Tuesday, April 30, 2013

இணைய தள காதல் - முதல்நாள் திருமணம்; மறுநாள்,"டைவர்ஸ்'

இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமணம் செய்தனர். அதற்கு, அடுத்த நாளிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, தகராறாக மாறியது. பொய்யான தகவல்களை கூறி, சங்கர், தன்னை ஏமாற்றி விட்டதாக, சீமா புகார் கூறினார்.

பதிலுக்கு, சீமா, தன்னை ஏமாற்றி விட்டதாக, சங்கரும் புகார் கூறினார். ஆத்திரமடைந்த, சீமாவின் பெற்றோர், கற்பழிப்பு புகார் கொடுக்கப் போவதாக, சங்கரிடம் எச்சரிக்கை விடுத்தனர். பதிலுக்கு, சங்கரும், மிரட்டினார்.

தகராறு முற்றியதை தொடர்ந்து, இரு தரப்புமே, போலீசில் புகார் தெரிவித்தனர். பின், போலீஸ் ஸ்டேஷனிலேயே, இரு தரப்பினரும், அமர்ந்து பேசி, சுமுக முடிவுக்கு வந்தனர். இதன்படி, இரு தரப்பினரும், புகாரை வாபஸ் பெற்றனர். சீமாவும், சங்கரும்,"ஒருவரை ஒருவர், சரியாக புரிந்து கொள்ளாமல், அவசர கோலத்தில், திருமணம் செய்து விட்டோம். எங்களின் திருமணம் செல்லாது. ஒருவரை ஒருவர், பிரிகிறோம்' என, கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, பிரிந்து சென்றனர்.திருமணம் முடிந்த அடுத்த நாளே, அவர்களின், திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது.

(தினமலர், 30/04/2013)