Monday, September 2, 2013

கர்ப்பப்பைவாய் புற்று எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள்

'புற்றுநோய்', மனிதர்களை ஒரு கணம் உறைய வைக்கும் வார்த்தை. இதில்,  பலவகைகள் இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக வைத்திருந்தால் சில வகை புற்றுநோய்களை நெருங்கவிடாமல் செய்யலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 15 சதவிகிதம் பேருக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோயாக தான் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 70 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். அவ்வளவு கொடுமையானதா கர்ப்பப்பைவாய் புற்று நோய்? 'இல்லை, தவிர்க்கக்கூடியதுதான்' என்கிறார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ பேராசிரியர் கௌரி துரைராஜன். கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பற்றி, அவரிடம் பொதுவாகக் காணப்படும் சந்தேகங்களைக் கேட்டோம். 

கர்ப்பப்பைவாய் புற்று எதனால் ஏற்படுகிறது?

'பெண்களின் கர்ப்பப்பையில் வாய் போன்ற அமைப்புள்ளது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம், பாலியல் நோய் தொற்று, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். பெரும்பாலும், 70 சதவிகிதம் அளவுக்கு 'ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்' தொற்று காரணமாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. ஹுயுமன் பாப்பிலோமா வைரஸானது கர்ப்பப்பை வாய் தொடர்புடைய உயிரணுக்களைத் தூண்டி புற்றுநோயை உருவாக்குகிறது.'

யாருக்கெல்லாம் வரும்?

''இந்தியாவில் 30 முதல் 40 வயதுக்கு உள்ளான பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் புற்று நோயின் தாக்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டால், டீன் ஏஜ் பருவத்தில் உடலுறவு மேற்கொண்டால், பாலியல் நோய்க்கு ஆட்கொள்பவர்களுக்கு இந்த புற்றுநோயின் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பெண்கள் பருவ வயதை அடையும் போதும், கருத்தரிக்கும் போதும் கர்ப்பப்பையின் வாயில் பல்வேறு விதமான செல் மாற்றங்கள் நடைபெறும். அப்போது உடலுறவின் மூலம் 'ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்' கர்ப்பப்பைவாயைத் தாக்கி புற்றுநோயை உண்டாக்கும். ஆண்களின் உறுப்பில் வெள்ளை போன்ற படிமம் படிந்திருக்கும். இந்தப் படிமத்தில் உள்ள ரசாயனங்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை உண்டாக்கும். சுன்னத் செய்யப்பட்ட ஆண்களில் ரசாயனப் படிமங்கள் இல்லாமையால் அவர்களது துணைவிக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தாக்கம் குறைந்தே காணப்படும்.'  

இந்தப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

'உடலுறவுக்குப் பிறகு, ரத்தப்போக்கு ஏற்படுதலும் வெள்ளைப்படுதலும் இதன் ஆரம்பநிலை அறிகுறிகள். மாதவிடாயின்போது ரத்தப்போக்குடன், கெட்ட வாடையும், வெள்ளைப்படுதலும் ஏற்படும். புற்றுநோய் முற்றியவர்களுக்கு வயிற்று வலியும் ஏற்படும். முற்றிய நோயை யாராலும் குணப்படுத்த முடியாது. சிறு நீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படும், புற்று நோய் வேகமாக அடுத்தடுத்த உறுப்புகளுக்குப் பரவ ஆரம்பிக்கும். இந்தப் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே எளிய பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.'

புற்றுநோய் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

'கர்ப்பப்பைவாய் புற்று நோயைப் பொறுத்தவரை நோய் முற்றுவதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிடிக்கும். கர்ப்பப்பைவாயை கண்களினாலே பார்க்க முடியும் என்பதால், 'பாப்ஸ்மியர்' பரிசோதனை மூலம் புற்றுநோயின் தொற்றை அறியலாம். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறப் பெண்களில் இவ்வகை புற்றுநோய் தாக்கம் அதிகம் உள்ளது. கிராமப்புறங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கர்ப்பப்பை வாயில் வினிகரைத் தடவுவார்கள். மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதற்காக தேசிய புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் உள்ளது. அதன் மூலம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த எளிய பரிசோதனை முறையைக் கற்றுத் தருவார்கள்.'

இதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள்?  

பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து புற்றுநோயின் இடத்தை அடையாளம் காணலாம். அதன்பிறகு, அந்தக் குறிப்பிட்ட இடத்தை உறைய வைத்து அல்லது ஆவியாகக் கரைய வைத்துவிட முடியும்.  பாதிப்புக்குள்ளான பகுதியை லேசர் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். முற்றிய புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது கர்ப்பப்பையை அகற்றுதல், கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.'

தடுப்பதற்கான எளிய வழிமுறைகள் என்ன?

'ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் புகைப்பிடிப்பதை, நிறுத்திக் கொள்ள வேண்டும். ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தலாம். மூன்று டோஸ் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டோஸின் விலை 3 ஆயிரம் ரூபாய். இரண்டு வகையான தடுப்பூசிகளில் கிடைக்கிறது. முதல் டோஸிற்கு பிறகு 8 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸையும், 6 மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 9 வயது முதலே தடுப்பூசிகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், மருத்துவர்கள் 11 வயது முதல் 12 வயதுக்குள் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது உடலிற்கு உகந்தது என பரிந்துரைக்கின்றனர். பெண்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு முன்பாகவே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது மிக முக்கியம்.''