Monday, June 2, 2014

பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்


பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதுதான். பரியை நரியாக மாற்றிய சிவபெருமான், அரிமர்த்த பாண்டியன், மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது குறித்த உண்மை நிலையை உணர்த்த, வைகையாற்றில் வெள்ளம் வரச்செய்கிறார். வெள்ளமோ கரையை உடைத்துக்கொண்டு ஓடுகிறது. மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க, கரையை உயர்த்தும் பணியில் மக்களை மன்னன் ஈடுபடச் செய்கிறான். பிட்டு தயாரிக்கும் பெண்மணி, தனக்கு வாரிசு இல்லாததால் யாரை தன் சார்பாக வேலைக்கு அனுப்புவது என்று குழம்பி நிற்கும்போது, சிவபெருமான் இளைஞனாக வருகிறார்.

அவர் கூலியாக பிட்டைச் சாப்பிட்டுவிட்டு, மண் சுமப்பதாக ஒத்துக்கொள்கிறார். வேலையைப் பார்வையிட மன்னனே வருகிறான். இளைஞன் வடிவில் வந்த சிவபெருமானோ தாறுமாறாகப் பணியைச் செய்ய, கோபமடைந்த பாண்டிய மன்னன், அவர் முதுகில் பிரம்பால் ஓர் அடி வைக்கிறான். அந்த அடி மன்னன் உட்பட அனைவரின் முதுகிலும் விழுகிறது.   மன்னன் உண்மையை அறிந்தான்.


இது வெறும் பொழுதுபோக்குக் கதையல்ல. அரிய உண்மையை வித்தியாசமாக நமக்கு உணர்த்துகிற கதை. நாம் யார் மீது அடித்தாலும், அந்த அடி நம்மையே வந்து அடையும்; நாம் யாருக்கு எந்தத் தீங்கு செய்தாலும், அது நம்மையே வந்து தாக்கும் என்பதையே மிக நேர்த்தியாக இந்தத் திருவிளையாடல் கதை நமக்குத் தெரிவிக்கிறது.
அடுத்தவர்கள்மீது கூச்சப்படாமல் பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகவாதிகளும் புராணங்களும் நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிற பாடங்கள்!