Thursday, September 15, 2016

உடலைக் காக்கும் உணவு விதிகள்


பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக்  குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். 

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும்.  புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள்.  இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


 
சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.
 
உங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின்,  அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள்  ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.

தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத்  தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள்  உள்ளிட்ட உணவுகளை  எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும்.  செரிமானம் தாமதப்படும்.

அதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத்  தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும். பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப்  பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.


கொழுப்பைக்  கரைக்க சில வழிமுறைகள்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள  கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
 
காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

உணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்

சாப்பிட்டதும், ரத்த ஓட்டம்  நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன்  வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க,  ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப்  பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.  

 சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
 
சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.
 
சாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 
சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட  உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.
 
சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.