Monday, January 23, 2017

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை!

  குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். 'வாவ் என் தங்கமா இவளோ சூப்பரா செஞ்சிருக்கு.. கங்கிராட்ஸ்" என்று குழந்தைகள் மகிழ ஆச்சர்யப்படுங்கள்.  

* பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடமாக எடுப்பதைவிட, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே அவர்கள் என்ன தவறு செய்தார்கள், அதை எப்படி செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுங்கள்.  

* எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்பது இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் அதிலேயே மூழ்கிவிட பெற்றோர்களான நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம். ஒன்றை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் நமக்கு, அச்சாதனங்களை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கட்டுப்படுத்தவும் செய்ய வேண்டும்.

* ஒரு வயதில் இருந்து குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசித்து காண்பியுங்கள். தினமும் இரவு படுக்கசெல்லும் முன் சில பக்கங்களையாவது வாசித்து காண்பிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். புத்தகம் விசாலமான அறிவை பெறச் செய்யும் என்பதை அவர்கள் உணர வையுங்கள்.

*  தினமும் ஒரு புது வார்த்தை கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய வேலைகளை அவர்களாக செய்ய பழக்குங்கள். இதில் ஆண்-பெண் பேதம் தேவையில்லை. பள்ளி முடிந்து வந்தவுடன் டிபன்பாக்ஸை எடுத்து சிங்கில் போடுவது, ஷூக்களை கழட்டி உரிய இடங்களில் வைப்பது, சாப்பிடும் முன் அதற்கான பொருட்களை பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்து வைப்பது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ள பழக்குங்கள். 

* உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். சித்தி, சித்தப்பா, மாமா என்று உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். நேரில் பார்ப்பது, போனில் பேசுவது என எது சாத்தியமோ அதை செய்ய வையுங்கள். அப்போதுதான் குழந்தைகளின் வானம் விரிவடையும். 

* குழந்தைகள் முன் உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். அவை ஃபேஷனாக, இதுவரை நீங்கள் உபயோகித்து வந்த அர்த்தமில்லாத வார்த்தைகளாக இருக்கலாம். உடனே சுதாரியுங்கள். இல்லையெனில் அவை நம் குழந்தைகள் மூலமாக வெளிப்படும்போது அவர்களை மட்டுமல்லாது அவை நம்மையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை உணருங்கள். 

* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எந்த சூழலிலும்  கடுமையான மனப்பாங்குடன் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் ஒரு தவறை செய்தாலும்கூட, அந்த தவறை இனி அடுத்த முறை குழந்தைகள் செய்யாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். 

* மற்றொரு மாணவரை உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம் தவிர, இன்னொரு மாணவருடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து, குற்றம் சாட்டுவது மிகவும் தவறு.

* குழந்தைகளின் கெப்பாசிட்டியை தெரிந்து கொள்ளுங்கள். அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். அதற்குபதில் கடல் தாண்ட சொல்லாதீர்கள். அப்போதுதான் அவர்களால் வெற்றியை அடைய முடியும்.