Wednesday, June 26, 2013

திருமணத் தடை நீங்கும்; கல்யாண மாலை தோள் சேரும்

புதுக்கோட்டை மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில், புதுக்கோட்டை தேவஸ்தான கோயிலுக்கு உட்பட்ட கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றான, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில், புராதனமான அழகிய திருக்கோயிலாகும்.

குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைப்பது என முடிவு செய்தான். அதன்படி சிவன் கோயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆலயம்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் என்றாலும், அதையடுத்து இந்தப் பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்களும் இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்; நிவந்தங்கள் அளித்துள்ளனர். எனவே, பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. 

இங்கே... தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் ஸ்ரீஅரியநாச்சி அம்மன். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம்.

குறிப்பாக, ராகு கால வேளையில் ஸ்ரீஅரியநாச்சி அம்மனுக்கு அரளிமாலை சார்த்தி, நெய்தீபமேற்றி வழிபட்டால்... விரைவில் திருமணத் தடை நீங்கும்; கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்!

மேலும், திருமணத் தடை நீங்க, தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனிடம் வேண்டிப் பிரார்த்தித்து, கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ஆலமரம் மற்றும் வேம்பு மரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டிவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.  

பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குவோர், அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து தொட்டிலும் வளையலும் கட்டி வேண்டினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். மேலும், இந்த மாதத்தில் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

பௌர்ணமிதோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு.

இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.