Tuesday, July 31, 2012

மறதியை மறக்க 7 வழிகள்

ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. 

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.

நினைவாற்றல்   என்றால் என்ன?

நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்' என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்' என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்' என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.

 

எப்படி வேலை செய்கிறது?

என்கோட்: காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  

ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.

ரெட்ரிவல்: நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.

 மறதி நல்லது!

 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.



(Courtesy: Doctor Vikatan)