Saturday, July 20, 2013

குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகள்

'நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்' என்று பழைய கிராமத்து சொலவடை ஒன்று உண்டு. நெய் கீழே கொட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற்றில் பறக்காமல், நெய் பார்த்துக்கொள்ளும்' என்பதுதான் இதன் பொருள். அதுபோலத்தான் குழந்தையின்மையும் செக்ஸும். 

குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகளைப் பற்றி இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

 திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணுக்கு குழந்தை இல்லை எனில், திருமணமான ஆரம்ப காலங்களில் செக்ஸ் மீது இருந்த தீவிர ஆர்வமானது, குழந்தையின்மை காரணமாக மெள்ள மெள்ள சலிப்பாக மாறிவிடும். 'என்ன செய்து என்ன பிரயோஜனம்?' என்று மனம் சோர்வு வலை பின்னத் தொடங்கிவிடும்.

 குழந்தையின்மையால் ஏற்படுகிற செக்ஸ் பிரச்னையில் மிக முக்கியமானது, விறைப்புத்தன்மைக் குறைபாடு. இந்தப் பிரச்னை 'கொஞ்சுவதற்கு ஒரு மழலை இல்லையே...' என்கிற வேதனை ஆழ் மனதில் படிந்து, கவலை ரேகையின் காரணமாக ஏற்படுகிறது. அடுத்து குழந்தை இல்லாதவர்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் மண்டிவிடும். இதனாலும் ஆணுறுப்பில் எழுச்சி இல்லாமல் போகலாம். மனித மனமானது பயனின்றி எந்த செயலிலும் பெரிதும் ஈடுபடாது. குழந்தையில்லாதவர்கள் இன்பத்துக்காக, சுகத்துக்காக செக்ஸில் ஈடுபடுவதை பெரிதும் விரும்ப மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் இவர்களுக்கு நாளடைவில் செக்ஸ் மீது ஒரு வித இனம் தெரியாத வெறுப்பு வந்துவிடும்.

 ஓர் ஆண் மருத்துவரிடம் போகும்போது, அவர் பலவிதமான பரிசோதனைகளை மேற்கொண்டுவிட்டு, மருந்து மாத்திரைகளை சிபாரிசுசெய்து, அத்துடன் சில தினங்களை குறிப்பிட்டு 'இந்த நாட்களில் எல்லாம் உங்கள் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். இந்தந்த தினமெல்லாம் குழந்தை உருவாக வாய்ப்பு உண்டு' என்று சொல்லியிருப்பார். டாக்டர் சொன்னபடி அந்த தினங்களில் மனதில் ஆசை சிறகு விரிய... விரிய செக்ஸில் ஈடுபட முனைவர். ஆனால், ஆணுறுப்பு எழுச்சி அடையாது. அதாவது, இயல்பான ஆர்வத்துடன், ஆனந்தமாகக் கூடாமல்... இயந்திரத்தனமாக அதில் ஈடுபடுவதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படலாம். இதற்கு மருத்துவ மொழியில் 'இன்எபிளிட்டி டு எஜாகுலேட் ஆன் டிமாண்ட்' என்று பெயர்.

இனி, குழந்தையின்மையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளையும் தெரிந்துகொள்வோம்.

 கணவனைப் போலவே மனைவிக்கும் செக்ஸ் மீதான ஆர்வம் இல்லாமல் போய்விடுவதுதான் குழந்தையின்மையால் ஏற்படுகிற முதல் செக்ஸ் பாதிப்பு. இதற்கு மனதில் ஏற்படுகிற வெறுப்பும், இயலாமையும், தனக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் மனநிலை, கழிவரக்கம் இவைதான் காரணம். கிட்டத்தட்ட உளவியல் பிரச்னையால் ஏற்படுகிற செக்ஸ் பிரச்னை என்றுகூட இதனைக் குறிப்பிடலாம்.

 குழந்தையின்மையால் ஏற்படுகிற குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் செக்ஸ் மீது இருந்த ஆர்வத்தை நறுக்கி எறிந்துவிடும். இதனால், உடலுறவில் ஈடுபடுகிற சமயத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் எளிதான உராய்வுக்காக சுரக்கும் நீரானது சுரக்காமல் போய்விடும். இதனால் உடலுறவின்போது வலி, எரிச்சல் ஏற்பட்டு இன்பப்பொழுதை கசப்புக்குரியதாக்கிவிடும். இந்தப் பிரச்னைக்கு 'டிஸ்பெர்னியா' என்று பெயர்.

 செக்ஸ் என்பது உள்ளம் தொடர்பான ஓர் உறவு. போலி மருத்துவர்கள், லேகியம் விற்பவர்கள், லாட்ஜ் டாக்டர்கள், 'இரவில் வீடு செல்லத் தயக்கமா?' என்று விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். பொதுவாக குழந்தையில்லாத தம்பதிகளுக்கு 'ஏண்டா... ராத்திரி வருது?' என்ற வெறுப்பு உணர்வு மனக்கிளையில் கூடுகட்டியிருக்கும். இதற்கு திஸ் நைட் சிண்ட்ரோம் என்று பெயர்.

இதுபோன்ற மனநிலையை நூலாகப் பிடித்துக்கொண்டுதான் போலி மருத்துவர்கள் தங்கள் தொழில் பட்டத்தைப் பறக்கவிடுகிறார்கள். இதில் உணர்வுதான் முக்கியமானதும் முதன்மையானதும். குழந்தையின்மைக்கு முதலில் பலியாவது சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுதான். இப்படியான உணர்வு சிதைவு செக்ஸ் விருப்பத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றுகிற வேலையை செய்துவிடும்.

 பொதுவான பிரச்னைகள்:

 செக்ஸ் திறமைக் குறைவு என்ற எண்ணம் இருவருக்குமே வந்துவிடும்.

 எப்போதும் இனம் தெரியாத மனப்பதற்றம், விரக்தி குடிபுகும்.

 தங்களைத் தாங்களே நொந்துகொள்கிற விக்டிம் மென்டாலிட்டி நிலை உருவாகும்.

 கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காரணகர்த்தாவாக்க முயற்சிப்பார்கள். இதனால் வீடே சந்தைக்காடாகும்.

செக்ஸ் பிரச்னை தீர:

 ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தக் கூடாது. குழந்தையின்மைக்கு உண்மையான காரணம் என்ன என்று கண்டறிந்து, அதனைக் களைய முயற்சிக்க வேண்டும்.

 இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் குழந்தையின்மைப் பிரச்னைக்கு பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதன் மூலம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 திருமணத்தின் நோக்கம் குழந்தை பெற்றெடுப்பதும்தான். குழந்தை பெற்றெடுப்பது மட்டுமே அல்ல என்பதை தம்பதி புரிந்துகொள்ள வேண்டும்.