Thursday, May 16, 2013

முழு உடல் பரிசோதனை - நோய் வருமுன் காப்போம்


கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்... ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்' என்பதே மறைந்துவருகிறது.

 தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சைநிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.

இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.

'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?' என்கிற பொறுமல்களுக்கும் குறைவே இல்லை.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.

முழு உடல் பரிசோதனை பற்றி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூத்த உதவிப் பேராசிரியர்           த.ரவிக்குமார் விரிவாகக் கூறுகிறார்.

யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?

  அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அதிகம் செலவாகுமா?

  முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.

  அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, குடல், வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை மற்றும் சிறப்புப் பரிசோதனை, அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

  சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.

யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?

  பிறந்த  பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.

  பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.

  பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.

  பல்வேறு  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்து விடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோல்தான்.

  போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.                                                            

முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக் கால இடைவெளி என்ன?

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒரு வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

  முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

  உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.

  கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக் கூடியவையே!

சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோ... அதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.

  வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

  சில மருத்துவமனைகளில் நீங்கள் வரும்போதே சிறுநீர், மலம் போன்றவற்றை எடுத்துவரச் சொல்வார்கள். பரிசோதனைக்குத் தேவைப்படும் அளவுகளை அவர்களிடம் கேட்டு அதன்படி எடுத்துச் செல்லுங்கள்.

மனதளவில் எப்படித் தயாராவது?

  இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.  

  காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

  பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.

பரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?

  சர்க்கரை, கொலஸ்ட்ரால்,  நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும்.  பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.

 இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

 பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?

 வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

 தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும்  தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

 சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்

 ரோமம் அகற்றுவது நல்லதே!

 மார்பகப் புற்றுநோய் மற்றும் டி.பி கிருமித் தாக்குதல், மயிர்க்கால் நோய்த் தாக்குதல், நெறி கட்டுவதைப் பரிசோதித்தல் போன்றவற்றுக்கும் முடி இல்லாது இருப்பது நலம்.

  அக்குளில் உள்ள தோல் பகுதியில் இருக்கும் கறுப்பான வரிகள், இன்சுலின் எதிர்ப்பு உடலில் உருவாகி உள்ளதைக் காட்டும். இதனால் அக்குள் மற்றும் மறைவுப் பகுதிகளில் உள்ள ரோமங்களை நீக்கிவிடுவது நல்லது.

  பிறப்பு உறுப்பு அருகில் சீழ், நெறி, புண், தழும்பு ஆகியன இருந்தால், அது பால்வினை நோயாகவோ, வேறு தொற்று நோயாகவோ இருக்கலாம். அவற்றைப் பரிசோதிக்கவும், குடலிறக்கம் இருந்தால் அதைப் பரிசோதிக்கவும் முடி நீக்கவேண்டியது அவசியம்.

 மார்பில் நிறைய முடி இருப்பது இ.சி.ஜி  மற்றும் டிரெட்மில் பரிசோதனைகளுக்கு இடையூறாக இருக்கும். அவற்றையும் அகற்ற வேண்டி வரலாம்.

 பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?

 கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.  

  பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.

  மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.

  பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.  

  மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.

  அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.

  நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40-க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.

  உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின்குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.

  அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.

  நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.

  செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும்விடலாம்.

  உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.

  நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.

என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

ரத்தம்  

  ரத்த வகை எது எனப் பரிசோதிப்பார்கள். அத்துடன் ஆர்.எச். பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என கண்டுபிடிப்பார்கள். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் தகவலாகும். ஒருவருக்கு வாழ்நாளில் ரத்தப் பிரிவு மாறவே மாறாது என்பதால், நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

 ரத்தசோகை உள்ளதா என அறிய, ஹீமோகுளோபின் அளவு, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, அலர்ஜி இருந்தால் காட்டும் ஈஸினோஃபில் எண்ணிக்கை, ரத்தத்தை உறையவைக்கும் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தம் கசியும் நேரம், உறையும் நேரம், ரத்த அணுக்கள் வளர்ச்சி, உருவம், நிறம், அளவு, அவற்றில் உள்ள குறைபாடுகள், ரத்த நோய்களான ரத்தசோகை முதல் ரத்தப் புற்றுநோய் வரை ஒரே பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.

  மலேரியா, யானைக்கால் வியாதிகள் பரப்பும் கிருமிகள் உள்ளனவா என்பதையும் அறியலாம்.

  ரத்த மாதிரியை வைத்து, கல்லீரல், சிறு நீரகங்கள், தைராய்டு, அட்ரீனல், கணையம், பிட்யூட்டரி, ஆண், பெண் ஹார்மோன் வியாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

  ரத்த அழுத்தம் 120/80 மிமி மெர்க்குரி அளவு சரியான அளவாகும். 130/90க்கு மேல் இருந்தால் உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

 இதய எக்கோ பரிசோதனையில் பிறவி இதய வியாதிகள், இடையில் ஏற்பட்ட வால்வுக் கோளாறுகள், மாரடைப்பிற்குப் பிறகு இதயம் வேலை செய்யும் திறன், இதய சுவர்களில் வீக்கம், சுருங்கிவிரியும் தன்மையில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை அறியலாம்.

ரத்தத்தில் கொழுப்பின் அளவுகள்

 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் (200-க்கு கீழ்), நல்லகொழுப்பான ஹெச்.டீ.எல்(60-க்கு மேல்) கெட்டக் கொழுப்பான எல்.டீ.எல். (100-க்குகீழ்), ட்ரைகிளிசரைடு (150-க்கு கீழ்) போன்றவற்றை அளவிடுவார்கள். இவற்றின் அளவு அதிகமாக இருந்தால், மீன் எண்ணெய் (ஒமேகா 3 கொழுப்பு சத்து கொண்டது, அல்லது பிளாக்ஸ் சீட் உணவில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை கூறுவார்கள்.

சிறுநீர்

  சிறுநீர்ப் பரிசோதனையில், அளவு, நிறம், தெளிவு, கலங்கல், ரத்தக் கசிவு, கிருமித் தொற்று, சிறுநீரக வியாதிகள், சிறுநீர்ப்பை வியாதிகள், கல், புற்றுநோய் வரை தெரிந்துகொள்ளலாம்.

மலம்

மலப் பரிசோதனையில், வயிற்றுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், அமீபா, டைபாய்டு, காலரா  நோய்த் தாக்குதல், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆசன வாய் நோய்கள், தொற்றுக்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸ்ரே

  நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.

இ.சி.ஜி.

  இ.சி.ஜி. என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

உயரம்

  உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் (அ) குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.

எடை

  உயரத்தை சென்டி மீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100 ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.

  பி.எம்.ஐ எனப்படும் உடல் கணக்கீடை, (உங்கள் எடையுடன் உங்கள் உயரத்தை (சென்டி மீட்டரில்) இரண்டு மடங்கால் வகுத்தால் கிடைப்பது) உங்கள் உடல்வாகு ஒல்லி (18க்கு கீழ்), சராசரி (19 முதல் 24), சராசரிக்கு அதிக உடல் வாகு (25 முதல் 29), பருமன் (30 முதல் 34), அதிக பருமன் (35 முதல் 39), மிக அதிக பருமன் (40க்கு மேல்) என வகைப்படுத்தி உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும், ஆலோசனை தருவார்கள்.

இடை அளவு

  இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள்.  இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.

  ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.

  மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில்  ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

வயிற்று ஸ்கேன்

  இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீரப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய்

  வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110/மிகி க்கு கீழ் இருக்க வேண்டும். 110, 125 வரை இருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் உங்களுக்குச் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை முறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலம் அது வருவதை தற்காலிகமாகவோ முழுவதுமாகவோ தள்ளிப்போட முடியும்.

  126 அளவு இருந்தால், மீண்டும் ஒருமுறை வெறும் வயிற்றில் மற்றும் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பரிசோதித்து அதை உறுதிப்படுத்திய பிறகு வாழ்க்கை முறை, உடல்  உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கல்லீரல் பரிசோதனை

  கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச்  சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.

சிறுநீரகப் பரிசோதனை

  இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.

கண்

 பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.  

காது

  கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுக்கள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.

தோல்

  சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.

ஸ்கேன்

சிடி ஸ்கேன் (CT Scan)

  சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராஃபி  (Computed Tomography scan) என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.

  மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

  பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்களை சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.

  உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.

 கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.  

  புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.

  எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

  சிடி ஸ்கேன் மிக விரைவாகப் படங்களை எடுக்கும்.

எம்.ஆர்.ஐ.ஸ்கேன் (MRI Scan)

  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

  எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.

  முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.

மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள் (Pap Tests)

  ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.

பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.

  21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

மேம்மோகிராம் (Mammogram)

  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ் ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.

  40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

கவனிக்க...

 அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.

  உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.

முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?

முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.

லட்சக்கணக்கானவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, அவர்களின் வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் பலரது குடும்பங்களை உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்றிவரும் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர். ஏ.ஆர். விஜயகுமார் ''மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்.'' என்றார்.

மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம்.  செலவைக் குறைப்போம்.