Tuesday, November 5, 2013

சமையலறை பாதுகாப்பு டிப்ஸ்!

● எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருக்கும்போதும், தப்பித்தவறி தீக்காயம் ஏற்படலாம். எனவே, தீப்புண்ணுக்கான மருந்து சமையலறையில் எப்போதும் தயாராக இருக்கட்டும். காய்கள், பழங்கள் நறுக்கும்போதும்... புதிய பாட்டில்களைத் திறக்கும்போதும் வெட்டுக்காயம் ஏற்படலாம். எனவே, கத்தி முதலிய உபகரணங்கள் புதியனவாகவோ, அப்போதுதான் சாணை பிடிக்கப்பட்டதாகவோ இருந்தால்... நிதானமாக, கவனமாகக் கையாள வேண்டும். சமையலறையில் பாண்டேஜ் துணி எனப்படும் வலைத் துணியை ஏழெட்டு அங்குலம் நீளமுள்ள துண்டுகளாக கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வெட்டுக்காயம் ஏற்பட்டால், இந்தத் துணியை நீரில் நனைத்து, காயம்பட்ட இடத்தில் அழுத்தி சுற்றலாம். ரத்தம் வருவது நின்றவுடன், துணியை எடுத்துவிட்டு தேவையான மருந்தைத் தடவலாம். தேவையானால், மருத்துவரிடம் செல்லலாம்.

● தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியிலுள்ள சேஃப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இல்லையென்றால், சமைக்கும்போது ஏதாவது பிரச்னைகள் வரலாம்.

● அடுப்பின் ஒரு பர்னரில் சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் இருந்தால், பக்கத்தில் உள்ள பாத்திரத்திலிருந்து நீர்த் திவலைகள் அதில் சொட்டி விடாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் சடசடவென எண்ணெய் வெடித்து உங்கள் மீது தெறிக்கும். சீடை, மைதா மாவு போண்டா போன்றவை தயாரிக்கும்போது மாவு மிகவும் கெட்டியாக இருந்தாலோ, மாவில் கல் இருந்தாலோ (கல் உப்பு கூட), எண்ணெயில் பொரிக்கும் போது வெடித்து, எண்ணெய் தெறிக்க வாய்ப்பு உண்டு.

● மூன்று நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பை உபயோகிக்கும்போது, அதிகம் கிளறத் தேவையில்லாத பாத்திரங்களை (உதாரணம் குக்கர், ரசச்சொம்பு) பின்புறமும், அடிக்கடி கிளற வேண்டிய பொரியல், அப்பளம் பொரிக்கும் கடாய் போன்றவற்றை முன்புறமாகவும் வைப்பதோடு பாத்திரங்களின் சைஸும் தேவையான அளவே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  

● கேஸ் ஸ்டவ்வை 'சிம்'மில் வைத்தே முதலில் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மீது வையுங்கள். பிறகு, தீயை அதிகப்படுத்தி எண்ணெய் ஊற்றுவது போன்ற அடுத்தக் கட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம்.

 கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்து கொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்வது கூடாது. ஸ்டவ் எரியாமல் இருப்பதோடு.... கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.

 கடுகு தாளிக்கும்போது குமிழ் வைத்த மூடி ஒன்றால் மூடியபடி தாளித்தால், அது தெறித்து விழுந்து நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்கும். குறிப்பாக, கண்கள் பாதிப்பாகாமல் இருக்கும்.

சமையலறையில் இரண்டு கிடுக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்க இவை பயன்படும். இதற்கு பதில் புடவைத் தலைப்பு, துண்டு, காகிதம் போன்றவற்றை சூடான பாத்திரங்களை இறக்க பயன்படுத்தாதீர்கள்.  

 இப்போதுள்ள தரைகளில் தண்ணீர் கொட்டினால் சட்டென்று தெரிவதில்லை. அடுப்படியிலிருக்கும் சிங்க் அருகில் ஒரு மிதியடி போட்டு வைப்பது நல்லது. தட்டு, டம்ளர் போன்ற பாத்திரங்களிலுள்ள தண்ணீரை சிலர் உதறுவதால் கீழே தண்ணீர் சிதறலாம். அவ்வப்போது முடிந்தவரை கீழே துடைத்துவிடவும். தரையில் விழுந்துள்ள காகிதம், பிளாஸ்டிக் உறைகள், சின்ன ஸ்பூன்கள் போன்றவற்றின் மீது கால் வைத்தாலும் சர்ரென்று வழுக்கிவிடும் அபாயம் உண்டு.