Saturday, May 11, 2013

ஒரு நாள் கிரெடிட் கார்டு !

ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது அல்லது பெறுவது, பொருட்களை வாங்குவது போன்றவை வேகமாக வளர்ந்து வருகிறது. அதே அளவுக்கு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மோசடியில் சிக்காமல், பணத்தையும் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்வதற்கு நல்லதொரு தீர்வாக வந்திருக்கிறது விர்ச்சுவல் கார்டு. இந்த விர்ச்சுவல் கார்டினை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இன்றைக்கு பல முன்னணி வங்கிகளும் கிரெடிட் கார்டு நிறுவனங்களும் இந்த விர்ச்சுவல் கார்டு வசதியை அளித்து வருகிறது. இதுபற்றி வங்கி அதிகாரிகளுடன் பேசினோம்.

''கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் வாங்குவதில் ஆரம்பித்து, ஆன்லைனில் பொருட்களை வாங்குவது வரை பலவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். இதற்கு கார்டு எண், பின் நம்பர், சி.வி.வி. நம்பர், எக்ஸ்பைரி தேதி ஆகியவற்றை தரவேண்டும். இப்படி தரும்போது உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய ரகசியத் தகவல்கள் திருடுபோக நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் பலரும் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தவே தயங்குகிறார்கள்.

இதற்கொரு தீர்வாகத்தான் இப்போது விர்ச்சுவல் கார்டு என்கிற புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறோம். ஏற்கெனவே வைத்திருக்கும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுக்குத்தான் விர்ச்சுவல் கார்டை உருவாக்கி கொள்ள முடியும். இது வழக்கமான பிளாஸ்டிக் கார்டு அல்ல. ஆன்லைனில் மட்டுமே இருக்கும், உருவம் இல்லாத கார்டாகச் செயல்படும்.

இந்த விர்ச்சுவல் கார்டை உருவாக்க நெட் பேங்கிங் வசதி இருக்கவேண்டும். இந்த விர்ச்சுவல் கார்டை உருவாக்கும்போது உங்களைப் பற்றி, உங்கள் கிரெடிட் கார்டைப் பற்றி சில அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதனை சரியாக சொல்லிவிட்டால் விர்ச்சுவல் கார்டு தயார். முதல்முறை விர்ச்சுவல் கார்டு உருவாக்கும்போது ஓரிரு நாட்கள் காத்திருக்கவேண்டும். இந்த அடிப்படை தகவல்கள், காத்திருப்பு நாட்கள்  வங்கிக்கு வங்கி மாறுபடும்.

இந்த கார்டு உருவாக்கப்பட்டதற்கு அடையாள மாக உங்கள் மொபைலுக்கு ஒரு பின் நம்பர் வரும். இது எட்டு இலக்க எண். இந்த நம்பரை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே விர்ச்சுவல் கார்டு செயல்பட ஆரம்பிக்கும்.

இந்த பின் நம்பரை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் என்பது முக்கியமான விஷயம். இதனைக் கொண்டு கூடுதல் பாதுகாப்புடன் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யலாம். வேறு மோசடி பேர்வழிகளுக்கு இந்த பின் நம்பர் தெரிந்தாலும் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாது. இந்த விர்ச்சுவல் கார்டுக்கு தனியாக கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர், கார்டு எக்ஸ்பைரி தேதி ஆகியவை இருக்கும். இந்த விர்ச்சுவல் கார்டின் ஆயுள் ஒரே ஒரு நாள் மட்டுமே. சில வங்கிகள் தரும் விர்ச்சுவல் கார்டுகள் 48 மணி நேரம் வரைகூட நீடிக்கிறது. இந்த நேரத்துக்குள் இந்த கார்டை பயன்படுத்தவில்லை எனில் அது காலாவதியாகிவிடும். அதன்பிறகு புதிய விர்ச்சுவல் கார்டையே நீங்கள் உருவாக்கவேண்டும்.

தவிர, இந்த கார்டை ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு தானாகவே காலாவதியாகிவிடும். ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கார்டுகளை வேண்டுமா னாலும் உருவாக்கிக்கொள்ளலாம். இப்படி உருவாக்கும் விர்ச்சுவல் கார்டுகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை'' என்று தகவல் சொன்னார்கள் வங்கி அதிகாரிகள். பணத்தைப் பறிகொடுக்காமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவும் இந்த விர்ச்சுவல் கார்டினை இனி எல்லோரும் பயன்படுத்தலாமே!  


டெபிட் கார்டு..!

கிரெடிட் கார்டும் வேண்டாம், டெபிட் கார்டும் வேண்டாம்; சேமிப்புக் கணக்குடன் கூடிய நெட் பேங்கிங் மட்டும் இருந்தாலே போதும். உங்களுக்கு விர்ச்சுவல் கார்டினை உருவாக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது எஸ்.பி.ஐ. வங்கி. இதுபற்றி எஸ்.பி.ஐ. வங்கியின் துணைப் பொது மேலாளர் (மாற்று வழி) ஜி.தங்கப்பனுடன் பேசினோம்.

 

''உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப  விர்ச்சுவல் கார்டை உருவாக்கிக்கொள்ள முடியும். 100 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை விர்ச்சுவல் கார்டினை உருவாக்கிக்கொள்ளலாம். 10,000 ரூபாய்க்கு விர்ச்சுவல் கார்டை உருவாக்கி அதில் 5,000 ரூபாய் மட்டும் பயன்படுத்தினால் மீதமுள்ள 5,000 ரூபாய் உங்கள் சேமிப்புக் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டு விடும்.

நீங்கள் விர்ச்சுவல் கார்டுக்காக ஒதுக்கிய பணம் பரிவர்த்தனை முடியும் வரை அதிலேயே இருக்கும். அதை ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எடுக்க முடியாது. உருவாக்கிய கார்டு தேவையில்லை எனில், அதனை ரத்து செய்யும் வசதியும் இருக்கிறது. அப்படி செய்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தாத பணம் உடனடியாக உங்களின் சேமிப்புக் கணக்குக்கு  வந்துவிடும். இதில் ரூபாய் மதிப்பில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்!''

இதே வசதியை எல்லா வங்கிகளும் தந்தால் பயனுள்ளதாக இருக்குமே!