Sunday, February 1, 2015

இதோ... இன்று, இந்த நிமிடம்... கண்டிப்பாய் ஜெயிப்போம்

சமீபத்தில், 'டிவி'யில் குட்டீஸ்களுக்கான ஒரு நிகழ்ச்சி. அதை தவறாமல் பார்த்து விடுவேன். 

அந்த நிகழ்ச்சியில், ஒரு கணவன் - மனைவி; இரு பெண் பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளையிடம், வீட்டில் அம்மா - அப்பா நடந்து கொள்ளும் விதம் பற்றி கேட்டுக் கொண்டே வந்தனர்.

'இரண்டு ஆண்டிற்கு முன்பெல்லாம் அப்பா குடித்து விட்டுத்தான் வருவார்; இப்போது அப்படியில்லை. சீக்கிரமே வீட்டிற்கு வந்து விடுகிறார். கோவிலுக்கு மாலை போட்டுக் கொள்கிறார். எங்கள் அம்மா சந்தோஷப்படுகிறார்' என்று கூறியவுடன் நமக்கும் சந்தோஷம் ஏற்பட்டது.

அந்த அப்பாவிடம், 'எப்படி குடியை விட்டீர்கள்? ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், நம்அனைவருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தக் கூடியது தான். 

'இல்லைங்க; அந்த எண்ணம் வராதபடி, வேறு வேறு வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நேரமே இல்லை என்கிற மாதிரி, ஒரு, 'பார்ட் டைம்' வேலைக்கும் போக ஆரம்பித்தேன். குடிக்கணும்  அப்படின்னு தோணுற அளவுக்கு கூட நான், 'ப்ரீ'யாக  இல்லைங்க' என்று கூறியதும், மெத்த படித்த மனிதர்களின் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், வீர வசனங்கள், அறிவுரைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகி விட்டதாகவே தோன்றியது.

மனம் அடங்கவே அடங்காது ஒரு காரியத்திலிருந்து, ஒரு பழக்கத்திலிருந்து,ஒரு நட்பிலிருந்து, ஒரு உறவிலிருந்து வெளியில் வரணும் என்றால், இவற்றையெல்லாம் பற்றி யோசிக்கக் கூட நேரம் இல்லை என்ற மாதிரி, நம்மை பல விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளணும்ங்கற ஒரு பெரிய செய்தியை, சும்மா போகிற போக்கில் அவர் சொன்னதாக எனக்குப் பட்டது.

சொல்வது மிக மிக எளிது; ஆரம்பத்தில் செயல்படுத்துவது, மிக மிக கடினம். ஒரு நெருப்பு உஷ்ணம் வயிற்றில் சுழலும்; ஒரு காரியத்திலும் மனம் செலுத்த முடியாது; மனம் அடங்கவே அடங்காது. அந்த காரியத்தை, உடனே, இப்பவே எப்படியாவது செய்தே ஆகணும்; இல்லையென்றால், செத்தே விடலாம் என, தோன்றும். 

நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்... போதை ஊசி போடலைன்னா, மதுவை குடிக்கலைன்னா, கஞ்சா அடிக்கலைன்னா பிதற்ற ஆரம்பித்து, ஆங்காரமாக, அடங்காத வெறி கொண்டவர்கள் போல் நடக்க ஆரம்பித்து விடுவர். எம்மாதிரி, 'கவுன்சிலிங்' கொடுத்தாலும், அப்போதைக்கு மீண்டு வந்தது போல தான் தோன்றும். ஆனால், அந்த எண்ணமே வராதபடி, வேறு வேறு வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஒன்று தான் இதற்கான தீர்வு என, நிரூபிக்கப்பட்டுள்ளது. 

'இந்த காரியம் கெட்டது; இதன் விளைவுகள் விபரீதமானவை. வயிற்றில் எரியும் இந்த ஜுவாலை, நம்மை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சாகடிக்கக் கூடியது' என்பதை யோசித்து, புரிந்து கொள்வது ஒரு வகை. அதே ஜுவாலையை மனதில் ஏற்றி, நம்மை ஓய்வில்லாதபடி, யோசிக்க நேரமே இல்லாதபடி, உபயோகமான காரியத்தில் கவனம் வைக்கும்படி மாற்றிக் கொள்ள முயலுவது மற்றொரு வகை. 

நாம் இதை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறும் போது, இதன் வீரியம் தெரியாது. நமக்கும் கண்டிப்பாக இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கும். உதாரணமாக, ஒரு நட்பிலிருந்து வெளியில் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்நட்பின் வீரியம், நம்மை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும்; எப்படி வெளியில் வருவது என, தவியாய் தவித்துக் கொண்டிருப்போம். கண்டிப்பாய் ஜெயிப்போம்.

எல்லாரும் கூறும்படி தியானம், பயிற்சி, ஆன்மிகம், இடமாற்றம் என, பல வழிகளை பின்பற்றினாலும், அந்த கணவர், இரு பெண் குழந்தைகளின் தகப்பன், ஒரு டீக்கடை நடத்தும் பெரிய படிப்பறிவு இல்லாத ஒரு பாமரர் கூறியது தான், எனக்கு சரியாக இருக்கும் எனப்பட்டது.

நம் பிரச்னை என்ன என்று நின்று நிதானித்து யோசிக்க கூட நேரமில்லை என்கிற மாதிரி, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது, வயிற்றில் உருளும் ஜுவாலை நம் இதயத்திற்கு இடம் மாறி, ஒரு வெறியை ஏற்படுத்தி, இந்த இக்கட்டிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை, கண்டிப்பாக ஏற்படுத்தும்.

என்னவாகி விடப் போகிறது... இந்த உலகம் அழிந்து விடுமா என்ன? நம்மை இந்த மக்கள் கூட்டத்தில், காணாமல் போக்கி விடுமா என்ன? ஒன்றுமே ஆகாது. 

நம் எண்ணங்களை, வார்த்தைகளை நாம் ஒழுங்குப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணமே, எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி, எண்ணிட இனிதே பயக்கும். சரிப்படுத்த ஆரம்பித்த உடனேயே, நாம் அப்படியே 'சூப்பர்மேன்' ஆகி விட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எண்ணங்களை சீர்படுத்த சீர்படுத்த, அது ஒரு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்; அப்படியே அதை பிடித்துக் கொள்ள வேண்டும். எக்காரியத்திலும், நம் மனதை அடக்க நினைத்தால் அலையும். கண்டிப்பாக, நல்ல பண்புள்ள வெற்றிக்கான பாதையில் நடக்க, நமக்கான ஒரு வாய்ப்பு இருக்கும். இதோ... இன்று, இந்த நிமிடம் நடக்க ஆரம்பிப்போம்... கண்டிப்பாய் ஜெயிப்போம்!

- ம.வான்மதி (from Dinamalar 01-02-2015)