Tuesday, November 5, 2013

பால்... குடிக்கலாமா? கூடாதா?

'காபி, டீ உடலுக்கு நல்லதுதான்' என்று ஏற்கெனவே கூறினேன். 'ஏதாவது கெடுதல் இருந்தால்... அது காபி, டீயில் கலக்கப்படும் சர்க்கரை, அல்லது சுகர்ஃப்ரீ, அல்லது பாலுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்படும் க்ரீமர் ஆகியவற்றால்தான்' என்றும் சொன்னேன். இப்போது பால் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா! பால் பற்றி சர்ச்சைக்குரிய பல விஷயங்கள், உலகெங்கும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் 'பால் சைவமா... அசைவமா?' என்றொரு கேள்வி இருக்கிறது. 'சைவம்' என்றுதானே எல்லோரும் குடித்து வருகிறோம். காசநோய் பாதிப்புடன் என்னிடம் வந்த ஒருவருடனான இந்த உரையாடலைப் படித்துவிட்டு, அதை முடிவு செய்யுங்கள்.

''நன்றாக எலும்பு, ஈரல், மீன், முட்டை எல்லாம் சாப்பிடுங்கள்.''

''இல்லை டாக்டர், நான் சைவம்.''

''அப்படியானால் பால் நிறைய உபயோகியுங்கள்.''

''இப்போதுதானே டாக்டர் சொன்னேன்.... நான் சுத்த சைவமென்று.''

'அதனால் என்ன... பால் சைவம்தானே.'

''என்ன சார், பால் எங்கே கிடைக்கிறது... தென்னை மரத்திலா, பனை மரத்திலா... பசுவில்தானே! அது எப்படி சைவமாகும்?''

- இப்படி கோபத்துடன் அவர் சொன்ன பிறகுதான், 'பால் அசைவ உணவு' என்கிற உண்மையை உணர ஆரம்பித்தேன்.

'பால் குடிப்பது இயற்கைக்கு முரணானது' என்கிற கருத்தும் தற்போது மெள்ள பரவி வருகிறது. இது, நம்நாட்டு சமூக ஆர்வலர்களோ, சித்த மருத்துவர்களோ மட்டும் கூறும் கருத்தல்ல. அயல்நாடுகளைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள், விஞ்ஞானிகள்கூட இப்படித்தான் சொல்கிறார்கள்.

'பால்' என்பது குழந்தைக்காகத் தாய் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்புச் சத்துக்களும் நிறைந்த உணவு அது. ஒவ்வொரு பாலூட்டும் விலங்குக்கும் இது பொருந்தும். ஒரு காலகட்டம் வரை இது கட்டாயத் தேவை. பிறகு, அவை வளர்ந்து சுயமாக உணவு தேடி உண்ண ஆரம்பித்தவுடன், பால் சுரப்பது நின்றுவிடும். அதன் பிறகு, எந்த ஜீவராசிக்கும் பால் தேவையே இல்லை. மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் குழந்தைப் பருவத்துக்குப் பிறகு பாலைத் தேடுவதில்லை. மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதும் பாலுக்காக அலைகிறான். அதுவும் மற்றொரு ஜீவராசியின் பாலுக்கு! மாடு, ஆடு, ஒட்டகம், கழுதை எதையும் அவன் விடவில்லை!

நம்நாட்டு மருத்துவ நூல்கள், பாலை நல்ல மருந்தாகத்தான் சித்திரிக்கின்றன. 'குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்றுதான் கூறுகின்றன. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், 'அது உண்மை' என்பது புரியும்.  

ஆனால், மருந்து என்பதை மறந்து, சத்து என்று பலரும் பருகிக் கொண்டிருக்கிறோம். 'பாலில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), புரதச்சத்து, பொட்டாசியம் நிறைய இருக்கிறது. ஒரு கப் பாலில் சுமார் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இது, எலும்புகளையும் பற்களையும் பாதுகாக்க உதவும்' என்றுதான் எல்லாரும் நம்புகிறோம். ஆனால், 'உண்மை இதற்கு மாறானது' என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 94-ம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்கன் 'எபிடெமியாலஜி ஜர்னல்' மூலமாக டாக்டர் கிளைன் வெளியிட்ட செய்தியில், 'இடுப்பு எலும்பு முறிவு, பால் பருகும் மக்களிடம்தான் அதிகம். பால் அதிகம் பருகாத நாடுகளில் இது குறைவு' என்று கூறியிருக்கிறார்.

ஜான் ஹங்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஆஸ்கி, 'பால் குடிக்காதீர்கள்' என்று ஒரு புத்தகமே எழுதிஇருக்கிறார். 'பாலில் கால்சியம் நிறைய இருந்தாலும், பாலின் அமிலத் தன்மையால் எலும்புகளிலிருந்து கால்சியம் உருகி நீரில் வெளியேறுகிறது. ஆகவே, எலும்புகள் பலவீனமாகின்றன' என்பது அவருடைய வாதம்.

ரத்த சோகை (அனீமியா), பலவகை அலர்ஜிகள், டைப்-1 சர்க்கரை நோய், ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், பால் ஒவ்வாமை இப்படி பலவிதமான பிரச்னைகளுக்கும்... ஆஸ்துமா, சைனஸ் போன்றவற்றை அதிகப்படுத்துவதற்கும் பால் ஒரு காரணியாக இருக்கிறது என்பதும் விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சி முடிவு.

இதில் சமீப ஆண்டுகளாக இன்னொரு புதிய ஆபத்தும் வந்திருக்கிறது. மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து கசாப்புக்குத் தயாராக வேண்டும்... நிறைய பால் கொடுக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக... துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூன்றாம் மாதத்திலிருந்தே இதை போடுவதால், 15 மாதத்திலேயே அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கிறது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கும் மாடுகள், 20 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கின்றன. மாடுகளின் மாமிசத்திலும் இந்த ஹார்மோன் கலந்திருப்பதால், 'இதைச் சாப்பிடும் மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகள் வரலாம்' என்பது ஒரு கருத்து. ஹார்மோன் ஊசியின் இன்னொரு விளைவு, இந்த ஊசி போடப்பட்ட மாடுகளின் பாலைக் குடிப்பதால்... சர்க்கரை நோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், அதீத மார்பக வளர்ச்சி, ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி என்று ஏகப்பட்ட பிரச்னைகள் வரலாம். ஆண்களுக்கான மார்பக அறுவை சிகிச்சை அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இத்தகைய பிரச்னைகள் எழுந்திருப்பதால்... கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாடுகள் என உலகின் பெரும்பாலான பாகங்களில், மாடுகளுக்கான ஹார்மோன் ஊசி தடை செய்யப்பட்டு விட்டது. நம்நாட்டில், வழக்கம்போல பன்னாட்டுக் கம்பெனிகள் அந்த ஊசியை விற்பனை செய்து லாபம் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது... நாம், தூங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு நடுவே... 'ஆஸ்துமா, அலர்ஜி, லாக் டோஸ் ஒவ்வாமை போன்ற குணங்கள்... பச்சை பாலில் குறைவு. இன்சுலின் போன்ற வளர்ச்சிப் பொருட்களின் அளவும் குறைவாக இருக்கும்' என்றும் நம்பப்படுவதால், பதப்படுத்தப்படாத பச்சைப்பால் உபயோகிப்போர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

மக்காச்சோளம், தானியங்கள் போன்ற உணவில் வளர்ந்து, ஹார்மோன் ஊசியால் பெருத்து, 'அமுதசுரபி'யாகப் பால் சுரந்து, 'பாஸ்ட்சரைஸ்' முறையில் பதப்படுத்தும் பாலைவிட, பூச்சிக்கொல்லிகள் தெளிக்காத புல்வெளியில் மேய்ந்து, தனியார் வீடுகளில் கிடைக்கும் பச்சைப் பால் மிகவும் உயர்ந்தது என்கிற கருத்தும் வலுத்து வருகிறது.

'பால் அவசியம் வேண்டும்' என்று நீங்கள் முடிவு செய்தால், இதையே பின்பற்றுங்களேன்!