Sunday, September 25, 2016

ருத்ராட்சத்தின் அவசியம்

ருத்ராட்சத்தின் அவசியம்

ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். ருத்ராட்ச கொட்டையும், விபூதிப் பட்டையும் சிவனடியார்களின் சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமைகளை அறிந்தவர்கள் சிலரே!

சிவனுறையும் கைலாசம் எனும் இமய மலைப் பகுதிகளில் மட்டுமே இது விளைகிறது. காட்டுப் பயிரான இது, தோட்டமிட்டு வளர்க்கப்படுவதில்லை.
ஆதிகாலத்தில், முனிவர்கள் மட்டுமே இதை அறிந்து, பயன்படுத்தி வந்தனர். மூலிகை வகையைச் சேர்ந்த ருத்ராட்சம், மனிதர்களுக்கு மன அமைதியை தருகிறது. மூச்சுக் கோளாறு, மூட்டு வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து குணமளிக்கிறது.

துறவறம் மேற்கொள்வோர், உணர்ச்சி ஏற்படாமலிருக்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர். ஆண்மை உணர்வை ருத்ராட்சம் குறைத்து விடும். இதனால், இதைக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போர் அணியலாகாது; சிறு குழந்தைகளும், முனிவர்களும் அணியலாம்.

ருத்ராட்சக் கொட்டைகளை, இரவில், செப்புப் பாத்திரத்தில், தண்ணீரில் ஊற வைத்து, காலையில், வயிற்று கோளாறு உள்ளவர்கள், அந்த நீரை அருந்த, அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.

ருத்ராட்சத்தை, 24 நாட்கள் நல்லெண்ணெயில் ஊற வைத்து, பின், அந்த எண்ணெயை மூட்டுப் பகுதிகளில் தேய்க்க, மூட்டு வலி குணமாகும்.
ருத்ராட்சம் முதுமையைத் தவிர்த்து, இளமையைத் தரும் இனிய மருந்து என்று ஏட்டுச் சுவடிகளில், குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறுகளை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது.

பித்தம், கபம், வாத குணங்களைக் கட்டுப்படுத்தவும், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தவும் ருத்ராட்சத்திலிருந்து, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.

சீனாவின் அக்குபஞ்சர் முறையும், ருத்ராட்சமும் ஒரே வகையைச் சேர்ந்தவை. இவை இரண்டுமே, மனித நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கிறது என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ருத்ராட்சத்தில், 38 வகைகள் உள்ளன. 'ஒரு முக ருத்ராட்சம்' என்பது உயர் வகையைச் சேர்ந்தது. வட மாநிலத்தவர் குடும்பங்களில், தங்கள் மூதாதையர் பயன்படுத்திய ருத்ராட்ச மாலைகளை, பூஜையில் வைத்து காலம் காலமாகப் போற்றி வருகின்றனர்.

ஒரு முக, மூன்று முக, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு முக ருத்ராட்சம் என்று, பல வகைகள் உள்ளன.

நவமுக ருத்ராட்சம் எதிரிகளை வீழ்த்தி, வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெற, இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வர் சிலர்.

ருத்ராட்சங்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவற்றை, அமாவாசை, பவுர்ணமி, சூரிய, சந்திர உதயம் இவற்றை ஆதாரமாகக் கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி துறவிகள் அணிகின்றனர்.

பூமிக்கும், மோட்ச உலகிற்கும் இடையிலான தொடர்பு சாதனமாக, ருத்ராட்சத்தை நம்புகின்றனர் சாமியார்கள்.

ருத்ராட்சங்களில், தரக்குறைவானவைகளும் உண்டு. அவற்றை அணிவதால், முழுமையான பலன் கிடைப்பதில்லை. தரமற்ற ருத்ராட்சத்தை கண்டறிய, ருத்ராட்சத்தை தண்ணீரில் போட்டால் தரமற்றவை மிதக்கும்; தரமானவை நீரில் அமிழ்ந்து விடும். அத்துடன், எளிதில் விரிசல் விட்டு விடும்; உயர்ந்த வகை, விரிசல் விடாது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ருத்ராட்ச மாலைகள் ஏற்றுமதி ஆகின்றன.