Sunday, December 18, 2016

நீனே…… அனாதபந்து!

 
நீனே…… அனாதபந்து!


நம் இறந்தகாலமும், எதிர்காலமும் நம் கையில் இல்லை. நிகழ்காலத்தையும் பகவான் கையில் ஒப்படைத்துவிட்டால், இனி நாம் அவனுடைய பொறுப்பாகிவிடுவோம். அப்படியில்லாமல், இறந்தகாலத்தில், நிகழ்காலத்தை பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தை மட்டுமே பார்த்து வாழ்ந்து, முடிவில் ஶூன்யமான மனஸுடன் அல்லாடும் பல கோடிப்பேரில் பெரியவாளின் ஒரு பக்தரும் இருந்தார்.

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates இவற்றுடன் வேலைக்கு சேர்ந்தவர், ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார்.

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் ஶூன்யமாகவே இருந்தது.

வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரைக்ஷணம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார்.

அதன் பலன்?….

Retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்…. எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டது!

பெற்ற ஒரே பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மர்யாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!

பிள்ளை நல்ல உத்யோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்?

மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்….

யாருக்கு?…….

பிள்ளைக்கு!

புருஷனைப் பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, அவர்கள் பெற்ற பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேலோ… அபரிமிதமான கரிஸனம்!

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார்.

யார் வழி காட்டுவார்கள்?

"நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார்.

மனஸுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று ஐம்பத்தெட்டு வர்ஷம் கோட்டை விட்டாச்சு!….என்று ஒரே குழப்பம். 

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தவுடன், அருகில் வந்து மிகவும் பவ்யமாக நின்றார்.

"பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஶனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்ணம் போய்ட்டு வந்தோம்…"

"காவேரி……. உற்பத்தி ஸ்தானத்லயும், ஸங்கமத்துலயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?"

"ஆமா….."

"காவேரி, ரொம்ம்…ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?"

"அகண்ட காவேரி"

"அது எங்க இருக்கு?"

"திருச்சி பக்கத்ல …"

"அந்த ப்ரதேஸத்துக்கு என்ன பேரு?"

பக்தர் முழித்தார்!…..

"மழநாடு…ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"

"எங்க தாத்தா சொல்லுவார்"

"காவேரி தீரந்தான்… மழநாடு! ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு! ஒன்னோட தாத்தா இருந்த எடம்"

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. இத்தனை வர்ஷங்களாக, தான் இருந்த இருப்பே அவருக்கு தெரியவில்லை. இதில் தாத்தா இருந்தது எப்படித் தெரியும்? …… நெளிந்தார்.

ஆஹா! அடுத்து இவருக்குள்ளும் இருக்கும் அந்தர்யாமியான பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

"நா….சொல்றபடி பண்ணு!….பேசாத, திருச்சில ஜாகை வெச்சுக்கோ! தெனோமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஶ்வரர்,அகிலாண்டேஶ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணஶீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்…. இப்டியா தர்ஶனம் பண்ணிண்டு இரு!"

"தெய்வம் இருக்கிறதா? தெய்வம் பேசுமா?"…என்று ஸந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ… தெய்வம்! இதோ…. தெய்வமே பேசுகிறது பார் ! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம்.

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். மலைக்கோட்டை தெருவில் அம்ஸமான வீடும் கிடைத்தது!

ஒட்டாத மனங்களிடம் ஒட்டிக் கொள்ள வேண்டிய முயற்சியில் இனியும் க்ஷணங்கூட வீணாக்காமல், பெரியவாளே கதி! என்று, அவருடைய சரணகமலங்களை அடைய வேண்டி கொஞ்சம் யத்தனப்பட்டாலும் போறுமே! அந்த மஹா காந்தம், நம்முடைய சின்ன இரும்பு மனஸை தனக்குள் இழுத்துக் கொள்ளாதா என்ன?

மனஸில் பெரிய நிம்மதியோடு, பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அந்த பக்தர் அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.