Saturday, July 28, 2012

உள்ளே இருக்கும் தேவரகசியம்

சீனர்களின் கைவேலைப்பாடு மிக்க அந்த பேழையில் பட்டு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். இன்று வரை யாரும் அதை திறந்து பார்த்ததில்லை.

குரு மட்டுமே அதை கையில் சில நேரம் வைத்திருந்து நான் பார்த்திருக்கிறேன். நான் அவரின் பிரதான சிஷ்யன் என்பதால் எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.  இங்கே இருக்கும் பலருக்கு இதுவும் கிடைத்ததில்லை.

குரு பிறருக்கு காட்டாமல் பொத்தி வைத்திருக்கும் அந்த புனித நூலில் இருக்கும் தேவ ரகசியம் என்ன என தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

எத்தனை நாள் தான் அதற்கு பூஜைகள் மட்டும் செய்து கொண்டிருப்பது? நானும் அதை படித்து ஆன்மீகத்தில் உயர வேண்டாமா? இந்த வேட்கை என்னை பல்வேறு வகையில்` தூண்டியது.

அன்று இரவு அப்புத்தகத்தை திறந்துபார்க்கும் திட்டம் உருவாகியது. குருவை அவரின் அறையில் சந்தித்து பூஜை அறையை தூய்மையாக்க போகிறேன் என சொல்லிவிட்டு தனியாக வந்துவிட்டேன்.

இதோ அறைக்கதவை சாத்தி தாழ்போட்டாகிவிட்டது.யாரும் உள்ளே வரவோ நடப்பதை பார்க்கவோ முடியாது.

நறுமணம் கமழும் அந்த பெட்டியை மெல்ல திறந்து பட்டுத்துணியை விலக்கி அந்த புனித நூலை எடுத்தேன்.

அப்புத்தகத்தின் அட்டைப்படம் தாண்டி உள்ளே இருக்கும் தேவரகசியத்தை ஒரே மூச்சில் பருகும் ஆவலில் திறந்தால்....அனைத்தும் வெற்றுக்காகிதமாக இருந்தது...!

புனித நூல் ஏன் வெற்று தாளாக இருக்கிறது? இதை ஏன் வைத்து வழிபட வேண்டும் என பல குழப்பம் தோன்றியது...

மெல்ல திரும்பினால்...
பூட்டிய அறைக்குள் குரு நின்று என்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியில் உச்சத்துக்கே சென்று அவர் காலில் விழுந்தேன். தேம்பி அழுதுக்கொண்டு என் கண்ணீரால் அவரின் கால்களை கழுவும் என்னை தோள்களை பிடித்து தூக்கினார்.

“புனித நூல் என்றவுடன் அதில் பல தெய்வீக கருத்துக்கள் இருக்கும் என நினைத்தாயா? இறை கருத்துக்கள் என்பது ஒரு மொழியில் அடங்கக் கூடியது அல்ல. இறைகருத்துக்கள் வார்த்தையால் உணரக்கூடியது அல்ல.. இறைவன் என்ற பிரம்மாண்டம் சில வார்த்தையால் விளக்கிவிட முடியுமா என்ன? இறைக்கருத்துகள் மெளனத்தால் பகிர வேண்டியவை... மெளனம் எப்படி அனைத்தையும் கொண்டிருக்கிறதோ...அதுபோல இந்த வெற்றுத்தாள்களும் எல்லையற்ற இறைவனின் வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு தேடுதல் உள்ளவர்களுக்காக காத்திருக்கிறது... இதோ நீ இன்று வந்துவிட்டாய்”எனக்கூறி என்னை அவரின் கூர்மையான கண்களால் மெளனமாக பார்த்தார்.