Wednesday, June 26, 2013

குணவதியான மனைவி அமைந்தால் குடும்பமே கோயிலாகும்

னக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்க, மற்றவர் பிரச்னைகளிலும் தலையிட்டு அவர்களை மேலும் குழப்பும் சந்தர்ப்பம் சிலருக்கே வாய்க்கும். அப்படியான ஒரு 'பொக்கிஷ தருணம்' அன்று எனக்கும் வாய்த்தது.

நண்பர்கள் இருவருக்கிடையில் விவாதம். என்ன ஏதென்று நான் விசாரிப்பதற்குள், தானாகவே முந்திக்கொண்டு சொன்னார் முதல் நண்பர்: ''வாரக் கடைசியாச்சே! வாடா, சினிமாவுக்குப் போகலாம்னு கூப்பிட்டான். ஒரு வார்த்தை என் மனைவிகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்னேன். அதுக்குக் கேலி பண்றான்!''

''இதுல கேலி பண்றதுக்கு என்ன இருக்கு... மனைவி சொல்தானே மந்திரம்?'' என்றேன் நான்.

நான் யாருக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று புரியாமல் குழப்பமும் கடுப்புமாக என்னைப் பார்த்தார்கள் நண்பர்கள் இருவரும். நான் சிரித்தபடி விவரிக்க ஆரம்பித்தேன்.

''பூலோகத்துல மட்டுமில்ல, தேவலோகத்திலும் மனைவிக்குத்தான் முதலிடம். சிவனார் தன் உடம்பின் இடப்பாகத்திலும், விஷ்ணு தன் மார்பிலும், பிரம்மன் தன் நாவிலும் மனைவிக்கு இடம் கொடுத்திருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. இன்னொரு தகவலும் சொல்றேன், கேட்டுக்கோங்க!

ஒருத்தனுக்கு நான்கு புருஷார்த்தங்கள் அவசியம்னு புராண- இதிகாசங்கள்ல சொல்லப்பட்டிருக்கு. அவை என்னென்ன தெரியுமா? மோட்சம், அர்த்தம், காமம், தருமம். மோட்சம் என்பது இறைவனின் திருவடியைப் பற்றிக்கொள்ளும் மேலான தகுதி. அர்த்தம்- பொன் பொருள் சேர்ப்பதைக் குறிக்கும். காமம்- விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது. தர்மம்- நாம் செய்யும் தான தருமங்களைக் குறிக்கும். இதுல, மோட்சமானது பூர்வ ஜன்மத்துக் கொடுப்பினை இருந்தால்தான் வாய்க்கும். அது நம்ம கையில இல்லையாம். சரி... மத்த மூணும்? அவற்றில் இரண்டை இழந்தால்தான் ஒன்று கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

அதாவது, ஒருத்தன் பொருள் சேர்க்கணும்னு நினைத்தால், தான தர்மம் செய்வதோ, நமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதோ  இயலாமல் போகும்; தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தால், அர்த்தமும் தருமமும் அடிபட்டுப் போகும். அதேபோன்று தருமத்தில் நாட்டமுள்ளவனுக்குக் காமமும் அர்த்தமும் வாய்க்காமல் போகும்'' என்றேன்.

''அப்படின்னா அர்த்தம், காமம், தர்மம் இந்த மூன்றும் ஒருசேர ஒருத்தனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லையா? நீ என்னடான்னா நாலு புருஷார்த்தங்களும் அவசியம்கிறே! பின்னே எப்படித்தான்..?'' என்றார்கள் நண்பர்கள்.

''அதைத்தான் சொல்ல வரேன்... ஒருத்தனுக்குக் குணவதியான மனைவி அமைந்தால், மேலே சொன்ன மூணும் வாய்க்குமாம். குணவதியான மனைவியானவள் தகுந்த நேரத்தில் நம்மைச் சேமிக்க வைப்பாள்; அர்த்தம் நிறைவேறும். நமது விருப்பத்தை நிறைவேற்றவும் துணை புரிவாள்; காமம் வாய்க்கும். இல்லாள் நல்லாளாய் இருக்கும்போது நமது தான தருமத்துக்கும் குறைவிருக் காது. ஆக, குணவதியான மனைவி அமைந்தால் குடும்பமே கோயிலாகும். புரிஞ்சுதா?'' என்றேன்.

நான் பேசி முடித்ததும், கேலிக்கு உள்ளான நண்பர், ''நல்லா புரிஞ்சுதுப்பா! இவனுக்குப் புத்தியில உறைக்கிற மாதிரி அருமையான தகவலைச் சொல்லியிருக்கே! மனைவியோட மகத்துவம் அறிஞ்சவன் நான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது; இதுவரைக்கும் என் மனைவியை ஒரு தடவை கூட கைநீட்டி அடிச்சதில்லை!'' என்றார் பெருமிதமாக.

உடனே, அடுத்த நண்பர் சொன்னார்... ''அட, இதென்ன பிரமாதம்! எனக்குக் கல்யாணம் ஆகி 23 வருஷம் ஆகுது. இதுவரைக்கும் ஒருதடவை கூட என் மனைவியைத் திருப்பி அடிச்சதில்லை, தெரியுமா?!''