Tuesday, June 18, 2013

விரிக்கப்படும் ‘வலை’... கொடுக்கப்படும் ‘விலை’!

ன்று, ஆறாவது படிக்கும் குழந்தையும், ஆறாவது விரலாக செல்போனுடன் இருக்கிறது. ஏன், பள்ளிக்கூட வயது துவங்கும் முன்னே, 'ப்பா கேம்ஸு...' என்று கேட்டு தன் பெற்றோரின் மொபைலில் விளையாடப் பழகும் குழந்தைகள் இங்கே அதிகம்! அந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, நம் பிள்ளைகளின் கைகளில் தவழ்கிறது. அதேசமயம்... செல்போன், இணைய தளம், வீடியோ கேம்ஸ் போன்ற டெக்னிகல் விஷயங்கள் எல்லாம், சுவாரசியம் என்கிற நிலையில் இருந்து பிரச்னை என்கிற நிலைக்கு மாறி, பெற்றோரின் தலையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது! கவலை தரும் இந்தச் சூழல் பற்றியும்... அதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க போட வேண்டிய வேலிகள் பற்றியும் இங்கே பேசுகிறார்கள்... சமூக அக்கறை கொண்ட சிலர்!

''இதற்குக் காரணமே... பெற்றோர்தான்'' என்று குத்திக்காட்டும் மன்னார்குடியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சித்ரா செல்வமணி, ''குழந்தையிலேயே அவர்கள் கைகளில் செல்போனைக் கொடுத்து, பேச வைத்துப் பழக்கி, கேம் விளையாடக் கற்றுத் தந்து, 'அவனுக்கு செல்போன்ல எல்லாம் அத்துப்படி' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பது பெற்றோர்தானே! குழந்தைகள் வளர வளர, செல்போனின் அடிப்படை பயன்பாடு, கேம்ஸ், தவிர அதில் வேறு என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறார்கள். அடுத்தகட்டம்... இணையதளம். அங்குதான் விரிகிறது அவர்களுக்கு ஆபத்தான உலகம். பதின் வயதுகளில் 'அடல்ட்' விஷயங்களை அன்லிமிட்டடாக வாரி வழங்குகிறது. விளைவு... செய்தித்தாள்களில் நாம் கடக்கும் குழந்தை குற்றவாளி செய்திகள். வெளி வருவது சிலதான்... ஒவ்வொரு வீட்டிலும் இப்படி உள்ளங்கை அலைபேசிக்குள் நேரத்தை, எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பலர்'' என்று ஆவேசமாகிறார்.

''வீடியோ கேம்ஸ் என்பது ஆக்கப்பூர்வமான விளையாட்டு உபகரணம் அல்ல. ஒரே இடத்தில் உட்கார்ந்து விரல் நுனிகளை மட்டுமே அசைத்து விளையாடும் இந்த விளையாட்டால் நேர்பவை எல்லாம் எதிர்வினையே. தோல்வி பயம், நேர விரயம், உடல் அசைவின்மையுடன் பக்கத்தில் நொறுக்குத் தீனியும் வைத்துக்கொண்டு தொடர்ந்து உள்ளே செலுத்துவதால் ஏற்படும் உடல் பருமன் என்று அது பிரச்னைகளின் ஊற்றுக் கருவி. மேலும், புதிய சிந்தனைக்கு வழி கொடுக்காமல், 'செட்' செய்யப்பட்ட ஒரே விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடியபடியே இருப்பதால், மூளைக்கும் தீனியில்லை. இந்த மாயையில் இருக்கும் குழந்தைகளை மீட்பது சுலபமாக இல்லாத வகையில், அந்த தொழில்நுட்ப கருவி அவர்களைக் கவர்ந்துள்ளது'' என்று எச்சரிக்கையும் தரும் டாக்டர் சித்ரா,

''நம்மை நச்சரிக்காம இருந்தா போதும் என்று இது போன்ற ஆபத்துகளுக்குப் பச்சைக் கொடி காட்டாமல், உடல் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் நல்ல விளையாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே பெற்றோர்தான் பழக்க வேண்டும்'' என்று அன்பான ஆலோசனையும் தந்தார்.

''ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை, சிநேகங்களை ஏற்படுத்திக்கொள்ளும் தளமாக பயன்படுத்துவதற்கான வயது நிச்சயம் பள்ளிப் பருவம் அல்ல'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் வேல்முருகன்,

''இணையதளத்தை பொழுதுபோக்கு என்கிற அடிப்படையில் இல்லாமல், பயன்பாடு என்கிற வகையில் மட்டுமே பயன்படுத்த பெற்றோர் அறிவுறுத்த வேண்டும், பழக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும். ஃபேஸ்புக், ட்விட்டர் என்று பள்ளி மாணவர்கள் அக்கவுன்ட் ஆரம்பிப்பது, படிப்பில் இருந்து அவர்களை வெகுதூரம் அழைத்துச் சென்று பிரச்னையின் அருகில் தள்ளும். பெயர், முகம் தெரியாத யார் யாருடனோ 'ஃப்ரெண்ட்' என்று அறிமுகமாகி, புகைப்படங்கள், தொடர்பு எண்கள், பள்ளி, வகுப்பு விவரங்கள் பகிர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்டு காவல்நிலையம் வரை சென்ற கேஸ்கள் நிறைய.

எனவே, குழந்தைகள் என்னென்ன விளையாட்டுகளை விளையாடலாம், எந்தெந்த இணையதளங்களை பார்க்கலாம், எப்போதெல்லாம் பார்க்கலாம் என்று எல்லாவற்றையும் நீங்களே தீர்மானியுங்கள். அதேசமயம், இதையெல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டோடு குழந்தைகளிடம் திணிக்காமல், அதன் ஆபத்துகளை அன்பாக எடுத்துக் காட்டி அவர்களுக்கும் புரிய வையுங்கள். அதன் பிறகு அவர்களுக்குள்ளும் அந்த எச்சரிக்கை உணர்வு ஒட்டிக் கொள்ளும். எப்போதுமே அலைபேசி, கணினி, டேப்லெட் என்று அனைத்திலும் தேவையானதை மட்டும் வடிகட்டி கொடுப்பது பெற்றோராக இருக்கட்டும்'' என்று சொன்னார்.

திக்குகள் விரிந்து கிடக்கும் தொழில்நுட்ப வலையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்... உங்கள் வீட்டு சின்னஞ்சிறு மனிதர்களை!

குழந்தைகளும், கம்ப்யூட்டரும்... சில பாதுகாப்பு டிப்ஸ்!

 ''என் புள்ள செல்போன், கம்ப்யூட்டரே கதியா கிடக்குறான். ஆனா, அதுல என்ன பண்ணுறான்னு மட்டும் எங்களுக்கு எதுவுமே தெரியல... என்று புலம்பும் பெற்றோர், இன்றைக்கு அதிகம் ஆகிவிட்டார்கள்..'' என்று சொல்லும் சென்னை, லயோலா கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் நெஸ்டர் ஜெயகுமார், பெற்றோர்களுக்கு டிப்ஸ்களை அள்ளி வழங்கினார். அவை...

குழந்தைகளை தனியறையில் அமர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதிக்காமல், ஹாலிலோ அல்லது உங்களது பார்வையில் படுகிற இடத்திலோ அனுமதியுங்கள்.

 குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் தேவையான, பயன்படக்கூடிய சாஃப்ட்வேரை மட்டுமே கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வையுங்கள். முடிந்தவரை கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள்.

 குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது ஒருசில வலைதளத்துக்குள் செல்ல முடியாதபடி ரெஸ்ட்ரிக்ட் செய்துவையுங்கள். கணினியைப் பற்றி நீங்கள் தெரியாதவர்களாக இருப்பின், தெரிந்தவர்களின் உதவியோடு இதைச் செய்யுங்கள்.

 குறைந்த நேரம் மட்டுமே கணிப்பொறியில் அமரவிடுங்கள். குழந்தைகள் 'அடிக்ட்' எனும் அடிமை நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால்... கவனமாக விடுபடச் செய்யுங்கள்.

சமூக வலைதளங்கள், சாட்டிங் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். குழந்தைகளின் பெயர், புகைப்படம், பள்ளி உள்ளிட்ட எந்த விவரங்களையும் இணையத்தில் வெளியிட அனுமதிக்காதீர்கள். அதன் விளைவுகளை சொல்லிப் புரியவையுங்கள்.

 குழந்தைகள் கம்ப்யூட்டரை பயன்படுத்திய பிறகு, அவர்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை 'ஹிஸ்ட்ரி' ஆப்ஷனுக்குள் சென்று கண்காணியுங்கள்.

 குழந்தைகளுக்கு நீங்களே இ-மெயில் ஐ.டி உருவாக்கி, அதன் பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது. அதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை சரிவர சொல்லிக் கொடுங்கள். இணையப் பயன்பாட்டின்போது குழந்தை தவறே செய்திருந்தாலும், கண்டிப்போடு புரிய வையுங்கள்.

 இணையத்தில் பயனுள்ளவற்றை குழந்தைகள் செய்யும்போது ஊக்குவித்து, அதைச் சார்ந்த பல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். கணிப்பொறி சார்ந்த நல்ல புத்தகங்களை வாங்கி கொடுத்து கற்றுக்கொள்ள ஊக்குவியுங்கள்.

 சம்பந்தமில்லாத ஏடாகூட 'பேஜ்' ஓபன் ஆவது போன்று இணையத்தில் எதிர்பாராமல் ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்தால், அதை உங்களிடம் தெரிவிக்கும்படியான புரிதலை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.


(நன்றி: அவள் விகடன்)