Sunday, July 19, 2015

சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்போது போனில் ஜீரோ அழுத்தினால் கியாஸ் மானியம் ரத்து‏






செல்போன் மற்றும் தரைவழி போன்களில் இருந்து தானியங்கி முறையில் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது அமுலில் இருந்து வருகிறது.
 
முன்பதிவு செய்வதற்கான எண்ணுக்கு பேசும்போது அதில் வரும் தகவல்களுக்கு ஏற்ப பட்டனை அழுத்தி கியாஸ் சிலிண்டரை பெறுகிறோம்.
 
வழக்கமாக புக்கிங் சேவை போன் இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் முன்பதிவு செய்ய எண்.1–ஐ அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும். நாம் எண்.1ஐ அழுத்தினால் கியாஸ் பதிவு எண் சொல்லப்பட்டு நமது மொபைலுக்கு அந்த எண் எஸ்.எம்.எஸ். மூலம் வரும். அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் அனுப்பப்படும். கியாஸ் சிலிண்டர் சப்ளை ஆனதும் அதற்கான மானியத் தொகை நமது பாங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
இந்த நிலையில் வசதி படைத்தவர்கள் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் ஏராளமானோர் கியாஸ் ஏஜென்சிக்கு வந்து கியாஸ் மானியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுப்பவர்களுக்கு வசதியாக முன் பதிவு செய்யும் போதே மானியத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை எண்ணை நிறுவனங்கள் அமுல்படுத்தி வருகின்றன.
அதன்படி செல் போனிலோ அல்லது தரை வழி போனிலோ கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது ஜீரோ பட்டனை அழுத்தினால் கியாஸ் மானியம் ரத்தாகி விடும்.
 
முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய எண்.1ஐ அழுத்துங்கள் என்ற தகவல் முதலில் வரும். அதன்படி வாடிக்கையாளர்களும் சவுகரியமாக எண்.1ஐ அழுத்தி சிலிண்டரை முன்பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது முதலில், கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவை அழுத்தவும் என்று வருகிறது. அதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1ஐ அழுத்தவும் என்று வருகிறது.
இதன் மூலம் நாம் அவசரப்பட்டு தவறுதலாக ஜீரோவை அழுத்தி விட்டால் நமது கியாஸ் மானியம் ரத்தாகி விடும். இந்த நடைமுறையை பற்றி தெரியாதவர்கள் மற்றும் போன் பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.
 
ஜீரோவை தவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள போனில் வாய்ப்பு இல்லை. பின்னர் மீண்டும் மானியத்தை பெற வேண்டும் என்றால் கியாஸ் ஏஜென்சியைத்தான் அணுக வேண்டும்.
இந்த நடைமுறையால் கியாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நடைமுறை சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் கியாஸ் ஏஜென்சிக்கு வந்து எழுதி கொடுத்து மானியத்தை ரத்து செய்ய அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால் பலர் மானியத்தை ரத்து செய்ய விரும்பவில்லை. அவர்களின் வசதிக்காக போனில் ஜீரோ பட்டனில் மானியம் ரத்து தகவலை சேர்த்துள்ளோம். மானியத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இதில் சிரமம் மற்றும் நடைமுறை சிக்கல் இருந்தால் அதை நிவர்த்தி செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்றார்.