Tuesday, June 30, 2015

வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்!

வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்!

பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஆபரணம் என்பதற்கு மேலாக, உணர்வுடன் கலந்த விஷயம்!

''வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர். வளையல் அணிவதால் பெறும் மருத்துவப் பலன்கள் நிறைய!'' என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா, அவற்றை விளக்க விளக்க... சுவாரஸ்யமானோம்!

''வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.

இப்போது பல வடிவங்களில் வளையல்கள் கிடைக்கின்றன. ஆனால், பாரம்பர்ய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்கக் குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.

தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது பரிந்துரைக்கத்தக்கவை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது. 

`சீ ஷெல்' (சிப்பி, கிளிஞ்சல்) வளையல் கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து  நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை'' 


கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிய வலியுறுத்தப்படுவதன் அறிவியல் காரணம் ''கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம், ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல மூளை செயல்பாட்டுடன் வளரும். பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம்.  குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.  பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும்'' 


வளையல்களை எப்படி அணிய வேண்டும். ''மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சின்னதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஃபேஷனுக்காக ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில், மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்துக்கு உள்ளது என்பதால்தான் மருத்துவமனைகளில் பச்சை நிறத்தைப் பயன் படுத்தியிருப்பார்கள்.

ஊதா வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பர்பிள் வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும். மஞ்சள் நிற வளையல்கள், பாசிட்டிவ் எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்ட விடாது!'' 

இனி, ஆரோக்கியத்தை நினைத்தும் அணிவோம் வளையல்!