Saturday, July 4, 2015

கருத்து மோதல்களை கையாளும் விதம்!

என் நண்பர்கள் இருவர், இரு வேறு ரசனை உள்ளவர்கள். ஒருவர் கமல் ரசிகர்; மற்றவர் ரஜனி ரசிகர். நாங்கள் மூவரும் சந்திக்கும் போது, இந்த மாறுபட்ட ரசனையால், இருவரும், பலமுறை கருத்தால் மோதிக் கொள்வர்.

கல்லூரியில் என்னுடன் ஒன்றாக பயின்றவர்கள் என்பதால், இவர்களது உரையாடல் சூடேறும் போது, 'சரி சரி விடுங்க... உங்களுக்கு இதே வேலையாப் போச்சு...' என, அதில் நீர் ஊற்றுவேன்.

'வாழ்வின் வேகமான ஓட்டத்தில் எப்போதாவது தான் சந்திக்கிறோம்; நட்பு பலப்படும்படி பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, ஏன் இப்படி அடிச்சுக்கிறீங்க...

'உனக்கொரு ரசனை என்றால், அவனுக்கென்று ஒரு ரசனை. அதனால், ரஜினி ரசிகனான நீ, கமலின் பிளஸ் பாயிண்டுகளையும், கமல் ரசிகனான அவன், ரஜினியின் பிளஸ் பாயிண்டுகளைப் பற்றிப் பேசுங்க. எதிராளி தனக்கு பிடித்தவர்களைப் பற்றி உயர்வாக பேசுவதைக் கேட்பது எவ்வளவு சந்தோஷம்... இதை விட்டு, ஏண்டா இப்படி அபூர்வமா நடக்குற சந்திப்புல கூட சண்டைபோட்டுக்கிறீங்க...' என்பேன்.

ஒற்றைப் பிரியாக இருந்த அவர்களது உறவு, இப்போது தாம்புக் கயிறாக ஆகிவிட்டதில் எனக்கு சந்தோஷம்.

கருத்து வேறுபாடுகளை, மன வேறு பாடுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நானும், என் சகோதரர் ரவி தமிழ்வாணனும் ஒற்றுமையுடன் இருப்போம். கூட்டுக் குடும்பம்; கூட்டுத்தொழில். ஆனாலும், எங்களுக்குள் கருத்து மோதல்கள் உண்டு. எங்கள் இல்லத்திலிருந்து தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது கூட, இந்த மோதல் ஆரம்பிக்கும். நான், 'சிக்னல் இல்லாத பாதையாக உள் சாலைகளில் செல்வோம்...' என்பேன். அவரோ, 'பிரதான சாலைகளின் வழியாகத் தான் போக வேண்டும்...' என்பார்.
ஒருநாள், இதற்கு ஒரு தீர்வு கண்டோம். நான் ஓட்டினால், சிக்னலற்ற பாதை; அவர் ஓட்டினால் பிரதானச் சாலை. ஓட்டுனர் ஓட்டினால், யார் முதலில் சொல்கின்றனரோ அந்தப் பாதை. 

மற்ற விஷயங்களிலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எங்கள் உரையாடல்களை எவரேனும் ஒளிந்திருந்து கேட்டால், 'இவனுங்க ௌல்லாம் ஒற்றுமை சகோதரர்களாம்; அடப்போங்கப்பா...' என்பர்.
அந்த அளவு எங்களுக்குள் வாக்குவாதங்கள் நிகழும்; ஆனால், இதயத்தில் வருத்தங்களையோ, சூட்டையோ ஏற்றிக் கொள்ள மாட்டோம்.

மனமும், மனசாட்சியும் மோதிக் கொள்ளும்படியான எண்ணற்ற அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்குமே... அப்படிப் பட்டதாகத் தான் இவ்வாக்குவாதங்கள் இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் சொந்த கருத்துகள் இருக்கும். அவற்றுக்கு மதிப்பு தந்து, நியாயங்களின் அடிப்படையில் சம்மதிக்கவோ, பிரியத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுக்கவோ வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை சரிவர கையாள கற்றுக் கொண்டால், நட்பு, உறவு மற்றும் தொழில் ஆகிய மூன்றும் அமோக விளைச்சலை தரும். மாறாக, கருத்துகளை நசுக்கப் பார்த்தால், அது கருகலில் தான் முடியும்.

வாழ்வில் தனிப்பயணம் ஒன்று தான்; அதுவரை, அனைவரோடும் இணைந்தும், இசைந்தும் தான் பயணப்பட வேண்டும்! 

லேனா தமிழ்வாணன்