Sunday, November 3, 2013

திருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி?

திருமண வயதில் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களின் கனவு, என் பிள்ளையின் கல்யாணத்தை இந்த ஊரே வியக்கும்படி நடத்த வேண்டும் என்பதே.

இப்படி கனவு காணும் பலரும் அந்தக் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து திருமணத்தை விமரிசையாக நடத்திவிட்டு கடைசியில் தங்களுடைய எதிர்காலத் தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் திருமணம் என்பது ஆடம்பரமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் கல்யாணத்தைத் திருவிழா மாதிரி நடத்தினால் கவலை இல்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்  இதில் சிக்கி சித்ரவதைக்குள்ளாகிறார்கள்.  கௌரவத்துக்காகவும், அவங்க செஞ்ச மாதிரி நாமும் செய்யணும் என்று கடன் வாங்கி அல்லது சொத்தை விற்று செய்வதுதான் தவறு.

முன்பெல்லாம் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சொந்தபந்தங்கள் அனைவரும் வந்துவிடுவார்கள். ஆளுக்கு ஒரு வேலை என பிரித்துக்கொண்டு செய்வார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. மேலும், பெரும்பாலான குடும்பங்கள் தனித்தனி குடும்பங்களாகச் சிதறிவிட்டன. எனவே, குடும்பத்தில் உள்ள நான்கு பேர் மட்டுமே அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும்.

இந்நிலையில் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்காக இவர்கள் தேடிச் செல்வது கல்யாண கான்ட்ராக்டர்களைத்தான். இவர்களிடம் என்ன சேவைகள் கிடைக்கும், அவற்றை சிக்கனமாக தேர்வு செய்வது எப்படி?

''முன்பெல்லாம் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்து சமைப்பதற்கு மட்டும் ஆள் வைப்பார்கள். தற்போது   சமையலோடு, வரவேற்பு, பத்திரிகை அடிப்பது, மணப்பெண்ணுக்குத் தேவையான மேக்கப், ஷாப்பிங், பட்டுப்புடவை, அலங்கார நகைகள், அலங்காரம், வீடியோ மற்றும் புகைப்படம், கச்சேரி, டிராவல்ஸ், ரூம் புக் செய்வது, மண்டபம் புக் செய்வது, மணமக்களின் தேனிலவுக்கான ஏற்பாட்டை செய்து தருவது என அனைத்து வேலைகளையும் செய்து தருகிறார்கள்.  

கான்ட்ராக்டர்களைத் தேர்வு செய்யும்போது அவர்களின் சேவை பற்றி ஒருசிலரிடமாவது விசாரிப்பது நல்லது. அடுத்து, அவர்கள் வசூலிக்கும் கட்டணம் நியாயமானதுதானா என்பதை, மற்ற கான்ட்ராக்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்'' 

திருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி?

''திருமணங்களில் சாப்பாடு முக்கியம்தான். ஆனால், இதிலும் தங்களுடைய பெருமையைக் காட்டவேண்டும் என 40, 45 வகை உணவுகளை வழங்கச் சொல்கிறார்கள். வருகிறவர்கள் இத்தனை அயிட்டத்தையும் சாப்பிட முடியுமா என யாரும் யோசிப்பதில்லை. இதனால் அதிக அளவு சாப்பாடு வீணாகும். ஒரு சாப்பாட்டுக்கு குறைந்தபட்சம் 250-300 ரூபாய் வரை செலவாகும்.  எனவே, பப்ஃபே சிஸ்டம் வைத்தால் சாப்பாடு வீணாவதைக் குறைக்கலாம். அதேபோல, திருமணத்துக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத் தெளிவாகத் திட்டமிடுவது அவசியம்.

ரிசப்ஷனுக்கு பூ அலங்காரம் செய்ய கூடுதலாக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை செலவாகும். ஆனால், செயற்கை பூ அலங்காரம் செய்தால் நிறைய பணம் மிச்சமாகும். மாப்பிள்ளை அழைப்புக்கு சினிமாக்களில் வருவதுபோல சாரட் வண்டியை வைக்கிறார்கள். இதற்கு மட்டுமே குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

அடுத்து, கேளிக்கை என்ற பெயரில் கிளி ஜோசியம், சுகர் கேண்டி, கோலா ஐஸ், மெகந்தி திருவிழா என பல ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதிலும் 20-30  வகை என வைக்கிறார்கள். இது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை செலவாகும். இதேபோல, மெகந்தி திருவிழா என்று ஒன்றை வைத்து, இதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள்.

ஆயிரம் ரூபாயில் நல்ல மல்லிகைப்பூ மாலை கிடைக்கும்.  ஆனால், லைட்வெயிட், சூர்யா - ஜோதிகா மாலை, வாடாத மாலை என ஒரு ஜோடி மாலைக்கு 3 - 10 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.

பத்திரிகை என்பது திருமணம் நடைபெறும் விஷயத்தைத் தெரிவிக்க  மட்டுமே. இதிலும் பலர் தங்களுடைய அந்தஸ்தைக் காட்ட ஒரு பத்திரிகைக்கு 300- 500 ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். சிலர் திருமணத்துக்கு சீர்தரும் பொருட்களைத்தர விலை உயர்ந்த டப்பாக்களைத் தேர்வு செய்கிறார்கள். இதற்கு மட்டுமே 50 ஆயிரம் வரை கூடுதலாகச் செலவாகும்.  

நிச்சயதார்த்தத்தைத் திருமணத்துடன் சேர்த்து வைக்கும்போது கணிசமான தொகை மிச்சமாகும். இதற்கு 1-2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பெரும்பாலும் இதை பெண் வீட்டார்தான் செய்வார்கள். திருமணத்துடன் சேர்த்து வைக்கும்போது, அந்தப் பணத்தைத் திருமணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து, திருமணத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தனித்தனியாக ஆட்கள் வைப்பதற்கு பதில், இருவீட்டாரும் சேர்ந்து செலவை பகிர்ந்துகொள்ளலாம். சிக்கனமாக செலவழிப்பதன் மூலம் 15 லட்சம் ரூபாய் செலவாகும் திருமணத்தை 10- 12 லட்சத்துக்குள் முடித்துவிடலாம்'' 

குறைந்தபட்சம் 3 லட்சம் சேமித்து அதை மணமக்கள் பெயரில் 30 வருடங்களுக்கு டெபாசிட் செய்து வந்தால், 9 சதவிகித வட்டி வருமானத்தில் அவர்கள் ஓய்வு பெறும்போது சுமார் 43 லட்சம் கிடைக்கும். இதை அவர்கள் மாத வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்தால், குறைந்தது அவர்களுக்கு மாத வருவாய் 30,000 கிடைக்கும். இதைவிட சிறந்த அன்பளிப்பைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்துவிட முடியுமா!    

பெருமைக்காகச் செய்யப்படும் விஷயங்கள் கூடுதல் செலவையே வைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!