Tuesday, October 29, 2013

தீபாவளி திருக்கதை - திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...

திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...
தீபாவளி தினத்தில் தீபச்சுடரின் வெளிச்சம் படும் இடங்களில் எல்லாம் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் எனச் சொல்லும் ஞானநூல்கள், இதற்குக் காரணமான ஒரு கதையையும் விவரிக்கின்றன.
அரிய வரங்கள் பல பெற்றிருந்த நரகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் பெரிதும் கொடுமைப்படுத்தினான். அவனால் பெரும் துன்பத்துக்கு ஆளான அனைவரும், துவாரகாபதியாம் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சரண் புகுந்தனர். நரகனை அழித்து தர்மத்தை நிலைநாட்டும்படி வேண்டிக்கொண்டனர். பகவானும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, ஆறுதல் கூறியதுடன், சத்யபாமாவின் துணையோடு அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டார். இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த பாணாசுரன் முதலான வேறு பல அசுரர்கள், பாற்கடலில் இருக்கும் திருமகளை எப்படியாவது கவர்ந்து செல்ல திட்டமிட்டார்கள். இதை அறிந்த திருமகள் என்ன செய்தாள் தெரியுமா? அருகிலிருக்கும் தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாளாம். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். ஆகவே, அன்று திருவிளக்கு முதலாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து, லட்சுமிதேவியை தீபலட்சுமியாக வழிபடுவார்கள். அப்போது, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்
கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வழிபட, நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
நமோ (அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
  நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபராயை
  நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை