Sunday, May 31, 2015

பொது இடங்களில் இலவச வைஃபை... தகவல்கள் ஜாக்கிரதை!

ன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தில் இலவச வைஃபை கிடைப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், இதை பயன்படுத்துபவர்களின்  மெயில் விவரங்கள், வங்கி சார்ந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்றவற்றை திருடுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்த இலவச வைஃபையை பயன்படுத்தும்போது நாம் பிரச்னையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார் இம்பைகர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் பிரிவின் தலைமை மேலாளர் லட்சுமி நரசிம்மன். அவர் கொடுத்த தெளிவான விவரங்கள் இங்கே உங்களுக்காக...

ஆன்டெனாவுக்குள் டெக்னிக்கல் குறைபாடு!

"இன்றைய நிலையில் பொது இடங்களில் உள்ள வைஃபையை பயன்படுத்துகிறவர்கள் பலரின் செல்போனில் வைத்திருக்கும் முக்கிய பல விஷயங்கள் திருடு போவது வழக்கமான விஷயமாகி விட்டது. வைஃபை ஆன்டெனாவுக்குள் இருக்கும் ஏதேனுமொரு டெக்னிக்கல் குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதனுள் எளிதாக ஹேக்கர்கள் உள்நுழைந்துவிடுகிறார்கள். அதன்பிறகு அந்த வைஃபை முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதால், அதைப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் எளிதாகத் திருடப்படுகின்றன.

பொது இடங்களே இலக்கு!

ஹேக்கர்கள் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் உள்ள வைஃபைகளைக் குறி வைப்பதற்கான காரணம், அந்த இடங்களில்தான் மக்கள் நடமாட்டமும், செல்வாக்குமிக்கவர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். தவிர, பொது இடங்களில் உள்ள வைஃபை மேலாண்மை பாதுகாப்பு (அ) பராமரிப்பு குறைவாகவே இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இந்த இடங்களில் தினமும் பல ஆயிரம் பேர் நடமாடுவதால், இந்தத் திருட்டு வேலைகளை யார் செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டுதான் ஹேக்கர்கள் களத்தில் இறங்கி தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொள்கிறார்கள்.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் வைஃபை ஆன்டெனாக் களில் உள்ள குறைபாடுகளால் மட்டும்தான் தகவல்களைத் திருடமுடியும் என்பதில்லை. நம்மிடம் இருக்கும் லேப்டாப், ஸ்மார்ட் போன்களை வைத்தும் பொது இடங்களில், அந்த இடம் சார்ந்த பெயர்களிலேயே புதிதாக வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கி பொறி வைப்பதன் மூலம் அதில் விழும் நூற்றுக்கணக் கானவர்களின் தகவல்களைத் திருட முடியும்.

செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

கூடுமானவரை பொது இடங்களில் இலவச வைஃபைகளைப் பயன்படுத்து வதைத் தவிருங்கள். இலவச வைஃபைக்கு ஆசைப்பட்டு, மதிப்புமிக்க தகவல்களை இழக்காதீர்கள்.

பொது இடங்களில் உள்ள இலவச வைஃபைகளை பயன்படுத்தி ஃபைனான்ஷியல் செயல்பாடுகள், அதாவது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் செய்வது, ரயில்/விமான நிலையங்களுக்குள் அமர்ந்துகொண்டு பயண டிக்கெட்டுகளை நெட்பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த வசதியைப் பயன்படுத்த நேர்ந்தால், இணைய வசதி தேவைப்படும் நேரத்துக்கு மட்டுமே தங்களின் லேப்டாப் மற்றும் இதர கேட்ஜெட்டுகளை வைஃபை மூலம் இணைத்துக் கொள்ளுங்கள். தேவை முடிந்ததும் வைஃபை-ஐ உடனே துண்டித்துவிடுவது நல்லது.

இலவச வைஃபையில் https என்கிற புரோட்டோகால் (Protocol) கொண்ட வலைதளங் களை மட்டுமே பயன்படுத்துங்கள். வங்கிகள் சார்ந்த இணைய தளங்கள், ஜிமெயில், யாஹூ போன்ற மெயில்கள் https கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால், எல்லா வலைதளங்களும் பாதுகாப்பு அதிகமுள்ள இந்த வகை புரோட்டோகால் அல்லாமல் http என்ற புரோட்டோகால் கொண்டதாக இருக்கும். இந்த வகை புரோட்டோகால்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால், இந்த போர்ட்டல் மூலமாக இயங்கும் வலைதளங்களை இலவச வைஃபைகளைப் பயன்படுத்தும் போது தவிர்த்து விடுங்கள்.

இலவச வைஃபை வசதியை  பொழுதுபோக்குவதற்காக, இணையம் வழியாக வீடியோக்களைப் பார்ப்பது, செய்திகளைப் படிப்பது, பாடல்களைக் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் கள். இலவசமாக வைஃபை கிடைக்கும்போது பயன்படுத்தி னால் என்ன தப்பு என்று நினைப்பதே இவர்களின் மனநிலையாக இருக்கிறது.  ஆனால், அது நம்பகத்தன்மை உடையதா என்பதைப் பார்ப்பது இல்லை. இந்த மனநிலை எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது.

இதுபோன்று பொது இடங்களில் உள்ள போலியான அல்லது பாதுகாப்பு குறைந்த இலவச வைஃபை இணையத் துடன் கேட்ஜெட்டுகள் தொடர்ந்து இணைந்திருப்பின் முக்கியமான, முக்கியமில்லாத அனைத்து விஷயங்களும் களவாடப்படும்.

வெகுதூர பயணத்துக்குத் தயாராகிறீர்கள் என்றால், அந்தப் பயணத்துக்குத் தேவையான உடைமைகளை எடுத்துவைத்துக் கொள்வதுபோல, பாக்கெட் இன்டர்நெட் வசதியையும்    கேட்ஜெட்டுகளுக்கு போட்டு வைத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.

அலுவலக வேலையாக அல்லது சொந்த வேலையாக ஓரிரு வாரங்கள் வெளியூரில், வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கும் சூழ்நிலை உருவானால், அங்கு கிடைக்கும் வைஃபை குறித்த பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் அங்குள்ள வைஃபை இணையத்தைப் பயன்படுத்தும் போது VPN (Virtual Private Network) என்கிற பாதுகாப்பான டெக்னாலஜி மூலமாகவே பயன்படுத்துங்கள். இப்படி செய்யும்போது யாராலும் தகவல்களை அவ்வளவு எளிதாகத் திருடிவிட முடியாது.

இப்போது ஜிமெயில் முதற்கொண்டு நெட்பேங்கிங் வரை OTP (One Time Password) சேவை இருப்பதால், இந்தச் சேவையை உங்களது செயல்பாடு களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டு, வலைதளங்களில் பதியப் படுவதால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இன்றைய நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அப்ளிகேஷன்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதனால் வலைதளங்களைப் பயன் படுத்தாமல், இலவச வைஃபைகளைப் பயன்படுத்தி ஆப்ஸ்களை இயக்கும்போது, ஆப்ஸ் போலி இல்லாமல் பாதுகாப்பானதாக இருக்கும் பட்சத்தில் தகவல்கள் திருடு போக வாய்ப்புகள் குறைவே. காரணம், அந்த ஆப்ஸ் மீதான பாதுகாப்புக்கு அந்தந்த நிறுவனங்கள் அதிக அக்கறையைச் செலுத்தும்.

Intrusion Detection System (IDS) சாஃப்ட்வேர்களை லேப் டாப்பிலும், Intruder Detection அப்ளிகேஷன்களை ஸ்மார்ட் போன்களிலும் வைத்திருப்பது அவசியமாகும். இந்த சாஃப்ட்வேர் மற்றும் அப்ளி கேஷன்கள் பொது இடங்களில் புதிதாக ஒரு வைஃபை ஹாட்ஸ்பாட் கேட்ஜெட்டுகளை ஸ்கேன் செய்ய நினைத்தால், அதை உடனே நமக்கு குறுஞ் செய்திகளாக அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன.

எனவே, பொது இடங்களில் வைஃபை வசதியை எச்சரிக்கையாக கையாளுங்கள்!