Friday, November 4, 2016

அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க வழி!

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.

மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?

நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும்
சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்.

பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.

செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது.

சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை : சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.

திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல்,
வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது.
செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல்,
புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை : மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல்,
நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும்,
இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள். 

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்;

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். 

சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-பரணி, கார்த்திகை,மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம்,கேட்டை, பூரட்டாதி

திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி

செவ்வாய்-உத்திராடம்,திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்

புதன்-அவிட்டம், அசுபதி, பரணி,கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்

வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி

வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்

சனி-ரேவதி, புனர்பூசம், பூசம்,உத்திரம், அஸ்தம், ரேவதி

ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

திதிகள் :
திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

1. பிரதமை, 2. துவிதியை, 3.திருதியை, 4. சதுர்த்தி, 5.பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 
11. ஏகாதசி, 12.துவாதசி, 13. திரயோதசி, 14.சதுர்த்தசி, 
15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை,பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள் :
ஞாயிறு-அஷ்டமி,
திங்கள்-நவமி,
செவ்வாய்-சஷ்டி,
புதன்-திரிதியை;
வியாழன்-ஏகாதசி,
வெள்ளி-திரயோதசி,

சனி-சதுர்த்தசி திதி.

இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள் :
ஞாயிறு-சதுர்த்தசி,
திங்கள்-சஷ்டி,
செவ்வாய்-சப்தமி,
புதன்-துவிதியை,
வியாழன்-அஷ்டமி,
வெள்ளி-நவமி,
சனி-சப்தமி
மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.

வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.

வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, சப்தமி திதிகள்.

ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை,தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு . அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வளர்பிறை தேய்பிறை பஞ்சமி பிரதமை சஷ்டி அஷ்டமி சப்தமி நவமி சதுர்த்தசி தசமி பவுர்ணமி .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்:
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர்.

அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். 
இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.

நட்சத்திர பலன்கள் : பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல்
பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில்
வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப் பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள் :
பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில்
கணிக்கப்படுபவை.

பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.

அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

ராகுகாலம் : சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள்.

ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6.00 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9.00 மணி வரை
செவ்வாய் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12.00 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல்12.00 மணி வரை
சனி 9.00 மணி முதல்10.30 மணி வரை.

எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும்.