Tuesday, April 8, 2014

கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்

பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன.

ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டுவிடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டியுள்ளது.

வீட்டில் இருக்கும் நச்சு

குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, அறையணிகள், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்கத் தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைஃபீனைல் ஈதர்கள் (பி.பி.டி.இ.) பயன்படுத்தப்படுகின்றன.

இவை உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழி குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.

வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை - நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.

குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.

பாதரச ஆபத்து

அனல் மின் நிலையங்களில் இருந்தும் சில தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் பாதரசம் கடலில் கலந்து மீன் போன்ற கடல் உணவுகள் மூலம் தாயை அடைந்து, பின் சிசுவை அடைகிறது. இந்தப் பாதரசம் மூளை வளர்ச்சியையும் மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதாலும் குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.

புற்றுநோயை உருவாக்கும் பலபடி குளோரினேற்ற பைஃபீனைல்களின் (பி.சி.பி.) பயன்பாடு அமெரிக்காவில் 1976லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த வேதிப்பொருள் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த இந்த நச்சுப்பொருள், சுற்றுச்சூழலில் காலம் காலமாகப் படிந்து நிலைபெற்றுவிட்டதால், உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் மூலம் கருவிலுள்ள குழந்தையை அடைகிறது.

இதைப் போலவே டி.டி.டி., குளோர்டேன் போன்ற என்றைக்கோ தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் சுற்றுச்சூழலில் நிலைபெற்றுவிட்டதால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலையும் வந்தடைந்து பாதிப்பை உருவாக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com