Sunday, March 23, 2014

மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரங்கள்!

மன அழுத்தம் - இன்றைக்கு 20 வயது இளைஞர்கள்கூட அடிக்கடி உணரும் பிரச்னை.

20 வயது இளைஞனுக்கே இந்தப் பிரச்னை இருக்கிறது எனில், 60  வயதுக்காரருக்கு..? மன அழுத்தத்தால் மனிதர் புழுங்கிக்கொண்டே இருப்பார். ஏன் எல்லோருக்கும் இது ஒரு பிரச்னையாக  இருக்கிறது?

நடக்கும் என்று நினைத்தது நடக்காமல்போவது, தோல்வி என்பது வெற்றிக்கான அனுபவம் என்று புரிந்துகொள்ளாமல் இருப்பது, வயதுக்கு மீறிய உடல் மற்றும் அறிவுப்பூர்வமான செயல்கள், முடியாது எனத் தெரிந்தும் வீம்புக்காக அதைச் செய்துமுடிக்க நினைப்பது! இப்படி எத்தனையோ பிரச்னைகள் மன அழுத்தமாக மாறி, மனதையும் உடலையும் பாதித்துவிடுகிறது.

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் சந்தோஷமே. அது நடக்காமல்போனால் மன அழுத்தமே. ஒரு பொருளை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது.  இது அனுபவமில்லாதவர்ளுக்கு  புரிவதில்லை. சூழ்நிலைகளுக் கேற்றாற்போல் மாற முடியாமல் அல்லது மாறுவதற்கு மனம் ஒப்பாமல் தவிக்கிறார்கள். 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற குணம் வந்துவிட்டால் மன அழுத்தம் இருக்காது.

குளிர்பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோக்களுக்குக் குளிர் பெரிதல்ல. இந்திய நாட்டில் வாழும் நமக்கு வெயில் பெரிதல்ல. இந்த இயற்கை சூழல் கொஞ்சம் மாறினால்கூட அவரவர்களுக்கு மன அழுத்தம்தான். மன அழுத்தம் என்பது என்ன, அது நமக்கு இருக்கிறதா, எப்படித் தெரிந்துகொள்வது?

மன அழுத்தம் பொதுவாக மூன்று நிலைகளில் வரும்.

அளவுக்கதிகமான சந்தோஷம்: சிலர் சாதாரண மகிழ்ச்சி ஏற்பட்டால்கூடத் துள்ளிக்குதிப்பார்கள். நம் உடலமைப்பு ஓரளவுதான் சந்தோஷத்தைத் தாங்கும்.  அதேமாதிரிதான் வருத்தமும். அளவுக்கதிகமாக வருத்தப்பட்டால் நம் உடல்நலம் பாதிக்கப்படலாம். தோல்வியையும், வெற்றியையும் சமமாகப் பாவித்தால் பிரச்னை வராது.

அளவுகடந்த சோம்பேறித்தனம்: தூங்கியே பழக்கப்பட்டவர்களுக்கு, திடீரென்று வேகமாக வேலை செய்யத் தொடங்கும்போது பரபரப்பாகி, வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்புக்குள்ளாவார்கள்.  

வயது: அந்தந்த வயதுக்கு ஏற்றபடி இருக்கும் உடல்தன்மையும், செய்யும் வேலைகளைப் பொறுத்தே  வெற்றிகளை நம்மால் தர இயலும்.

நமக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளச் சில எளிய வழிகள் இதோ:

நமது நார்மலான குணம் திடீரென மாறுபடுவது.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம்.
விரும்பிச் செய்கிற செயல்களில் ஈடுபாடு குறைவது.
நமக்குப் பிடித்தவர்கள் மீது கோபப்பட்டு எரிந்துவிழுவது.
நமக்குப் பிடித்தமான செயலிலும் தவறு செய்வது.
நம் மீதே நம்பிக்கை குறைவது.
சரியான தூக்கமின்மை.

மற்றவர்களிடமிருந்து ஒதுங்க முயற்சிப்பது - போன்ற குணங்கள் மன அழுத்தத்தால் பாதிப்படைகிற இளைஞர்களிடம் பெரும்பாலும் இருக்கும். மன அழுத்தம் என்பது மூளையில் தொடங்கி, உடல்ரீதியான வியாதிகளைச் சிறு வயதிலேயே நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

இன்றைய இளைஞர்கள், அளவுக்கு அதிகமான, குறைவான இதயத் துடிப்பு, வயிற்றுக் கோளாறு, சர்க்கரை நோய்,  தலைவலி, உடம்பு வலி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு, படிப்பில், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறேன். ஓர் இலக்கை நோக்கி பயணம் செய்கிறபோது, அழுத்தங்கள் தவிர்க்க முடியாததுதான். சரியான திட்டமிடுதலும், சவால்களை எதிர்கொள்வதும், எதை எடுத்துக் கொண்டாலும் அதை விரும்பிச் செய்வதும், ஓரளவுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கீழ்க்காணும் சில எளிய பயிற்சிகள் மூலம் மன அழுத்தம் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம்.  

1. தினமும் அதிகாலை அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள். ஓசோன் லேயரிலிருந்து கிளம்பும் பாசிட்டிவ் அதிர்வலைகள் அதிகமாக இருக்கும்.

2. ஒரு மணி நேரம் நடைபயணமோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள்.

3. பிடித்த விளையாட்டை விரும்பி விளையாடுங்கள். குறிப்பாக, ஓடியாடி வெளியே விளையாடுங்கள்.

4. நேரத்தை சரியாகச் செலவிடுங்கள்.

5. அன்று செய்யவேண்டிய வேலையை அன்றே முடியுங்கள்.

6. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

7. உங்களை நம்புங்கள்.

8. யதார்த்தமாக இருங்கள். அளவுக்கு அதிகமாக சென்டிமென்டலாக இருக்காதீர்கள்.

9. தவறான எதிர்மறை அதிர்வலைகளை மற்றவர்களிடமிருந்து தவிருங்கள்.

10. தனிமையில் இருக்காதீர்கள். நம்பிக்கை யானவர்களிடம் உங்களது விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

11. ஒரு வேலையை மற்றவர்களுக்காக விருப்பமில்லாமல் செய்யாதீர்கள்.

12. சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

13. சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

14. உங்கள் உரிமைகளை விட்டுத்தராதீர்கள்.

15. யாரையும் வெறுக்காதீர்கள். கூடியவரையில் நட்போடு பழகுங்கள்.

16. உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள்.

17. முடியாது எனில் அதை மற்றவர்களுக்குப் புரியவையுங்கள். சரிசரி என்று தலையாட்டிவிட்டு பிறகு முடிக்க முடியாமல் அவதிப்படாதீர்கள்.

18. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

19. உங்களுக்குச் சரியென்று படாத விஷயங்களை மற்றவர்களின் சந்தோஷத்துக்காகச் செய்யாதீர்கள்.

20. யோகா அல்லது தியானம் செய்யுங்கள்.

மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதை எப்படி அணுகிறோம் என்பதைப் பொறுத்தே சந்தோஷம் அமையும். வாழ்க்கையில் நமக்குத் தேவையில்லாத கனவுகள், ஆசைகள், ஓராயிரத்தைத் தாண்டி நிற்கும். இவையெல்லாம் மெய்ப்பட வேண்டுமெனில், வரப்புகளோடு சண்டை போடாமல், வானம்போலப் பரந்துவிரிந்து வாழுங்கள். உலகம் பெரிது என்று உணர்வீர்கள்!