Saturday, May 11, 2013

குட்கா பான் மசாலா அபாயம்

''தோட்டத்தில் விளையும் புகையிலையை, சுவைக்கும் புகையிலையாகப் பதப்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவரும் வரை நிறைய கெமிக்​கல்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. புற்றுநோயை உண்டாக்கும் 45 விதமான கெமிக்கல்களில் 22 கெமிக்கல்கள், சுவைக்கும் புகையிலையில் பல்வேறு கட்டங்களில் சேர்க்கப்படுகின்றன. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோயால் 43 சதவிகித அளவுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. வாய், உதடு, உள் கன்னம், நாக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், குரல்வளை, வயிறு என்று புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை நீண்ட பட்டியலிடலாம்.

பான் மசாலா பொருட்களில் 'பொலோனியம் 6' என்ற கதிர்வீச்சு பொருள் உள்ளதால், பான் மசாலா போட்டுப் போட்டு நாளடைவில் வாயே திறக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வாய்க்குள் உள்ள மிருதுவான தோல்கள், கடினத்தன்மையை அடைந்துவிடும். பான் மசாலா பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள், சில ஆண்டுகள் கழித்து வாய் திறக்க முடியாததால், உதட்டுக்குள் ஒதுக்கும் புகையிலை, பாக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.

நன்மை செய்யும் 550 விதமான பூச்சிகள் வாய்க்குள் உள்ளன. நோய் தடுப்பு சக்தியை இழந்த பிறகு தீமைசெய்யும் பூச்சிகள் ஆட்டம் போட ஆரம்பிக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதை மறைக்க வாசனைப் புகையிலை போடுவார்கள். இப்படி, வாய்க்குள் போட்டுள்ள புகையிலைப் பொருட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் போகும். இவற்றை செரிமானம் செய்யக்கூடிய கெமிக்கல்கள் வயிற்றுக்குள் இல்லை என்பதால், ஜீரணம் சரியாக நடக்காது. வயிறு உப்பும். பசி எடுக்காது. தண்ணீர் குடிக்க மாட்டார்கள். குடல், வயிறு பகுதிகளில் புண் உருவாகும். வயிற்றுக்குள் போகும் வாசனைப் புகையிலையின் சக்கைகள், ஜீரணம் ஆகாமல் உணவுகளில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து, உருண்டையாகி வயிற்றுக்​குள்ளேயே இருக்கும். அதை அறுவைசிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும். சத்துக்களை உறிஞ்சும் சக்தியைக் குடல் இழந்துவிடுவதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். உடல் வலு குறைந்து சோம்பேறி ஆகிவிடுவார்கள். கல்யாண ஆசை வராது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். ஆண்மைத்தன்மை குறையும். இவர்கள் மது குடித்தால் புற்றுநோய் வர இன்னும் 10 சதவிகித அதிக வாய்ப்பு ஏற்படும். பொறுப்பாக வேலைசெய்ய முடியாத நிலையில்... திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று சமூக விரோதச் செயல்படுகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

புகையிலைப் பொருட்களைப் போடும் பலருக்குப் புற்றுநோய் வரவில்லையே என்று சிலர் வியாக்கியானம் பேசலாம். அவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு வராவிட்டாலும் இதயம், கிட்னி பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பாதிப்புகள் இப்போது வரவில்லை என்றாலும், எப்போதாவது வரலாம். புகையிலைப் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் மனிதனை நடைபிணமாக்கிவிடும். உழைக்கும் சக்தியை உறிஞ்சிவிடும். இளைய தலைமுறை, எதிர்காலத்தில் சக்கையாகத்தான் இருக்க முடியுமே தவிர, இந்த சமூகத்துக்கு பயனுள்ள மனிதனாக வாழ முடியாது. உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகத்தான் இருக்க முடியும்.