Thursday, August 25, 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

                                    

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.

1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.

2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.

3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்

பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்' எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.

4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.

5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​

`கலர் டெம்ப்பரேச்சர்' என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.

6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.

7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​

8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.

9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.

10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.