Monday, April 16, 2012

உடலுக்குச் செய்வோம் மசாஜ் - கால் மற்றும் முதுகு வலி நிவாரணம்

உடலுக்குச் செய்வோம் மசாஜ்

தாத்தாக்களுக்கும் பேரன்களுக்கும் உறவின் அடர்த்தியும் அன்பின் நேர்த்தியும் மிக அதிகம். பேரன் அல்லது பேத்தியை அழைத்துச் செல்கிற தாத்தாவோ, தாத்தாவை கைப்பிடித்து அழைத்துச் செல்கிற பேரனோ பேத்தியோ... பார்ப்பதற்கே பரவசம் தருபவர்கள்; நம் பால்யத்தை சட்டென்று நினைவுக்குக் கொண்டு வருபவர்கள்! பால்யத்தில், நம் தாத்தாவுக்கும் நமக்குமான உறவை சட்டென்று யோசிக்கத் துவங்கிவிடுவோம்.

''கண்ணு... தாத்தாவுக்கு காலெல்லாம் ஒரே வலி. கொஞ்சம் பிடிச்சு விடேன்'' என்று சொல்லாத தாத்தாக்களும் இருக்கிறார்களா என்ன? அப்படிச் சொல்லிவிட்டால், உடனே பேரப்பிள்ளைகள் குஷியும் கும்மாளமுமாக ஓடி வருவார்கள். வந்து கால் பிடித்துவிடுவார்கள். அந்தப் பிஞ்சுக்கைகள் முழங்காலில் இருந்து பாதம் வரை இப்படியும் அப்படியுமாகப் பயணித்து, மென்மையாக அமுக்கிவிடும். அதேபோல் சில குழந்தைகள், படுத்திருக்கும் தாத்தாவின் காலில் ஏறி நின்று, சுவர் பிடித்துக் கொள்வார்கள். தன் மெல்லிய கால்களால், சுவரைப் பிடித்தபடி, தாத்தாவின் கால்களில் முன்னும் பின்னுமாக நடந்து வருவார்கள்.

தாத்தா மற்றும் அப்பா குப்புறப் படுத்துக் கொண்டிருக்க, அவர்களின் முதுகில் ஏறிநின்று கொண்டு, சுவர் பிடித்தபடி முதுகுத் தண்டுவடத்தில் இருந்து பின்னங்கழுத்து வரைக்கும் பிறகு கழுத்தில் இருந்து முதுகுத் தண்டு வரைக்குமாக நடந்துவருவார்கள்.

பிறகு தாத்தாவோ அப்பாவோ... அந்த கால்வலி மற்றும் முதுகு வலியில் இருந்து முற்றிலுமாக நிவாரணம் பெற்றுவிடுவார்கள். இதற்கு, மெல்லிய பாதங்களும் பிஞ்சு விரல்களும் செய்கிற செப்படி வித்தை இது!

இன்றைக்குத் தாத்தாக்கள் கிராமங்களிலும் பேரன் பேத்திகள் நகரங்களிலும் வசிக்கிற நிலை வந்துவிட்டது. போதாக்குறைக்கு, அப்பாவும் அம்மாவும் தடதடவென காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு, வேலைக்கு ஓடுகிற அவசரமும் நகரத்தில் கட்டாயமாகிவிட்டது. இந்தப் படிப்பு, அந்த வகுப்பு, இந்தப் பயிற்சி, அந்த டான்ஸ் என்று குழந்தைகளும் நேரமில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

அப்படியெனில் அலுப்பும் சலிப்புமாக மனமும் உடலும் துவண்டிருக்கும்போது உடலுக்கு சின்னதான இளைப்பாறலை யார் தருவார்கள்? வேறு யார்? நாம்தான் தரவேண்டும். நம் கையே நமக்கு உதவி என்பதை அறிந்தவர்கள்தானே நாம்!

ஆமாம் அன்பர்களே! உடலைத் தேய்த்து விடுகிற மசாஜ் என்கிற பயிற்சியை இப்போது பார்க்கப் போகிறோம்.

மெல்லியதான விரிப்பு ஒன்றில், மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கால்களையும் கைகளையும் நன்றாக நீட்டிக் கொண்டு, தளர்வாக உடலை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களின் வலது கையை எடுத்து, தொப்புளுக்கு மேலாக உள்ளங்கை படும்படி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை தரையில் படும்படி அப்படியே இருக்கட்டும். இப்போது, தொப்புளுக்கு மேலாக வலது கையைக் கொண்டு, வலச்சுழலாக, அதாவது கடிகார முள் சுற்றுவது போல், உள்ளங்கையைக் கொண்டு மூன்று முறை அழுத்தி, வயிற்றுப் பகுதியை முழுவதுமாகத் தேய்த்து விடுங்கள். பிறகு இடச்சுழலாக, அதாவது கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்த் திசையில் மூன்று முறை அதேபோல் அழுத்தித் தேய்த்து விடுங்கள். அடுத்து வலச் சுழலாக முன்பு போலவே மூன்று முறை அழுத்தித் தேய்த்து விடுங்கள்!

இது வயிற்றுப் பகுதிக்கு செய்யப்படுகிற மசாஜ். எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். சொல்லப்போனால், வயிறே பிரதானம் என்றும் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கும். உணவை உட்கொண்டு உயிர் வாழ்கிற இந்த வாழ்க்கையில், வயிற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அல்லவா!

நம் உணவையெல்லாம் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு, அரைத்துச் சக்கையாக்கி, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிலைக்கு வருகிற உணவு குறித்து நாம் அறிந்திருக்கிறோம்தானே?! அப்பேர்ப்பட்ட வயிற்றுக்கு நாம் செய்கிற மசாஜ், அதன் உள் உறுப்புக்களைச் சீர் செய்யும். சோர்வில் இருக்கிற உறுப்பு சுறுசுறுப்பாகும். தன் வேலைகளைச் செவ்வனே செய்யத் துவங்கும்! நம் மூன்று வேளை உணவு மற்றும் அடிக்கடி கிடைக்கிற சந்தர்ப்பங்களில் சாப்பிடுகிற உணவுகள் என ஒரு மாவுமில் போல் இயங்கிக் கொண்டிருக்கிற வயிற்றைக் கவனிப்பதிலும் அதற்கு மசாஜ் செய்துவிடுவதிலுமான பலனை உணர்வீர்கள்; செய்து பாருங்கள்!

அடுத்து, மார்புப் பகுதிக்கு வருவோம். வழக்கம் போல், மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கை- கால்கள், உடல் என தளர்வாகவே இருங்கள். வலது கையை மார்பின் இடது புறத்தில் உள்ள நுரையீரல் இருக்குமிடத்துக்கு மேலாக வைத்துக் கொள்ளுங்கள். முன்பு போலவே உள்ளங்கை அந்தப் பகுதியில் படர்ந்திருக்கட்டும்.

நுரையீரல் பகுதியை, உள்ளங்கையால் வலச்சுழலாக மூன்று முறை அழுத்தித் தேய்த்து விடுங்கள். பிறகு இடச்சுழலாக, மூன்று முறை அழுத்தித் தேயுங்கள். இதையடுத்து, மீண்டும் வலச்சுழல் முறையில் இடது மார்புப் பகுதியை நன்றாக அழுத்தித் தேய்த்துவிடுங்கள். எந்தப் பதற்றமும் பரபரப்பும் இன்றி, மென்மையாக ஆரவாரமின்றி இந்தப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இப்போது, உங்களின் இடதுகையை எடுத்து, வலது புறத்தின் மார்புப் பகுதியில், நுரையீரல் இருக்குமிடத்துக்கு மேலாக வைத்துக் கொள்ளுங்கள். வலது கை தரையில் படும்படி இருக்கட்டும். இடது உள்ளங்கையைக் கொண்டு, வலது மார்புப் பகுதியை, குறிப்பாக நுரையீரல் பகுதியை வலச்சுழலாக மூன்று முறை தேய்த்துவிடுங்கள்.

சரி... அடுத்து, இடச்சுழலாக மூன்று முறை அழகாக, அமைதியாக மென்மையாகத் தேய்த்து விடுங்கள். அடுத்து வழக்கம் போல, மீண்டும் வலச்சுழல் முறையில், நுரையீரல் பகுதியை அழுத்தித் தேய்த்துவிடுங்கள். உங்கள் கைவிரல்களும் உள்ளங்கையும் முக்கியமான உங்களின் மனமும் நுரையீரல் பகுதியில் அந்தப் புள்ளியில் இருக்கட்டும். நுரையீரலை உற்றுக் கவனித்தபடி, அதன் காற்றோட்டத்தை, உள்வாங்குகிற லாகவத்தை, வேகத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

தாத்தாவோ அப்பாவோ... முதுகு அல்லது கால் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு, பேரன் அல்லது பேத்திகளின் தயவை நாடினார்கள் அல்லவா? அந்தப் பிஞ்சு விரல்களும் பஞ்சுக்கால்களும் மிக மென்மையாக அந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற்றுத் தந்தது அல்லவா? அதேபோல, நம் கைகளையே பேரனாக அல்லது பேத்தியாக நினைத்துக்கொண்டு, அந்த வயிற்றுப் பகுதியையும் நுரையீரல் பகுதியையும் நாமாக நினைத்தபடி, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மசாஜ் பயிற்சியைச் செய்யுங்கள்.

இந்த இரண்டு பயிற்சிகளும் மிக உயிர்ப்பானவை. உடல் இயங்குவதற்கு ஆதார ஸ்ருதியாகத் திகழ்பவை!

ஆதாரத்தில் சேதாரம் இல்லாது பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம் அன்பர்களே!