Wednesday, July 31, 2013

வீட்டில் பூச்சிகளை இயற்கையான முறையில் விரட்டியடிக்க யோசனைகள்

''வீடுகளை... உண்டு, இல்லை என்றாக்கி நம் நிம்மதியைக் குலைத்து விடும் பூச்சிகள், எலிகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டுவதற்காக அத்தனையுமே ரசாயனங்களைப் பயன்படுத்தி அழிக்கும் யுக்திகளாகத்தானே இருக்கின்றன... அத்தகைய ரசாயனங்களைப் பயன்படுத்துவது, மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று வேறு பயமுறுத்துகிறார்கள். ஏன்... இயற்கையான முறையில் விரட்டியடிக்க வழிகளே இல்லையா..?''
'இதுவும் சரியான யோசனைதானே' என்றபடியே... ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர், அறச்சலூர் செல்வத்திடம் பேசினோம்... ''பூச்சிகளை எல்லாம் அழிக்க நினைத்தால், அதனால் வரும் விளைவுகளையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். பூச்சிகள் நமக்கு ஒரு விதத்தில் நன்மைகளைத்தான் செய்கின்றன. வீட்டில் இருக்கும் 90 சதவிகிதம் பூச்சிகள் நமக்கு தீங்கு செய்யாதவைதான். உதாரணமாக... வீட்டுக்குள் இருக்கும் சிலவித பூச்சிகளை, சிலந்திகள் மற்றும் பல்லிகள் பிடித்து சாப்பிடும். இதன் மூலமாக பூச்சித் தொல்லை குறையும். இதற்காக ரசாயனங்களைப் பயன்படுத்தும்போது, நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடும். வீட்டின் சூழலையும், காற்றையும் சேர்த்தே மாசுபடுத்துகிறோம். கூடவே, நோய்களையும் வரவழைத்துக் கொள்கிறோம். பூச்சிக்கொல்லியில் அதீத வீரியம் கொண்ட ரசாயனம் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும்போது நமக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். அதற்காக பூச்சிகளோடு குடும்பம் நடத்த முடியாது. எனவே, பூச்சிகள் வராமல் இருப்பதற்கு தேவையான இயற்கை முறை பாதுகாப்புகளைக் கண்டறிந்து கடைபிடித்தாலே போதும்... தொல்லை தீர்ந்துவிடும்'' என்று சொன்ன செல்வம், தொடர்ந்தார்...
கொசுவுக்கு பச்சைக் கற்பூரம்!
''உதாரணமாக... கொசுவானது அதிகாலை மற்றும் சூரியன் மங்கும் மாலை வேளைகள்தான் அதிகமாக வீட்டுக்குள் படையெடுக்கும். அந்த நேரங்களில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைத்தாலே போதும்... பாதி கொசு நடமாட்டம் குறைந்து போகும். கொசுவை விரட்ட, ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து (கொசுவிரட்டி மேட் பயன்படுத்துவதற்காக தரப்படும் மின்சாதன கருவியையும் பயன்படுத்தலாம்), அதன் மீது சிறிய உலோக தட்டு ஒன்றை வைத்து, அதில் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். பல்பின் உஷ்ணம் காரணமாக கற்பூரம் இளகி அதில் இருந்து வெளிப்படும் வாசம்... கொசுவை அறவே விரட்டி விடும்.
காய்ந்த வேப்பிலையை சிறிது கொளுத்தி, பின்பு அணைத்து, அந்தப் புகையை வீட்டில் பரவவிட்டால், அந்த வாசனைக்கும் கொசு அண்டாது. நசுக்கிய வெள்ளைப்பூண்டு சாறு ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என கலந்து, வீட்டின் அறைகளில் ஸ்பிரே செய்ய, கொசு ஓடிவிடும்'' என்று சின்னச் சின்ன யோசனைகளைச் சொன்னார்.
''சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்'' என்று சிரித்தபடியே தொடங்கினார்... தமிழக அரசின் வேளாண்மை அலுவலர் நீ.செல்வம். இவர், கோவில்பட்டியில் இருக்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
எறும்புக்கு போரக்ஸ் பவுடர்!
''எறும்புகளில் கடி எறும்பு மட்டும்தான் நமக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடியது. 100 மீட்டர் தூரத்தில் நீங்கள் இனிப்பு பதார்த்தங்களைத் திறந்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து அதை நோக்கி வரும் வல்லமை படைத்தது எறும்பு. முடிந்தவரை பதார்த்தங் களை உபயோகப்படுத்தியவுடன் மூடி வைக்கவும். துணி சோப்பு பவுடர் ஒரு சிட்டிகையை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, ஸ்பிரே மூலம் எறும்பு இருக்கும் இடங்களில் தெளித்தால்... அவற்றின் நடமாட்டம்       குறைந்து போகும்.. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் போரக்ஸ் பவுடர் (நம் உடலில் காயம் ஏற்பட்டால், இந்த பவுடரை எண்ணெயில் குழைத்து தடவுவார்கள்), 2 டீஸ்பூன் சர்க்கரை கலந்து, இந்த தண்ணீரில் பஞ்சு உருண்டைகளை நனைத்து எடுத்து, வீட்டில் எறும்பு புற்று இருக்கும் இடத்துக்கு அருகில் போடுங்கள். சர்க்கரை வாசனையை கண்டு வரும் எறும்புகள் இந்த உருண்டையை தன் பொந்துக்குள் உருட்டி செல்லும். உருண்டையில் இருக்கும் போரக்ஸ் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், எறும்புகள் உடலில் தண்ணீர் வற்றி இறந்து போகும். வெள்ளரிக்காய் தோல், நறுக்கிய வெள்ளரிக்காய், சாத்துக்குடி தோல், பொடி செய்த பூண்டு, மிளகு கலவை ஆகியவற்றை எறும்புப் புற்று இருக்கும் இடத்தின் அருகில் போட்டால்... அது எறும்பின் வருகையைத் தடுக்கும்.
கரப்பானுக்கு விரோதி... வெள்ளைப்பூண்டு!
துணிசோப்பு பவுடரை தண்ணீரில் கலந்து, பாத்ரூம் பகுதியில் துடைக்கவோ, தெளிக்கவோ செய்ய, கரப்பான்பூச்சியின் நடமாட்டம் குறைந்து போகும். போரக்ஸ் பவுடரை கரப்பான்பூச்சி இருக்கும் இடங்களில், சந்து பொந்துகளில் தூவிவிட்டால், வெளியே வரும் கரப்பான்பூச்சி இதனை உட்கொண்டு, அதன் உடலில் தண்ணீர் வற்றி இறந்து போகும். வெள்ளைப்பூண்டை தோல் உரித்தும் கரப்பான்பூச்சி வரும் இடங்களில் போடலாம்.
கொசுவை விரட்ட, கடையில் விற்கப்படும் கொசு விரட்டி மற்றும் மருந்தை வாங்கி உபயோகிப்பதைவிட கொடுமையான செயல் எதுவும் இல்லை. இந்த கொசு விரட்டிகளில் கலந்திருக்கும் நச்சு, நமக்கு கேடு என்பதை அறியாமல் பிஞ்சு குழந்தை இருக்கும் ரூமில் எல்லாம் கொசு விரட்டியை உபயோகிக்கிறார்கள் மக்கள். அப்படியே உபயோகிக்கதான் வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால், கொசு விரட்டியை போட்டு ரூமில் உள்ள ஜன்னல் கதவு எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, அங்கு யாரும் இருக்காமல் வெளியே வந்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஜன்னல், கதவை திறந்து விட்டு ஃபேனை போட்டு விடுங்கள். கொசுவிரட்டியின் ஸ்மெல் சுத்தமாக போன அறையை பயன்படுத்தலாம்.
மூட்டைப்பூச்சியை ஒழிக்க வெயிலே போதும்!
நம்முடைய உடல் சூடுதான் மூட்டைப்பூச்சிகளின் வாழ்க்கைக்கு ஆதாரம். அவை பெரும்பாலும் படுக்கையறையில் உள்ள கட்டில், தலையணை, பெட்ஷீட், அங்குள்ள சந்து, குட்டி குட்டி பொந்துகளில் சென்று மறைந்து கொள்ளும். ஆண்டுக்கு ஒரு தடவை அல்லது நேரம் கிடைக்கும்போதெல்லாம், கால்கூட வைக்க முடியாத உச்சி வெயிலில் படுக்கை விரிப்புகள் முதற்கொண்டு கட்டில் வரை அனைத்துப் பொருட்களையும் காய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் வெயில் சூட்டுக்கு மூட்டைப் பூச்சி இறந்து போகும். இது போக ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை போரக்ஸ் பவுடர் கலந்து எங்கெல்லாம் மூட்டைப்பூச்சி இருக்கிறதோ அங்கெல்லாம் தெளிக்க வேண்டும். போரக்ஸ் பவுடரை உண்ணும் மூட்டைப்பூச்சிகள்... உடனே இறந்து போகும். பிறகு, அங்குள்ள போர்வை, தலையணைகளை வெயிலில் காய வைத்து, உதறி மறுபடியும் உபயோகிக்கலாம். தண்ணீரை கை பொறுக்க முடியாத சூட்டில் சுட வைத்து, மூட்டைப் பூச்சி இருக்கும் இடங்களில் ஊற்றினாலும் அவை உடனே இறந்து போகும்.
ஈக்களைத் துரத்தும் புதினா!
புதினா இலையைக் கசக்கி அந்தச் சாறை தெளித்தாலோ அல்லது அந்த இலைகளைத் தூவி விட்டாலோ ஈக்கள் வராது. யூகலிப்டஸ் இலையைத் தோரணமாக கட்டி தொங்கவிடுவது, யூகலிப்டஸ் சாறை தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் தெளிப்பது போன்ற செயல்களாலும் ஈக்கள் வருவதைத் தடுக்கலாம்.
எலியை பொறி வைத்து மட்டுமே பிடிக்க முடியும். பூச்சிகள் வராமல், ஒட்டடை அடித்து வைத்திருந்தாலே போதும்... பல்லிகள் வராது. அவற்றுக்கான உணவான பூச்சிகள் இல்லை எனும்போது... பல்லிகளுக்கு ஏது வேலை?!'' என்று அழகாகக் கேட்டார் செல்வம்.
உண்மைதானே!

என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்

 ''நான் சென்னையைச் சேர்ந்த வாசகி. 'அவள் விகடன்' கட்டுரை ஒன்றில், தாய்ப்பால் பற்றி... குறிப்பாக சீம்பால் தருவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்ததை படித்த நான், என் பிரசவத்தில் அதைத் தவறாமல் கடைபிடிக்கக் காத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் சுகப்பிரசவமான எனக்கு நேர்ந்த அனுபவமோ, கசப்பானது. 'சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்' என்று அவள் விகடனில் படித்திருந்ததைச் சொல்லி, பாலூட்டுவதற்காக என் குழந்தையைத் தரும்படி நர்ஸிடம் கேட்டேன். 'ரூம் இல்லை' என்று ஏதேதோ சாக்கு சொல்லி, என் குழந்தை என் கையில் கிடைப்பதற்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

அதன்பிறகும் தீரவில்லை பிரச்னை. குழந்தைக்கு நான் பாலூட்டியும் அது அழுகையை நிறுத்தவில்லை. நர்ஸ், 'சுத்தமா பால் இல்ல, ஏன் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்குறீங்க?' என்று கடிந்ததுடன், பிரபலமான பால் பவுடரின் பெயரைச் சொல்லி, அதை கலக்கி குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். எனக்கு பால் ஊறுவதையும், குழந்தை அதை பருகுவதையும் நான் உணர்ந்ததால், 'எனக்கு பால் இருக்கு' என்றேன். என் சொந்தபந்தங்களும் அந்த நர்ஸுடன் சேர்ந்துகொண்டு, 'அவளுக்கு பாலே இல்ல' என்று பேச ஆரம்பித்தனர். ஆனாலும் நான் பால் பவுடரை கொடுக்க அனுமதிக்காமல், நானே பாலூட்டினேன். மறுநாள் காலை வந்த குழந்தை நல மருத்துவர், 'பால் சுரக்குதே... குட்! விடாம ஃபீட் பண்ணுங்க... அப்போதான் பால் நன்றாக ஊறும்!' என்று சொன்னபோதுதான்... எனக்கு நிம்மதி பிறந்தது.

இப்படித்தான் தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்'. இந்தச் சமயத்தில் தாய்ப்பால் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை அளித்தால், பிரசவிக்கும் இளம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்குமே!''

- மதுரையைச் சேர்ந்த வாசகி அகிலாவின் இந்தக் கடிதத்தை, சென்னை, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆர்.எஸ். முன் வைத்தோம். ''இத்தனை இடையூறுகளுக்கு இடையேயும் தன் கடமையில் உறுதியாக இருந்து, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வாசகி பாராட்டுக்குரியவர்!'' என்று சொன்ன டாக்டர், தாய்ப்பால் சுரப்பு பற்றிய விளக்கத் தகவல்களை வழங்கினார்.

ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!

''முதலில் நான் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை', 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை' என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்' என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத் தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.

பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு', 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு', 'உனக்கு பால் இல்ல', 'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல' போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர் களாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அங் கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.

மார்பகக் காம்பு... கவனம்!

குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.  

சீம்பால் முக்கியம்!

குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே' என்று கவலைப்பட வேண்டியதில்லை.

பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.

அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!

அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ' என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.

பால்சுரப்பு அதிகரிக்க..!

அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,  

தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!

தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள் நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.

எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...

''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்' என்கிற அன்பையும் உறுதியையும் தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று அன்பான அறிவுரையையும் தந்தார் முத்தாய்ப்பாக!

பாஸிட்டிவ் எண்ணங்கள் புற்று நோய் சிகிச்சையை சுலபமாக கடக்க வைத்தன.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய், குறிப்பாக... மார்பகப் புற்று நோய் பற்றி 'அவள் விகடன்' அடிக்கடி தரும் விழிப்பு உணர்வுக் கட்டுரை களைத் தொடர்ந்து படித்து வருபவள் நான். ஆனால், நானும் ஒருநாள் மார்பகப் புற்றுநோயாளி ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. என்றாலும், அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு, இன்று அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிற தோழிகளுக்கும் நன்நம்பிக்கை தருவதற்காக, இக்கடிதத்தை மன மற்றும் உடல் தெம்புடன் எழுதுகிறேன்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மிளகு சைஸில் என் வலது மார்பில் ஒரு கட்டி வளர வளர, கலவரமானது மனம். கூச்ச சுபாவத்தால் மருத்துவரிடம் செல்லத் தயங்கியவளை, உறவுகள் எச்சரித்து மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மேமோகிராம், பயாப்ஸி பரிசோதனைகளின் முடிவில், மார்பகப் புற்று உறுதியானது. பித்துப் பிடித்தவள் போல் ஆனேன். தனிமையைத் துணையாக்கினேன். சாகும் நாள் நெருங்கிவிட்டதுபோல் தோன்றியதால், வாழும் ஆசை அதிகமானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், நிலைமை கைமீறி விடும் என்ற மருத்துவரின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. 'பிழைப்போம்' என்கிற நம்பிக்கை முழுதாக இல்லை. விரக்தியோடு சிகிச்சைக்குத் தயாரானேன்.
'கட்டி, 5 செ.மீ. அளவுக்கு வளர்ந்திருப்பதால் மார்பகத்தை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று டாக்டர் சொன்னபோது, ஏதோ அவமான கரமான விஷயம் நடக்கப்போவது போல நெஞ்சு இன்னும் விம்மியது. அறுவை சிகிச்சைக்கு முன் மூன்று 'கீமோ தெரபி' கொடுத்தால் கட்டியின் அளவு சிறியதாகிவிடும், பின் அகற்றுவது எளிது என்று சொன்ன டாக்டர், சிகிச்சையை ஆரம்பித்தார்.
மருத்துவமனையில் முதல் 'கீமோ' கொடுக்கப்பட, மறுநாள் வீட்டுக்கு வந்தேன். ஒரே வயிற்றுப்போக்கு, வாந்தி. ஒருவாய் சாப்பாடுகூட இறங்கவில்லை. ஒருவழியாக மூன்று 'கீமோ' கொடுப்பதற்குள் வாழ்க்கை நரகமாவதை உணர்ந்தேன். என் கேசம், புருவமெல்லாம் மொத்தமாக உதிர்ந்து மொட்டைத் தலையாகி, உடல் கறுத்து, முகம் சிறுத்து, பற்கள் கறை படிந்து கூன்போட்ட உடலானேன். 'சீக்கிரம் செத்தால் பரவாயில்லை' என்று நினைக்க வைத்தது என் கோலம். ஆனால்... கணவர், குழந்தைகள், தாய், சகோதரிகள், சகோதரர்கள் என்று என்னைத் தாங்கிய உறவுகளின் பாசம், இதிலிருந்து மீண்டு இந்த வாழ்க்கையை இவர்களோட வாழ வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்தது.
எங்கள் குடும்பத் தோழி ராதா மற்றும் அவர் கணவர் ஆகியோர் என்னைப் பார்க்க விரும்ப, அவர்களை என் தம்பி அழைத்து வந்தான். ராதா, மார்கப்புற்றால் பாதிக்கப்பட்டு மார்பகத்தை சிகிச்சை மூலமாக நீக்கிவிட்டவர். அதிலிருந்து புற்று நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை இந்தத் தம்பதி ஒரு தொண்டாகவே செய்து வருகின்றனர். நம்பிக்கை வறண்டு போயிருந்த என் நெஞ்சத்துக்கு... இருவரும் புத்துயிர் தந்தனர். 'பிள்ளைகளோட விளையாட்டில் இருந்து... பிடிச்ச சினிமா பாட்டு வரை சுத்தி இருக்கற உலகத்தை ரசிங்க. 'நான் குணமாகிடுவேன், நிச்சயம் குணமாகிடுவேன்'னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருங்க. உயிரைவிட... மார்பு பெருசா என்ன? சந்தோஷமா, நம்பிக்கையோட ஆபரேஷனுக்கு ரெடி ஆகுங்க' என்றனர். மனதில் ஒரு துணிச்சல் பிறந்தது; மனம் தெளிவானது. அறுவை சிகிச்சையும் முடிந்தது. ஆனால், 'எனக்கு ஏன் இப்படி?' என்கிற கேள்வி என்னை விடவில்லை.
'மனதளவில் கோபம், வெறுப்பு, விரக்தி போன்ற உணர்ச்சிகளை, உரம் போட்டு வளர்த்து வருபவர்களை எந்த நோயும் எளிதில் தாக்கும். அதற்கு புற்றுநோயும் விதிவிலக்கல்ல...'
- ஆஸ்பத்திரியில் எனக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்த ஒருவர் சொன்ன இந்த வார்த்தைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடி முதல் முறையாக என்னை அலசிப் பார்த்தேன். கோபம், வெறுப்பு, விரக்தி எல்லாமே எனக்கு நிறையவே இருந்தது. மன்னிக்கும் குணம் மருந்துக்குகூட இருந்தது இல்லை. யோசித்தேன், நிறைய யோசித்தேன். எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் - புரிந்தது; அன்புதான் உண்மை யானது - புரிந்தது; அன்பு மட்டும்தான் நோய் தீர்க்கும் மருந்து - நன்றாகவே புரிந்தது. என் உறவு களும், நான் ஆசிரியையாக வேலை பார்க்கும் பள்ளி யின் மாணவர்களும் எனக்காக பிரார்த்தனை செய்து அனுப்பிக் குவித்த எஸ்.எம்.எஸ்-களும் அதை ஆழமாகப் புரிய வைத்தன.
அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று 'கீமோ'க் கள், 30 முறை ரேடியேஷன் சிகிச்சை. ஆனால், எனக்குள் நிரம்பிவிட்ட பாஸிட்டிவ் எண்ணங் கள், அந்த சிரமமான சிகிச்சையை சுலபமாக கடக்க வைத்தன. இதோ... நான் மறுபடியும் ஆசிரியப் பணியில் சேர்ந்துவிட்டேன்.
இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தோழிகளே... நாளை, உங்களையும் இதேபோல 'மீண்ட கதை' எழுத வைக்க காத்திருக்கிறது காலம். நம்பிக்கையோடு இருங்கள்!

Sunday, July 28, 2013

மாடர்ன் வெட்டிங் ஆர்ட் போட்டோகிராஃபி

இப்போவெல்லாம் கல்யாணத்துக்கு அழகான மாப்பிள்ளை, பொண்ணைப் பிடிக்கிறாங்களோ இல்லையோ, அழகான போட்டோ பிடிச்சே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் இரு வீட்டாரும். 'வெட்டிங் ஜர்னலிஸம்', 'மாடர்ன் வெட்டிங் ஆர்ட் போட்டோகிராஃபி', 'வெர்ஸடைல் போட்டோகிராஃபி', 'தேர்டு ஆங்கிள் போட்டோகிராஃபி' என இதற்குப் பலப் பல நாமகரணம் வேறு சூட்டி, கலைத் தாகம் எடுத்து, வித்தியாச ஆங்கிளில் படங்களாக எடுத்துக் குவிக்கிறார்கள் நம் புகைப்படக் கலைஞர்கள்.

சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த நண்பரின் திருமணத் துக்குச் சென்றிருந்தேன். ஏற்கெனவே இரண்டு போட்டோகிராஃபர்கள் மணமேடைக்கு நேராக நின்று, 'சின் அப்', 'ஸ்மைல் ப்ளீஸ்' எல்லாம் சொல்லி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர் மாப்பிள்ளை வீடு, இன்னொருவர் பெண் வீடு என்பதை அவர்கள் படம் எடுக்கும் நபர்களைவைத்தே யூகிக்க முடிந்தது. ஆனால், மூன்றாவதாகத் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல ஒரு கடும் தேடலோடு வித்தியாசமாக ஒருவர் மட்டும் கேமராவோடு, கூட்டமாகக் கூடி நிற்கும் இடங்களில் புகுந்து, உருண்டு, புரண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

கொட்டாவி விடுபவர், காது குடையும் குழந்தை, மந்திரம் ஓதும் ஐயர் என்று விடாமல், படம் எடுத்துத் திரும்பியவரை மடக்கி, 'யாரு பாஸ் நீங்க? ஏன் பொண்ணு மாப்பிள்ளையை எடுக்காம இங்கே பல்லு குத்துறதையும் வெத்தலை பாக்கு போடுறதையும் வளைச்சு வளைச்சுப் படம் எடுக்கு றீங்க?' என்று கேட்டேன். 'ஹலோ நான் வெட்டிங் ஜர்னலிஸ்ட்... வித்தி யாசமான ஆங்கிள்ல மேரேஜைக் கவர் பண்றேன்...' என்றார் ஸ்டைலாய். அப்புறமாகத்தான் தெரிந் தது, மாப்பிள்ளையான நம் நண்பர் பெங்களூருவில் இருந்து ஸ்பெஷலாய் இந்த போட்டோகிராஃபரை அழைத்து வந்த கதை.

''நல்லா கல்யாணம் ஃபங்க்ஷன் போகும்ணே. இவங்க என்ன பண்ணு வாங்கனா, பொண்ணோட கழுத்துல மாப்பிள்ளை தாலியைக் கட்டுறப்போ அப்படியே மேடைக்குப் பக்கவாட்டுல உட்கார்ந்து கெட்டிமேளம் வாசிக்கிற வரோட விரல்களையும், அட்சதை தட்டையும் ஃபோகஸ் செய்வாங்க. மாப்பிள்ளை பொண்ணெல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸ்ல இருப் பாங்க. அந்த நேரத்துல யாராச்சும் கண்ணீர்விட்டாங்கனா போச்சு. அதை டைட் க்ளோஸ்-அப்ல வெச்சு மத்த எல்லோரையும் அவுட் ஆஃப் போகஸ்ல விட்ருவாங்க. பொதுவா தாலி கட்டுறதை நேருக்கு நேரா படம் எடுக்கிறதைத்தான் நாம பார்த்திருப் போம். இப்போ ரொம்ப அட்வான்ஸ்டு. பருந்துப் பார்வையில படம் எடுக்குறாங்களாம். புரியலையா?

முதல்நாளே மண்டபத்தை நல்லா நோட்டம் விட்டு ஆர்ட் டிபார்ட்மென்ட் கணக்கா கயிற்றைக் கட்டி, பொண்ணு மாப்பிள்ளை தலைக்கு மேலே கயித்துல கம்பியைக் கட்டி, அதுல நின்னெல்லாம் போட்டோ எடுத்து சாகசம் பண்ணுவாங்க. எல்லாம் ஆர்ட் போட்டோகிராஃபியாம். சாம்பார் கொதிக்கிறதையும் மாப் பிள்ளை வியர்வையைத் துடைக் கிறதையும் க்ளோஸ்-அப்புல எடுத்து ஆல்பம் போட்டுப் பார்த்தா நல்லாவா இருக்கும்?'' என்று அலுத்துக் கொண்டார் நம் பழமைவாதி நண்பர் ஒருவர்.

வெட்டிங் ஜர்னலிஸம் போட்டோகிராஃபியில் எக்ஸ்பர்ட்டான நம் நண்பர் சதீஷ், ''இது அழகியலுக்காக எடுக்கப் படுபவை. ஃபாரீன்ல எப்பவோ வந்தாச்சு. வட இந்தியாவுல சில வருடங்களுக்கு முன் இது ரொம்ப பாப்புலர். பெங்களூருல இந்த வகை போட்டோகிராஃபி பண்றதுக்குனே பல பேர் இருக்காங்க. லட்சங்கள்ல சார்ஜ் பண்ணுவாங்க. இப்போ சென்னையிலும் இந்த கல்ச்சர் வந்தாச்சு. நானும் இது சம்பந்தமா பல டெக்னிக்கல் விஷயங்களைக் கத்துக்கிட்டு ஹாபியா எடுத்துக்கொடுக்கிறேன். காலம் காலமா கட்டுப்பெட்டித்தனமா இருக்கிற விஷயங்களை உடைக்கணும்கிறதுதான் இதோட கான்செப்ட். யாரும் யோசிக்காத இன்னொரு கோணத்துல, நாம ரெகுலராப் பார்க்கிற ஒரு விஷயத்தைப் பார்த்தாலே நாம சிலிர்ப்பாவோம். எல்லோரிடமும் இந்த டேஸ்ட் இருக்கு. அந்த டேஸ்ட்டோட புகைப்படக் கலையும் இணைந்ததால உருவான கலை வடிவம்தான் இந்த வகை புகைப்படங்கள்!'' என்றார்.    

அண்மையில் ராமநாதபுரத்தில் நடந்த நண்பனின் கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். மணமகனுக்கு மணமகள் சாப்பாடு ஊட்டிவிடும் காட்சியை வித்தியாச ஆங்கிளில் ஒருவர் எடுத்துக்கொண்டிருந்தார். அதாவது இலையில் இருக்கும் ஜிலேபியை ஃபோகஸ் செய்து பின்னால் ஊட்டிவிடும் இருவரையும் அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்து எடுத்துக்கொண்டிருந்தார். கலர்ஃபுல் ஜிலேபி மெகாபிக்சலில் சிவப்பாய்த் தகதகக்க அரக்கு கலரில் யார் மாப்பிளை, யார் பொண்ணு எனத் தெரியாத வண்ணத்தில் ஆல்பத்தில், நாளை ஊட்டிவிடும் காட்சியைப் பார்த்து அவர்களது சொந்தக்காரர்கள் பரவசமாவார்களா, அல்லது கலவரமாவார்களா தெரியவில்லை. இதெல்லாவற்றையும்விட ஒரு பெரிய கொடுமை, கை கழுவும் இடத்தில்வைத்து மாப்பிள்ளையும் பொண்ணும் தாங்கள் சாப்பிட்ட கைகளைக் கழுவும்போது கைகளுக்கு டைட் க்ளோஸ்-அப் ஷாட் வைத்து சுட்டுத் தள்ளினார். விட்டால் வாய் கொப்பளிக்கவைத்து கடவாய் பல்லுக்கு ஒரு டைட் ஜூம் போவார் போல இருந்தது. ம்ஹும்... நான் அவுட் ஆஃப் போகஸ் ஆனேன்!

Saturday, July 27, 2013

தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு?

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.

தண்ணி கிடைக்கல...:



ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.


ரூ 4 ஆயிரம் :



இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.


வரவேற்பு:



நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?

The crime is the same!

A worried woman went to her gynecologist and said: 'Doctor, I have a serious problem and desperately need your help! My baby is not even 1 year old and I'm pregnant again. I don't want kids so close together.

So the doctor said: 'Ok and what do you want me to do?'

She said: 'I want you to end my pregnancy, and I'm counting on your help with this.'

The doctor thought for a little, and after some silence he said to the lady: 'I think I have a better solution for your problem. It's less dangerous for you too.'

She smiled, thinking that the doctor was going to accept her request.

Then he continued: 'You see, in order for you not to have to take care 2 babies at the same time, let's kill the one in your arms. This way, you could rest some before the other one is born. If we're going to kill one of them, it doesn't matter which one it is. There would be no risk for your body if you chose the one in your arms.

The lady was horrified and said: 'No doctor! How terrible! It's a crime to kill a child!

'I agree', the doctor replied. 'But you seemed to be OK with it, so I thought maybe that was the best solution.'

The doctor smiled, realizing that he had made his point.

He convinced the mom that there is no difference in killing a child that's already been born and one that's still in the womb.

The crime is the same!

Realizing this was true, the woman withdrew her request and soon found the love and support she needed. The mother and child are both alive and well today.  

Together we can help save precious lives!

"Love says I sacrifice myself for the good of the other person. Abortion says I sacrifice the other person for the good of myself."

Wednesday, July 24, 2013

ஜி டி நாயுடு பஸ்

கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Tuesday, July 23, 2013

சோதனைக்குழாய் குழந்தை - நம்மிடமிருந்து தான் பிறநாடுகள் கற்றுள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை இன்றைய அறிவியல் தான்,  சோதனைக்குழாய் பிறக்க காரணமாக இருந்ததாக பெருமையடித்துக் கொள்பவர்கள், அந்தப் பெருமையை  நம் முன்னோருக்கு அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். 

மகாபாரதத்தில் காந்தாரி என்ற பாத்திரம்  வருகிறது. இவள் திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி.  கணவனுக்கு கண்தெரியவில்லை என்பதற்காக, தன் கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்வின் இறுதிநாள் வரை அவிழ்க்காத மாதரசி. இவள் தனது கர்ப்பத்தை 108 பானைகளில் போட்டு  மூடி வைத்தாள். அவற்றில் பல மூலிகைகள் இருந்தன. அந்த மூலிகைகளைக் கொண்டே 100 மகன்களையும், ஒரு மகளையும் பெற்றாள். அப்படியானால், இதிகாச காலத்திலேயே நமது தேசம் இதற்கான அடிகோலை இட்டுவிட்டது. 

அது போகட்டும்! சரித்திர காலத்திற்கு வருவோம். மவுரியர்களின் ஆட்சிக்காலம் நம் தேசத்தில் நடந்த வேளை...சந்திரகுப்தன் என்ற புகழ்பெற்ற அரசரின் மனைவி கர்ப்பமானாள். கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே! ராணி, இறந்துபோன சில நிமிடங்களுக்குள் அவளது கருப்பையிலிருந்து கருவை எடுத்தார் அரண்மனை வைத்தியர்  சுஸ்ருதர் என்பவர். அந்தக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையில் செலுத்தினார். பத்துமாதங்கள் பாதுகாத்தார். ஆட்டின் வயிற்றில் இருந்து அழகான குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தையே பிந்துசாரர். பிந்துசாரம் என்றால் ஆடு அல்லது மான். 

எவ்வளவு பெரிய அற்புத சாதனை!  விஞ்ஞானத்தை நம்மிடமிருந்து தான் பிறநாடுகள் கற்றுள்ளன. ஆனால், அவர்கள் நல்ல நேரம்...அவர்களை நாமும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான்!

உன்னையெல்லாம் கும்பிட்டு என்ன பயன்

பலனைச் சிந்திக்காமல் கடமையாற்றுவது இருக்கட்டும்; கடமையைச் செய்யாமலே பலனை எதிர்பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ஓர் ஊரில் ஏழைக் குடியானவன் ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன், ''கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!'' என்று புலம்பிவிட்டுப் போனான்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ''பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் வந்து உன்னை வணங்கிட்டுப் போற எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இன்னிக்கு லாட்டரியில இரண்டு லட்சம் விழுந்திருக்கு. தினம் வந்து கும்பிட்டுட்டுப் போற என் விஷயத்துல நீ கொஞ்சம் கண் திறக்கக் கூடாதா?'' என்று குறைப்பட்டுக்கொண்டான்.

மேலும் சில நாட்கள் கழிந்திருக்கும். இந்த முறை வந்தவன், பிள்ளையாரைத் திட்டவே ஆரம்பித்துவிட்டான். ''நீயெல்லாம் ஒரு கடவுளா? பாரு... இன்னிக்கு மேல் வீட்டுக்காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு. இதுவரைக்கும் எனக்கு ஒரு நயா பைசாகூட நீ அருள்பாலிக்கலையே? உன்னையெல்லாம் கும்பிட்டு என்ன பயன்...''  

அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டு, ஏகக் கடுப்புடன் ஒலித்தது அசரீரி... ''மடையா! முதல்ல போய் ஒரே ஒரு லாட்டரிச் சீட்டாவது வாங்கித் தொலை! அப்புறம் வந்து புலம்பு!''

 ''ஒருவன் தனது லட்சியத்தை அடையணும்னா வெறும் நம்பிக்கை மட்டும் போதாது; தன்னம்பிக்கை வேண்டும். வெறும் உழைப்பு என்பது வீண்; திட்டமிட்ட உழைப்பு, அதாவது 'ப்ளானிங் வொர்க்'தான் தேவை. அதே போன்று, வெறுமே முயற்சி செய்து பார்த்தால் மட்டும் போதாது! எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும்!''

அப்போது நமது வெற்றி எளிதில் சாத்தியமாகிவிடுமா?

அது பற்றி நாம் சிந்திக்கவே தேவை இல்லை, கீதாசாரம் சொல்கிறது... 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!' என்று.

'அதெப்படி? சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியுமா என்ன?!' - மேலோட்டமாகப் பார்த்தால், இப்படித்தான் கேட்கத் தோன்றும். ஆனால், கீதாசார வாக்கியம் இந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. 

நல்லதோ கெட்டதோ, நாம் எதைச் செய்தாலும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று விஞ்ஞானமும் சொல்கிறதே! ஆக, பலன் நிச்சயம் என்பதால், அதைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; விளைவுகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் கடமையைச் செவ்வனே செய்யுங்கள் எனப் போதிக்கிறார் பரமாத்மா.

கலியுகத்தை எவ்வாறு தாண்டிச் செல்வது?

துவாபர யுகத்தின் முடிவில், நாரதர் பிரம்மாவிடம் சென்றார்.

''தந்தையே! எல்லா இடங்களிலும் சுற்றி வருகின்ற நான், கலியை (தோஷங்கள் மிகுந்த கலியுகத்தை) எவ்வாறு தாண்டிச் செல்வேன்?' என்று கேட்டார்.

அதற்கு பிரம்மதேவர், ''நாரதா! எல்லா வேதங்களின் ரஹஸ்யமான தாத்பர்யத்தைச் சொல்கிறேன், கேள். அதனால், நீ கலியின் துன்பத்தை அடைய மாட்டாய். பகவானும் ஆதி புருஷனுமான நாராயணனின் நாமத்தைச் சொன்ன மாத்திரத்தில், கலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!'' என்றார்.

''அப்படிப்பட்ட நாமம் எது?'' என நாரதர் கேட்க... அதற்கு பிரம்மா,

' 'ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!'

என்ற இந்தப் பதினாறு நாமங்களையும் சேர்த்துச் சொன்னால், கலியின் தோஷம் நாசமாகிவிடும். சகல வேதங்களும் இதைத் தவிர வேறு வழி இல்லை என்றே கூறுகின்றன'' என்று பதில் சொன்னார்.

'கலி சந்தரனோபநிஷத்' சொல்லும் கதை இது.

காலம் காத்திருக்காது!

சோக மரத்தடியில் வீற்றிருக்கிறாள் சீதாப்பிராட்டி. அவள் காதருகில் பொன்னிறத் தும்பி ஒன்று பறந்து வந்து ரீங்கரித்து விட்டுப் போகிறது. அதைப் பார்த்த திரிஜடை... 'அன்னையே! மிக நல்ல சகுனம் இது. கட்டாயம் உங்களுக்கு இன்று ஒரு நல்ல சேதி வரும்!'என்றாள்.

சீதையின் முகத்தில் விரக்தி கலந்த சிரிப்பு. என்ன நல்ல சேதி வரப் போகிறது இங்கே? ராவணன் இப்போதுதான் ஒரு மாத கால அவகாசம் தந்து, அச்சுறுத்தி விட்டுச் சென்றிருக்கிறான். ராமபிரான் வந்து அவளை மீட்பதற்கான எந்த அறிகுறியையும் எட்டுத் திக்கிலும் இந்தக் கணம் வரை காணோம். இனியும் நம்பிக்கையோடு காத்திருப்பது தேவைதானா?

சீதையின் மனம் அளவற்ற சோர்வை அடைகிறது. அவள் எந்த அசோக மரத்தடியில் வீற்றிருக்கிறாளோ, அதே மரத்தின் கிளையன்றில் அனுமன் மிகச் சிறிய வடிவெடுத்து அமர்ந்து இருப்பதை அவள் அறியவில்லை.

அரக்கிகள் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்ததும், மெள்ள எழுந்திருக்கிறாள். உயிரை விட்டுவிடுவதே மேலானது என்று முடிவெடுக்கிறாள். 'போதுலா மாதவிப் பொதும்பர்' எய்தி தன் நீண்ட கூந்தலாலேயே சுருக்கிட்டு உயிர்விட எத்தனிக்கிறாள். அந்த முக்கியமான கணத்தில் 'ராம ராம' என்று ராம நாமத்தை உச்சரித்தபடி அவள் முன் குதித்துத் தோன்றி, அவளின் உயிரைக் காக்கிறான் ஆஞ்சநேயன்.

ஒருகணம், ஒரே ஒரு கணம் அனுமன் தாமதித்திருந்தாலும் சீதையின் உயிர் பிரிந்திருக்கும். இதிகாச நாயகனின் மனைவி மீட்கப்படாமலே மாண்டிருப்பாள்.

யுத்த களத்தில் ராம லட்சுமணர்கள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். 'உடனடியாக சஞ்ஜீவி மூலிகையைக் கொண்டு வா! அப்போதுதான் இவர்களைப் பிழைக்க வைக்க முடியும்' என அனுமனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

மூலிகையை மலையில் தேடக்கூட நேரமில்லை; மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து, அந்த சாகசச் செயலின் மூலம் ராம லட்சுமணர்களின் உயிரைக் காப்பாற்றுகிறான் ஆஞ்சநேயன். 'எனக்கு மீண்டும் உயிர்கொடுத்த நீ, என் தந்தையைப் போன்றவன் அல்லவா!' என்று ராமன் ஆஞ்சநேயரை அணைத்துக் கொள்கிறான். ஒருகணம் அனுமன் தாமதித்திருந்தால், ராம லட்சுமணர்களை இதிகாசம் இழந்திருக்கும்.

''பதினான்கு ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் ராமன் அயோத்தி வந்து சேரவில்லையே? உயிரை விட்டுவிட வேண்டியதுதான். பரதன் ஒரு முடிவு செய்து நெருப்பு மூட்டிவிட்டான். நெருப்பை மூன்று முறை சுற்றிவிட்டு நெருப்பில் பாய்ந்துவிட வேண்டியதுதான். கூப்பிய கரங்களுடன் கடைசி முறையாக வலம் வரத் தொடங்குகிறான், பரதன்.  அந்தக் கணத்தில் 'ஜெய் ஸ்ரீராம்!' என்று கம்பீரமான ஒரு முழக்கம் கேட்கிறது. எல்லோரும் வியப்போடு, குரல் வந்த திசை நோக்கி விண்ணை அண்ணாந்து பார்க்கிறார்கள். 'ராமபிரான் வந்துகொண்டிருக்கிறான்' என்ற நல்ல சேதியோடு ஆஞ்ச நேயன் மண்ணில் குதிக்கிறான்.

அவன் மட்டும் ஒருகணம் தாமதித்திருந்தால், தசரதனின் இறப்புக்கு அழுத அயோத்தி, பரதனின் மறைவுக்கும் அழத் தொடங்கியிருக்கும்.

ஆம். வாழ்வில் ஒவ்வொரு கணமும் முக்கியம்தான்.

உயரமானவர்கள், குள்ளமானவர்கள், சிவப்பானவர்கள், கறுப்பானவர்கள், ஆண்கள், பெண்கள் என ஏராளமான வேறுபாடுகளோடு மனிதர்களைப் படைத்திருக்கிறது, இயற்கை. ஆனால், அரசன் முதல் ஆண்டி வரை அனை வருக்கும் அது ஒரே ஒரு கொடையை மட்டும் சமமாக வழங்கியிருக்கிறது. அதுதான் 'நேரம்'!

யாராயிருந்தாலும் எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். அந்த நேரத்தை எவனொருவன் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்துகிறானோ, அவன் ஆண்டியாக இருந்தாலும் அரசனாகிவிட முடியும். அப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்தாதவன் அரசனாக இருந்தாலும்,

அவன் ஆண்டியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மதிப்பு மிக்க இந்த நேரம் என்கிற அரிய செல்வத்தை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? பல கூட்டங்கள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாவதாக அழைப்பிதழில் போட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான கூட்டங்கள் ஆறரைக்கு மேல்தான் தொடங்குகின்றன. 'அப்படியானால் ஆறரைக்குத் தொடங்குவதாகவே அச்சிடலாமே?' என்று கேட்டால், கூட்ட அமைப்பாளர்கள் சொல்கிறார்கள்... 'ஆறரை என்று அச்சிட்டால், கூட்டத்தை 7 மணிக்குத்தான் தொடங்க வேண்டியிருக்கும். மக்கள் குறிப்பிட்ட நேரத் துக்குக் கால் மணி, அரைமணி கழித்துத்தான் வந்து சேர்கிறார்கள்!'

நம் இந்தியர்களிடம் ஏன் இப்படி ஒரு மனப்பான்மை? இந்தியர்களின் கால தாமதத்தைக் குறிக்கும் வகையில் 'இந்தியன் பங்சுவாலிட்டி' என்றே ஒரு சொற்றொடர் புழக்கத்தில் வந்துவிட்டதே!

கால தாமதத்தைச் சிறிதும் அனுமதிக்காத பெரியவர் ஒருவர், ஓர் அமைப்பை நடத்திவந்தார். அந்த அமைப்பின் ஆண்டு விழா, குறிப்பிட்ட நாளன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. அரங்கின் வாயிலில் நின்றுகொண்டிருந்த அவர் சரியாக 10 மணிக்கு அரங்கின் வெளிக் கதவைப் பூட்டிவிட்டார். ஓர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தார் முக்கியமான பார்வையாளர் ஒருவர். அவர் கால் ஊனமானவரும்கூட. உள்ளே செல்ல அனுமதி வேண்டினார். ஆனால், இந்தப் பெரியவர் மறுத்துவிட்டார்.

'தனது கால் ஊனத்தைக் கணக்கில் கொண்டாவது அனுமதிக்கக் கூடாதா?' என்று அவர் வேண்டினார். 'அப்படி அனுமதித்தால், பிறகு அதையே ஒரு சாக்காக எங்கும் சொல்லிச் சலுகை பெறும் மனப்போக்கு உங்களுக்கு வரும். அது தவறு. கால் ஊனமானாலும், எல்லா வகையிலும் நீங்கள் மற்றவர்களுக்கு இணையானவர்தான். வரும் வழியில் ஏதோ இப்போதுதான் உங்களுக்குக் கால் ஊனமாகவில்லையே? அது எப்போதோ நடந்த விபத்துதானே? எனவே, உங்கள் ஊனத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் சற்று முன்கூட்டியே வீட்டிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும்!' என்றார் பெரியவர்.

மேற்பார்வைக்கு, சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக அவர் நடந்துகொண்ட தாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அது அப்படியல்ல என்று தெரியவரும். நாம் தொடர்ந்து ஏதேதோ சமாதானங்களைச் சொல்லி அடுத்தவர் பெருந் தன்மையை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்துவது தவறு. நம் சொந்த முயற்சியின் பேரில் கம்பீரமாக நிற்க நாம் பழக வேண்டும்.

மாபெரும் அரசியல் தலைவர் ஒருவரை கம்பன் விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார் கம்பனடிப்பொடி சா.கணேசன். அந்தத் தலைவர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். வந்த தலைவருக்கு அதிர்ச்சி! வேறொருவரைத் தலைவராகக் கொண்டு விழா தொடங்கப்பட்டு, நடந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி இந்த அரசியல் தலைவர் பார்வையாளராக இருந்து விழாவை ரசித்துவிட்டு விடைபெற்றார். அந்த அளவுக்குக் காலந் தவறாமையில் அளவற்ற கவனம் செலுத்தியவர் கம்பனடிப்பொடி சா.கணேசன்.

பொதுவாக, நம்மிடையே நேர உணர்வு இல்லை என்பதே நிஜம். அலுவலகத்துக்கு ஒருநாள் அல்ல, இரு நாள் அல்ல; எல்லா நாட்களும் தாமதமாக வருபவர்கள் உண்டு. அப்படித் தாமதமாக வருகிறோம் என்பதை அவர்கள் பெரிதாகப் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காகக் கூச்சப்படுவதும் இல்லை. ஆனால், சரியாக அலுவலக நேரம் முடிந்தபின் வெளியே செல்ல மட்டும் பறப்பார்கள்!

'ஓர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததைப் பெரிது படுத்துகிறீர்களே?' என்று கேட்கிறார்கள் பலர். ஐந்து நிமிடம் என்பது சாதாரணமான விஷயமா? ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடம் என்றால், பன்னிரண்டு நாளில் ஒரு மணி நேரம் அல்லவா வீணாகிறது?

சாலை விபத்தில் அடிபட்டுத் தெருவில் கிடக்கிறான் ஒருவன். உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமா, ஓர் ஐந்து நிமிடம் கழித்துச் சேர்க்கலாமே என்று எண்ணுவோமா? உயிராபத்தில் இருக்கும்போது காலத்தின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், மற்ற தருணங்களில் காலத்தின் அருமையை நாம் உணர்வதில்லை.

தாலி கட்டும் முகூர்த்த நேரம், ரயில் புறப்படும் நேரம், விமானம் புறப்படும் நேரம் இவற்றிலெல்லாம் சரியான நேரத்தை அனுசரிக்க நாம் பழகியிருக்கிறோம். ஒரு கணம் தாமதித்தால், ரயில் போய்விடும் என்று ஓடி ஓடி ரயிலைப் பிடிக்கிறோம். வாழ்க்கை ரயிலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கால தாமதத்தால் எத்தனை வாய்ப்புகளை நழுவ விடுகிறோம் என்பதை நாம் உணர்வதே இல்லை.

கிரிக்கெட் மேட்சுகளில் ஒரு பேட்ஸ்மன் அவுட்டா இல்லையா என்பதைத் தீர்மானிக்க... பந்து வருவதையும், பேட்ஸ்மனின் நகர்வையும் எத்தனை நுணுக்கமாக, துல்லியமாக, அங்குலம் அங்குலமாகப் படம் பிடித்துக் காட்டி முடிவு செய்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்களும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்தானே? ஒவ்வொரு மைக்ரோ செகண்டும் எத்தனை முக்கியமானது என்று இதிலிருந்து புரியவில்லையா?

வாழ்க்கை வளம்பெற வேண்டுமானால், காலத்தின் அருமையை எப்போதாவது குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உணர்ந்தால் போதாது; நாள் தோறும், நிமிடம்தோறும், ஒவ்வொரு கணம்தோறும் உணர வேண்டும்.

மகாத்மா காந்தியிலிருந்து அப்துல்கலாம் வரை பெரும் சாதனை புரிந்தவர்கள் அத்தனை பேரும் காலத்தின் அருமையை அப்படி ஒவ்வொரு கணமும் உணர்ந்தவர்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், நாமும் நம் துறையில் இன்னும் எத்தனையோ சாதிக்கலாம்.


திருப்பூர் கிருஷ்ணன், சக்தி விகடன்.

Monday, July 22, 2013

பாருங்க கடவுள் எப்படி புலம்புறார்னு

நம்ம மக்கள் பெரும்பாலானோர் அவங்க வாழ்க்கையில ஒரு முறையாவது கடவுளைத் திட்டியிருப்பாங்க. இன்னும் பலபேர் எனக்கு ஏன் அமெரிக்க அதிபர் பதவி கிடைக்கலே, ஆயா சுட்ட வடை கிடைக்கலைனு கடவுள்கிட்ட தினமும் புலம்புறவங்கதான். நம்மளோட அலப்பறைகள் தாங்காம கடவுள் மனுஷங்களை மாதிரிப் புலம்பினா எப்படிப் புலம்புவார்னு யோசிச்சுப் பார்த்தேன். கடவுள் ரொம்பப் பாவமாத் தெரியுறார் பாஸ்.

''ஒரு எருமை மாடாப் பிறந்திருந்தாக்கூட சந்தோஷமா இருந்திருக்கலாம். இவங்களுக்கு மத்தியில கடவுளா வாழுற கொடுமை இருக்கே... ம்ம்ம்... முடியல்ல!''

''கார் வாங்கணும், பைக் வாங்கணும், வீடு கட்டணும், பரிட்சையில பாஸாகணும்னு தினமும் லட்சம் பேரு வந்து புலம்புறாங்க. நீ ஒழுங்கா படிச்சா, பாஸாகப் போற, அத ஏன் எங்கிட்ட வந்து சொல்ற? நீ போடுற ரெண்டு ரூபா காசுக்கு நான் வந்து பரிட்சை எழுதணும்னு பார்க்கிறியா? நன்னாரித்தனமா இருக்கே?''

''முதல் முதலா, சைக்கிள் வாங்குற அளவுக்கு வசதியைக் கொடு கடவுளேனு வர்றீங்க. சரினு அதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா, அடுத்த நாளே வந்து எல்லோரும் பைக் வாங்கிட்டாங்க, நான் எப்ப வாங்கப் போறேன்னு புலம்ப ஆரம்பிக்கிறீங்க. சரி போனாப் போகுதுனு அதுக்கு வசதிப் பண்ணிக் கொடுத்தா மறுபடி கொஞ்ச நாள்ல வந்து நான் உன்னையே நம்பிட்டிருக்கேனே, ஒரு கார் வாங்குற அளவுக்கு வசதியைக் கொடுக்கக் கூடாதாங்கிறீங்க. சரி, கார் வாங்குற அளவு வசதியைக் கொடுத்தாலாவது சந்தோஷமா இருப்பீங்கனு பார்த்தா, அதுவும் இல்ல. கார் வாங்கின அடுத்த நாளே வந்து ஹெலிகாப்டர் வாங்கிக்கொடு, கப்பல் வாங்கிக்கொடுனு பழம், தேங்காயோட வந்து நிக்க வேண்டியது. எதைக் கொடுத்தாலும் மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிறீங்களே, ஏன்பா உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?''

''கடவுள் கண்ணைக் குத்தும்கிறதை எங்கே இருந்துய்யா கண்டுபிடிச்சீங்க? சின்னப் புள்ளைங்ககிட்ட எல்லாம் சொல்லிப் பயமுறுத்துறீங்களே!''

''எனக்கு இந்தக் காரியம் நடந்தா, உன் உண்டியல்ல 10,000 போடுறேன், மணி வாங்கி வைக்கிறேன், வேல் வாங்கி வைக்கிறேனு வேண்டுறீங்களே, எப்பவாச்சும் நான் உன்னை முழுசா நம்புறேன், அந்தக் காரியம் வெற்றியாகும்னு போயிருக்கீங்களா? ஒரு வேளை அந்தக் காரியம் நடக்கலைனா பணம் வீணாப் போயிடுமேனு பயம். அவ்ளோ நம்பிக்கை. அவ்ளோ வெவரம் நீங்க!''

''எனக்கு அது வேணும் இது வேணும்னு கேக்கிறவனப் பார்த்தாக்கூடப் பயமில்லை. அடுத்தவன் நல்லா இருக்கானே, அவன் எப்படியாவது உருப்படாமப் போயிடணும்னு வேண்டுறவனைப் பார்த்தாதான் கண்ணைக் கட்டிருது. நீங்க சொல்லுற எதுக்குமே பதில் சொல்லாம இருக்கேன்கிறதுக்காக என்ன வேணாலும் வேண்டுவீங்களா? என்னதான்யா நினைச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல?''

''கடவுளைக் காட்டுறேன், கடவுள் கிட்டப் பேசுறேனு சொல்ற சாமியார்கிட்ட கும்பல் கும்பலாப் போய் ஏமாந்து போறீங்களே, அதுக்கப்புறமாவது திருந்துறீங்களா?''

''இதெல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, கடவுள் புலம்பினா இப்படித்தான் புலம்புவார்னு எழுது ரானுங்க பாருங்க... அவனுங்களை...''

பாருங்க கடவுள் எப்படி புலம்புறார்னு, பாவம்ல!

Sunday, July 21, 2013

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே!

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா? 

''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.

இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.

பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.

சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.

அவசரப்பட்டால் நஷ்டமே என்பதைப் புரிந்துகொண்டால் எப்போதும் நல்லது.

கடன் அட்டையில்,(Credit Card) உள்ள பிரச்னைகள்

கடன் அட்டையில்,(Credit Card) உள்ள பிரச்னைகள் என்ன, எவ்வாறு விழிப்போடு இருக்கவேண்டும்.

என்னென்ன பிரச்னை?

கடன் அட்டை சம்பந்தப்பட்ட பொதுவான பிரச்னைகளைப் பட்டியலிடுவோம்.

1. சேர்க்கைக் கட்டணம் (Membership fee), ஆண்டுக் கட்டணம்(Annual fee) ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளுதல்.

2. காலதாமதக் கட்டணம் (Late payment fee) நிதிக் கட்டணம் (Finance charge) ஆகியவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

3. முன்னறிவிப்பின்றி கடன் அட்டையை அப்கிரேடு செய்வது.

4. உங்களுக்குத் தெரியாமலேயே கடன் அட்டை உங்கள் பேரில் வழங்குவது.

5. தொலைபேசி மூலம் கடன் அட்டையின் தொகையை தவணை மூலம் (Dial an EMI) கேட்டு அதனை வழங்காமல் இருப்பது அல்லது தவணை மூலம் கிடைத்ததாக தவறாகப் புரிந்துகொண்டிருப்பது.

6. தொலைபேசி மூலம் வங்கியானது உங்களை தொடர்புகொண்டு (Cash-on-call), கடன் வழங்குவது.

7. பணம் செலுத்தத் தவறினால் வங்கிகள் வசூலிக்கும் முறையில் குறைபாடு இருப்பது.

8. கடன் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரும், உங்கள் பெயரை சிபில் எனும் அமைப்பிற்கு வங்கியானது பரிந்துரைப்பது.


நீங்கள் செய்யவேண்டியவை!

1. கடன் அட்டை வெளியிடுதல், பயன் படுத்துதல் தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகளைப் பற்றி தெரிந்து, புரிந்து கொள்ளுங்கள்.

2. சேர்க்கைக் கட்டணம், ஆண்டு கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம், வரி போன்றவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

3. பில் தேதி, பணம் செலுத்த கடைசி நாள், இலவசக் கடன் காலம், அதைக் கணக்கிடும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

4. அட்டையைப் பயன்படுத்துவதில், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற இயலாதபோது விளையும் நிதிப் பாதிப்புகளையும் பொறுப்புகளையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தவறினால் பாதிக்கப்படுவது நீங்கள்தான். செலுத்தவேண்டிய கட்டணங்களைக் குறிப்பிட்ட காலத்தில் கட்டத் தவறினால் அல்லது செலுத்தவேண்டிய தொகை முழுவதுமாகச் செலுத்தப்படாவிட்டால், இலவசக் கடன் காலம் பொருந்தாதிருக்கும்போது செலுத்தவேண்டிய தொகை குறிப்பிட்ட தேதியில் செலுத்தப்படாவிட்டால், காப்பீடு இழப்பு நேரிடும்போது, தனிநபர் அடையாள எண் உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்போது, அதற்கான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும்பின்பற்றவேண்டும்.

5. கடன் அட்டை தொலைந்துபோனால், திருடப்பட்டால், ஒப்புதல் அளிக்கப்படாத பயன்பாடு போன்ற சந்தர்ப்பங்களில் விளையும் பாதிப்புகள் பொறுப்புகள் பற்றி தெரிந்து, புரிந்துகொள்ளுங்கள்.

6. உங்களுக்குத் தேவையான, உங்களுக்குக் கட்டுப்படியாகும் அட்டை வகையைத் தேர்ந்தெடுங்கள். தேவையில்லாமல் கடன் அட்டையைப் பெற்றுக்கொண்டு சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

7. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் தங்களிடமிருந்து கடன் பெற்றவர்களின் கடன் பற்றிய தகவல்களையும் விவரங்களையும் 'சிபில்' (CIBIL) எனும் அமைப்புக்கு அளிக்கின்றன. உங்களின் கடன் திருப்பிச் செலுத்துதலில் முரண்பாடுகள் இருப்பின் சிபில் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் வருங்காலத்தில் உங்களின் கடன் பெறும் வாய்ப்பு பாதிப்படையும்.

கவனிக்க!

1. கடன் வழங்குவது பற்றிய கோரிக்கைகள் மற்றும் கடன் அல்லது கடன் அட்டையில் தரவேண்டிய கடன் நிலுவைகளை ஃபைசல் செய்வது வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்திற்கு அப்பாற்பட்டது.

2. ஆண்டு கட்டணம் தவறாமல் வருடந்தோறும் கட்டவேண்டும்.

3. முழுமையான பில் தொகையை முடிந்தவரையில் கட்டிவிடுங்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டத் தவறினால் அந்தத் தொகைக்கு வட்டி கட்டவேண்டியிருக்கும். அவ்வட்டி விகிதமானது மிகவும் அதிகம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. உங்களுடைய தனிநபர் அடையாள எண்ணை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

5. கடன் அட்டையைப் பயன்படுத்தி, ஏ.டி.எம்-லிருந்து பணம் எடுத்தால், அதற்கும் கட்டணம் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

கடவுள் பெயரில் நம்பிக்கை

"ஏன் இவ்வளவு தாமதம்...' என்று சினந்தார் சாது.

"நான் என்ன ஸ்வாமி செய்வேன்... ஆற்றைக் கடந்து வர வேண்டியுள்ளது! பரிசல்காரன் குறித்த நேரத்தில் வருவதில்லையே...' என்று பயபக்தியோடு மொழிந்தாள், அவருக்கு பால் கொண்டு வரும் பால்காரி.

சாதுவின் கோபம் தணியவில்லை.

"என்ன... பரிசலுக்காகவா காத்திருக்கிறாய்? இறைவனுடைய பெயரைச் சொன்னால் சம்சார சாகரத்தையே தாண்டி விடலாமே! அப்படி இருக்கும்போது, அவனுடைய பெயரைச் சொல்லி, இந்த ஆற்றை கடந்து வர முடியாதா...' என்று முழங்கினார்.

அவர் வார்த்தையை உள் வாங்கிக் கொண்ட பால்காரி, மவுனமாகத் திரும்பினாள்.
அடுத்த நாள் முதல் குறித்த நேரத்தில் பால் வந்தது.

சாதுவுக்கு ஒரே மலைப்பு!

"இப்பொழுதெல்லாம் நேரம் தவறாமல் எப்படி வருகிறாய்?' என்று ஒரு நாள் அவளிடம் கேட்டார்.

"நீங்கள் உபதேசித்தபடி, கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து வருகிறேன்...' என்றாள்.

சாதுவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நேராகவே இதைப் பரிசோதிக்க, பால்காரியுடன் ஆற்றுக்கு புறப்பட்டார்.

கடவுள் பெயரைச் சொல்லியபடி, ஆற்றின் மேல் ஒய்யாரமாக நடந்து போனாள் பால்காரி.

ஆயிரம் பெயர்களால் கடவுளைக் கூவிக் கொண்டே ஆற்றில் அடியெடுத்து வைத்த சாது, அடுத்த வினாடி, நீரில் விழுந்தார்.

"ஐயா... கடவுள் பெயரை சொல்லுகிற போது, உங்களுக்கு எதற்கு சந்தேகம் வந்தது? இடுப்பு வேட்டி நனைந்து போகுமே என்று தூக்கிப் பிடித்துக் கொண்டீர்களே... உங்களுக்கு கடவுள் பெயரில் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெரிகிறது...' எனக் கூறியபடியே மேற்கொண்டு நடந்தாள் பால்காரி...