட்டி, 45% தனியார் பாண்டுகள், 40% அரசாங்க பாண்டுகள் என்ற விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செய்யலாம். அப்படி உங்களால் தேர்வு செய்து கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் வயதைப் பொறுத்து முதலீட்டு கலவை பாதுகாப்பு கருதி மாற்றியமைக்கப்படும்.
அதிகபட்சமாக 80% அரசாங்க பாண்டுகளிலும், 10% ஈக்விட்டியிலும், 10% கம்பெனி பாண்டிலும் என அவர்களே முதலீடு செய்வார்கள்.
சந்தை ஒருவேளை கீழே போனால், ஈக்விட்டியில் இருக்கும் முதலீட்டை கடன் திட்டங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில், வருமானத்துக்கு வரிச் சலுகை கிடையாது என்பது சின்ன குறை. பதினெட்டு வயதிலிருந்து 55 வயது வரை இத்திட்டத்தில் சேரலாம். பென்ஷன் இல்லாத தனியார் ஊழியர்களுக்கான சிறந்த திட்டம்.

தங்கம்!
ரிஸ்க் இல்லாமல் அதிக வருமானம் கொடுக்கும் தங்க முதலீடும் கண்டிப்பாக வேண்டும். காரணம், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தங்கம் மட்டுமே எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் கொடுத்து வருகிறது. எனவே, தங்கத்திலும் கொஞ்சம் பணம் போட்டு வைப்பது நல்லது.
சில டிப்ஸ்!
இத்தனை முதலீடுகளும் செய்துவிட்டு அதனை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த முதலீடு செய்ததற்கான பலனே இல்லாமல் போய்விடும். அதனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்தாருடன் அமர்ந்து உங்களது முதலீடு பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். முதலீடு பற்றிய விவரங்களை நோட்டிலோ அல்லது கம்ப்யூட்டர் எக்ஸல் ஷீட்டிலோ குறித்து வைப்பது பல வகையில் உதவியாக இருக்கும்.
நீங்கள் இத்தனை நாளும் செய்துவந்த முதலீட்டுக்கு நாமினியை நியமிப்பது அவசியம். தனக்கு பின் யாருக்கு சொத்துகள் போய் சேர வேண்டும் என்பதை உயில் எழுதி வைத்தால், உங்கள் காலத்திற்குப் பிறகு வாரிசுதாரர்கள் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் பயன் படுத்திக் கொள்வார்கள்.
முதுமை காலத்தை இனிமையாக கழிக்க வழிகளைச் சொல்லி விட்டோம்.
உங்களுக்குத் தகுந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து வயோதிகத்தை வெல்ல வாழ்த்துக்கள்.