Wednesday, November 23, 2016

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.


===================


அப்பா கட்டிய

வீடாயிருந்தாலும்

அது நமக்கு

அம்மா வீடுதான் !


===================


அடுப்படியே

அம்மாவின்

அலுவலகம் !

அன்பு மட்டுமே

எதிர்பார்க்கும் சம்பளம் !


===================


காய்ச்சல் வந்தால்

மருந்து தேவையில்லை !

அடிக்கடி வந்து

தொட்டுப்பார்க்கும்

அம்மாவின் கையே

போதுமானது !


===================


இவ்வளவு

வயதாகியும்

புதுச்சட்டைக்கு

மஞ்சள்வைத்து

வருபவனைக்

கேலி செய்யும்

நண்பர்களே ..........

அது,

அவன் வைத்த

மஞ்சள் அல்ல !

அவன்,

அம்மா வைத்த

மஞ்சள் !

===================


டைப்பாய்டு வந்து

படுத்த அம்மாவுக்கு

'சமைக்க முடியவில்லையே'

என்கிற கவலை !


===================


'அம்மா தாயே'

என்று

முதன் முதலில்

பிச்சை கேட்டவன்

உளவியல் மேதைகளுக்கெல்லாம்

ஆசான் !


===================


எந்தப் பொய்

சொல்லியும்

அம்மாக்களை

ஏமாற்றிவிடமுடியும்

'சாப்பிட்டு விட்டேன் '

என்கிற

அந்த ஒரு பொய்யைத்தவிர !

===================


அத்தி பூத்தாற்போல

அப்பனும்

மகனும்

பேசிச்சிரித்தால்

விழாத தூசிக்கு

கண்களை தேய்த்துக்கொண்டே

நகர்ந்து விடு்கிறார்கள்

அம்மாக்கள் !


===================


வெளியூர் செல்லும்

பிள்ளைகளின்

பயணப்பைக்குள்

பிரியங்களைத்

திணித்து வைப்பவர்கள்

இந்த அம்மாக்கள் !


===================


பீஸ் கட்ட

பணமென்றால்

பிள்ளைகள்

அம்மாவைத்தான்

நாடுகின்றன ........

காரணம்,

எப்படியும்

வாங்கிக் கொடுத்துவிடுவாள் !

அல்லது

எடுத்துக் கொடுத்துவிட்டு

திட்டு வாங்கிக்கொள்வாள் !


===================


வீட்டுக்குள்

அப்பாவும்

இருந்தாலும்

அம்மா என்றுதான்

கதவு தட்டுகிறோம் !


===================


அம்மாக்களைப்

பற்றி

எழுதப்பட்ட

எல்லா

கவிதைகளிலும்

குறைந்தபட்சம்

இரண்டு சொட்டுக்கண்ணீர்

ஈரம் உலராமல் !


===================


அகில உலக

அம்மாக்களின்

தேசிய முழக்கம்

இதுதான் ..........

" எம்புள்ள

பசி தாங்காது! "