Wednesday, June 15, 2016

அவரவர் கையில்.

 
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.என்றார்.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''என்று கத்திக் கொண்டிருந்தார்.

உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி, இதிலிருந்து என்னை எப்படியாவது என்னை விடுவித்து விடு என்றார்.

அதற்கு குடிகாரன், இவரென்ன முட்டாளா என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.

இது போல நாமும், கோபம், பொறாமை, சுயநலம், பழிவாங்கும் எண்ணம் எனும் தூண்களை இறுகப் பிடித்து வைத்திருக்கிறோம். விடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில்.