Sunday, June 16, 2013

மனைவிக்கு துரோகம் செய்கிறீர்களா?

ஒரு சமயம், பார்க்கவா என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதை பார்த்து, "நீ ஏன் இப்படி ஜடமாக இருக் கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்மலாபம் தேடிக் கொள்...' என்றார்.

அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன் எத்தனையோ ஜென்மம் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மா விடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து, ஞானம் பெற்றேன். இப்போது இந்த ஜென்மா கிடைத் துள்ளது. இனி, நான் எதையும் கற்று உணர வேண்டியதில்லை, இந்த ஜென்மாவில் மேலும், ஞானத்தைப் பெற்று, பகவானை அடைவேன்.

"பூர்வஜென்ம புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங்களில் நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது. பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது, ஒரு பசுவை கட்டிப் போட்டு, தண்ணீர் கொடுக்காமல் இருந்து விட்டேன். அந்த பாவத்துக்காக எனக்கு நரக லோக வாசம் ஏற்பட்டது. நரகத்தில் என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

"இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டிருந் தோம். அந்த சமயம் திடீரென்று குளிர் காற்று வீசியது; சுகமாக இருந்தது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன். அப்போது, எம தூதர்கள் ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது. அந்த புண்ணிய புருஷன் வந்ததால் இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து கொண்டேன். அந்த எம தூதன், புண்ணிய புருஷனை அழைத்துக் கொண்டு நரகலோகத்தை காண்பிக்க வந்தான்.

"நரகவாசிகள் அந்த புண்ணிய புருஷனை, "ஐயா... நீங்கள் போய் விடாதீர்கள்... இங்கேயே இருங்கள். நீங்கள் இருப்பதால் இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது...' என்று கூறினர். அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து, "நான் பல யாக யக்ஞங்களும், தான தர்மம் செய்திருக்கிறேன். நான் விபச்சித் என்ற அரசனாவேன். குடிமக்களை நீதியுடன் பரிபாலனம் செய்தேன். அப்படி இருக்கும் போது என்னை ஏன் நரகலோகத்துக்கு அழைத்து வந்தீர்...' என்று கேட்டான்.

"அதற்கு எம தூதன், "ஐயா... நீர் சொல்வதெல்லாம் உண்மை. ஆனாலும், நீர் உம்முடைய மனைவிக்கு துரோகம், செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர். ஒரே ஒரு சமயம்தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான். அதனால் தான் உமக்கு நரகலோக வாசம். இதனால்தான், நரகலோகத்தை பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத் துள்ளது. இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம். அதோ விமானம் வருகிறது...' என்றான் எம தூதன்.

"அதற்கு அந்த புண்ணிய வான், "ஐயா... நான் இங்கிருப்பதால் இவ்வளவு பேர்களுக்கும் சுகம் ஏற் படுகிறது. ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நரகமானாலும் பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து விடுகிறேன்...' என்றார்.

"இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும். புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான். நீங்கள் வந்து விமானத்தில் ஏறி சுவர்க்கம் செல்லுங்கள்...' என்றான் எம தூதன்.

"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் செய்த புண்ணியங்களில் ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன். இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்...' என்றார். அதேபோல், புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார். அந்த புண்ணிய பலன் கிடைத்ததும் பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது. அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்தும் எனக்கு விடுதலை கிடைத்தது.

"அதன் பிறகு பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது. பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து ஞானத்தை வளர்த்தேன். ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...' என்றது அந்தக் குழந்தை. 

இங்கு அதை ஏன் சொல்கிறோம் என்றால், எந்த பாவம் செய்தாலும் தண்டனை உண்டு; அதனால், ஜாக்கிரதையாக இருந்தால் நல்லதுதானே என்பதற்காகத்தான். இப்படி பல புராணங்களில், பல விஷயங்கள் உள்ளன. 
மனதில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 

*** வைரம் ராஜகோபால்