Tuesday, January 31, 2017

சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..!

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்; நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இது, வளரவிடக் கூடாத பிரச்னை. வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும். 

 

சிறுநீரக பாதிப்பு

 

சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும். அந்த அறிகுறிகளில் சில...

சிறுநீர் பிரச்னை  
  
நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.    

வீக்கம் / அதைப்பு 

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.

சோர்வு / ரத்தசோகை

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

 

அறிகுறிகள் அறிகுறிகள்


தடிப்பு 

சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.

மூளையின் குறைந்த செயல்பாடுகள்

மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

குளிர்

ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.

மூச்சுத்திணறல் 

சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

முதுகுவலி 

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே  தெரியும்.

முதுகுவலி

 

குமட்டல் 

சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

சுவாசத்தில் வாடை

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுநீரகம் காப்பது, நம் ஆரோக்கியம் காப்பதின் அவசியமான முதல் படி!