Saturday, June 1, 2013

பருக்களற்ற பொலிவான முகம் இனி உங்கள் சாய்ஸ்!

டீன்ஏஜ் பருவத்தில், கண்ணாடியின் முன் நின்று 'அழகாக இருக்கிறோமா...' என்று அடிக்கடி முகம் பார்ப்பது சகஜம். முகத்தில் சிறு புள்ளி தெரிந்தாலும், சிணுங்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழகமெங்கும், வெயிலின் உக்கிரம் உலுக்கி எடுத்ததன் விளைவு பெரும்பாலான 'பரு'வப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரித்துவிட்டது.  பருக்கள் ஏன் வருகிறது? வந்தால் தடுக்க என்ன வழி? 

 பருக்கள் உருவாகக் காரணங்கள்:

 பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும், வயதானவர்களுக்கும்கூட பருக்கள் தோன்றலாம்.  

 உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது.

 அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.

 பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும்.  

 அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம்.

 எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம்.

 சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும்.  

 பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.

 தடுக்க சில வழிமுறைகள்:

 நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் இதற்கு சிறப்பான தீர்வு

 நல்லெண்ணெயை உச்சந் தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கவேண்டும்.

 அதிக சூடு உள்ளவர்கள் சந்தனாதி தைலம் மற்றும் வில்வப்பழத் தைல எண்ணெய்களைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.

 நீராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருக வேண்டும்.

 சின்ன வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் மதியம் பருகலாம்.  

 நிறையப் பிஞ்சு வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள்.  

 நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும்.

 சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும். சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதையும் பயன்படுத்தலாம்.

 சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.

 குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும்.

 சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால்  முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.

 தவிர்க்க வேண்டியவை:

 புளிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிருங்கள்..  

 காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.  

 அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

 பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், பருக்கள் இன்னும் அதிகமாகப் பரவிவிடும்.

 தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும்

 அசைவு உணவுகளை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம்.

   பருக்களற்ற பொலிவான முகம் இனி உங்கள் சாய்ஸ்!