Saturday, May 11, 2013

திருமணம் - புதுமையான விருந்தோம்பல்!

புதுமையான விருந்தோம்பல்!

சமீபத்தில், என் தோழியின் தங்கைக்கு, திருமணம் நடந்தது, திருமணப் பத்திரிகையில், "ரயிலில் அல்லது பஸ்சில் வருபவர்கள், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட பின் கிளம்பவும்' என்று அச்சிடப்பட்டிருந்தது. நான் ரயிலுக்கு கிளம்பும் முன், அந்த நம்பருக்கு போன் போட்டு, நான் கிளம்பும் விவரத்தை சொன்னேன். "திருமண மண்ட பம் நகரின் அவுட்டரில் இருப்பதால், ரயிலில் இருந்து இறங்கியதும், எங்கள் வண்டிகள் நிற்கும், அதில் ஒன்றில் ஏறி வாருங்கள்...' என்று, போனில் விவரம் கூறினர்.

அது போலவே, ரயில்வே ஸ்டேஷன் வாசலில், மணமக்கள் பெயர் எழுதிய ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. அதில், எங்களுடன் திருமணத்துக்கு வந்த இன்னும் சிலரும் ஏறிக் கொண்டனர். திருமணம் இனிதே முடிந்து, விருந்தினர்கள் கிளம்பும் போதும், தங்கள் வண்டிகளிலேயே ஏற்றி போய் பஸ், ரயில் நிலையங்களில் இறக்கி, வழியனுப்பினர்.

சில திருமணங்களுக்குப் போய் வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருப் போம். அந்த சங்கடங்களைத் தவிர்க்க, அழகாக ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினர்களை மதித்து, அழைத்து வந்து, வழியனுப்பிய திருமண வீட்டாரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த புதுமையான விருந்தோம்பலால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பளீரிட்டது. மணமக்களை மணமார வாழ்த்திச் சென்றனர்!

(தினமலர் செய்தி, 12/5/2013)